

நாற்பது வயதுப் பெண் ஒருவர் கால் வீக்கத்துக்கு சிகிச்சைப் பெற என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பிரச்சினை இருக்கிறது. மருத்துவரிடம் சென்று முறையாக அவர் சிகிச்சை பெறவில்லை.
‘ஏன்’ என்று கேட்டேன். ‘கால் வீக்கத்துக்கு ‘நீர்ப்பிணைப்பு’தான் (Edema) காரணமாக இருக்கும் என்று நினைத்துச் சிறுநீரைப் பிரியவைக்கும் மாத்திரைகளை நானே வாங்கிச் சாப்பிட்டு வந்தேன்.
அப்போதெல்லாம் கால் வீக்கம் குறைந்துவிடும். சில வாரங்கள் கழித்து வீக்கம் மறுபடியும் வரும். இப்போது சில வாரங்களாகக் கால் வீக்கம் குறைந்தபாடில்லை. முகமும் வீங்க ஆரம்பித்துவிட்டது. அதனால் உங்களிடம் வந்தேன்’ என்றார்.
அவர் சாப்பிட்ட மாத்திரை களைக் கவனித்தேன். அவற் றில் சிறுநீரைப் பிரிக்கும் மாத்திரைகள் மட்டுமல்ல, அழற்சி வீக்கத்துக்குப் பொதுவாக வழங்கப்படுகிற வலி மாத்திரைகளும் ஸ்டீராய்டு மாத்திரைகளும் இருந்தன.
நான் அவரைப் பரிசோதித்தேன். அவருக்குத் தொடக்கத்தில் ரத்த சோகை இருந்திருக்கிறது. அதனால் கால்கள் வீங்கியுள்ளன. அதற் கான சிகிச்சையை எடுக்காமல், அவராகச் சாப்பிட்ட பலவித மாத்திரைகள் அவருடைய சிறுநீரகங்களைப் பாதித்து விட்டன.
இதனால்தான் அவருக்குக்கால்களும் முகமும் வீங்கியுள்ளன. இந்தப் பெண்ணைப்போல், முறையான மருத்துவ ஆலோசனை இல்லாமல், கால் வீக்கத்துக்குச் சிறுநீரைப் பிரிக்கும்மாத்திரைகளைச் சுயமாகச் சாப்பிட்டு, தங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறவர்கள் நம்மில் நிறையப் பேர் உண்டு.
கால் வீக்கம் ஒரு நோயா?
கால் வீக்கம் என்பது ஓர் அறிகுறியே தவிர, நோய் அல்ல. சாதாரண ரத்தசோகையில் தொடங்கி இதயச் செயலிழப்பு, சிறுநீரகச் செயலிழப்பு என ஆபத்தான நோய்கள்வரை பல காரணங்களால் கால்கள் வீங்கலாம். அந்த வீக்கத்திலும் பல வகை உண்டு. சிலருக்கு ஒரு பாதம் மட்டுமே வீங்கும்.
பலருக்கு இரண்டு பாதங்களும் வீங்கும். பாதம் தொடங்கி கால் முழுவதிலும் வீக்கம் காணப்படலாம். வீக்கத்தின் மீது விரல் வைத்து அழுத்தினால் சிறு குழி விழலாம். வீக்கத்தில் வலி ஏற்படலாம். காய்ச்சல் வரலாம். வீங்கிய சருமம் சிவந்து காணப்பட லாம். இப்படிப் பல அறிகுறிகளும் சேர்ந்து கொள்ளலாம்.