

நவீன மருத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தாலும், சில நோய்கள் சார்ந்து மக்களிடம் கற்பிதங்கள் நிலவுவது குறைந்த பாடில்லை. அப்படியான கற்பிதங்கள், மாயைகள், கட்டுக் கதைகளை உடைக் கும் தொடர் இது.
வலிப்புக்குக் கம்பி
வலிப்பு நோய்க்கு மருத்துவரீதியாக எபிலெப்சி (Epilepsy) என்று பெயர். உலகில் 5 கோடிப் பேருக்கு வலிப்பு நோய் உள்ளது என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். இதில் சுமார் 80% பேர், பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில் வாழ்பவர்கள்.
வரலாற்றில் வலிப்பு நோய் பொ.ஆ.மு. (கி.மு.) 4000த்திலிருந்தே பதிவு செய்யப்பட்டுள்ளது. வலிப்பு ஏற்பட்டவருக்கு இரும்புக் கம்பி அல்லது சாவி வழங்கினால் வலிப்பு நிற்கும் என்கிற நம்பிக்கை இன்றும் இருக்கிறது. இது முழுக்கமுழுக்க அறிவியல் ஆதாரங்கள் ஏதுமற்ற கற்பிதம்.
வலிப்பு என்பது மூளையின் சிலபகுதிகளில் திடீரென ஏற்படும் மின் இயக்கச் சீர்கேட்டால் ஏற்படுகிறது. மூளையில் நரம்பு மண்ட லத்தைத் தூண்டும் உயிர் வேதி அமைப்பும், அளவுக்கு அதிகமாகத் தூண்டப்படும்போது அதை மட்டுப் படுத்தும் அமைப்பும் இணைந்து கைகோத்துப் பணிபுரிகின்றன. இந்த அமைப்புகளில் ஏற்படும் சரிசமமற்ற நிலை காரணமாக வலிப்பு ஏற்படு கிறது.
வலிப்பு ஏற்படும்போது உடலின் ஒரு பகுதியோ, ஒரு பக்கக் கை, கால் அல்லது இரு பக்கக் கைகள், கால்கள் அல்லது ஒட்டுமொத்த உடலும் வெட்டி வெட்டி இழுக்கும். வலிப்பு ஏற்படும்போது கூடவே மூர்ச்சை நிலை, மலம், சிறுநீர் கழித்தலும் நேரலாம். இதை ‘பரவலான வலிப்பு நோய்’ (Generalized seizure) என்றும் மூளையின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஏற்படும் வலிப்பை, ‘குறிப்பிட்ட இடத்தில் நேரும் வலிப்பு’ (Focal seizure) என்றும் அழைக் கிறோம்.
காரணங்கள்
மூளையில் ஏற்படும் அங்கரீதியான பாதிப்புகள், தலையில் காயம் ஏற்பட்டு மூளையில் பாதிப்பு ஏற்படுதல், மூளையில் புற்றுக்கட்டிகள், மூளை
அமைப்பில் உண்டாகும் பிறவிக் கோளாறுகள் போன்றவை வலிப்புக் கான காரணங்கள்.
மேலும் மூளையைப் பாதிக்கும் கிருமித் தொற்றுகள், தாழ் ரத்தச் சர்க்கரை நிலை (Hypoglycemia), தாழ் ரத்த சோடியம் நிலை, தொடர்ந்து மது அருந்துபவர்கள் திடீரென மதுவை நிறுத்தும்போதும், மன அழுத்த நிலைக்கு உட்கொள்ளும் மாத்திரை களை அளவுக்கு அதிகமாக உட் கொள்ளும்போதும், நெடு நாள்களுக்கு தூக்கம் தொடர்ந்து பாதிக் கப்படும்போதும், தன்னுடல் தாக்க நோய்களின் விளைவாகவும், மரபணுக்கள் வழியாகக் குடும்பத்தில் மூத்தோ ரிடமிருந்து வழித்தோன்றல்களுக்கு என்று பல காரணங்களால் வலிப்பு ஏற்படலாம். சிலருக்கு மேற்கூறிய காரணங்கள் ஏதுமின்றியும் வலிப்பு நோய் ஏற்படுகிறது.