

உலகம் முழுவதும் சுமார் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் ஏழை, வளரும் நாடுகளில் உள்ளனர். இந்தியாவில் சுமார் 1 - 1.5 கோடி பேருக்கு வலிப்பு நோய் பாதிப்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் வரும்? வலிப்பு என்பது நோயல்ல; அது நோயின் ஓர் அறிகுறி. சிலருக்கு மூளையில் உள்ள திசுக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவதால் வலிப்பு ஏற்படலாம். இன்னும் சிலருக்கோ உடல்நிலை பாதிக்கப்படும்போது வலிப்பு ஏற்படலாம்.
அதுமட்டு மல்லாமல் மூளையில் ஏற்படக்கூடிய கட்டிகள், மூளைத் திசுக்களைத் தாக்கும் கிருமிகள், மூளைக் காயங் கள், மூளைத் திசுக்கள் சிதைவதால் ஏற்படும் பாதிப்புகள், மூளை ரத்தக்குழாய் பாதிப்பு போன்றவற்றால் வலிப்பு ஏற்படலாம். மதுப் பழக்கம் மூலம் ஏற்படும் தலைக்காயங்கள், மூளையில் ஏற்படும் ரத்தக்குழாய் மாற்றங்களாலும் வலிப்பு ஏற்படலாம்.
குழந்தைகளுக்குப் பாதிப்பு: பிறவியிலேயே மூளையில் பிரச்சினை உள்ளவர்கள், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளும்கூட வலிப்பு நோய்க்கு ஆளாகலாம். பிறந்ததிலிருந்து 2 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்குக் கிருமித்தொற்று மூளையைத் தாக்கும் ஆபத்து உண்டு. இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வரும். குழந்தையின் ரத்தத்தில் சர்க்கரை, கால்சியம், மக்னீசியம், ‘பிரீடாக்சின்’ போன்ற சத்துக்குறைவு காரணமாகவும் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு வலிப்பு நோயில் முடியலாம்.