கவனச் சிதறல் ஏற்படுத்தும் மனச்சோர்வு | உள்ளங்கையில் ஒரு சிறை 16
ஜப்பானில் ஒரு நகைச்சுவைக் கதை உண்டு. ஜப்பானில் ஒரு பெண் தனது நண்பர்களோடு ஓர் உணவகத்துக்குச் சென்றிருந்தாராம். வழக்கம்போல் ஒவ்வொருவரும் தனது திறன்பேசிகளையே பார்த்தபடி சாப்பிட்டு முடித்தனராம். முடிக்கும் போதுதான் அப்பெண் அந்த உணவகத்தைப் பற்றித் தன் அலைபேசியில் படித்தார்.
அங்குள்ள ஒரு வகை மீன் உணவு உலகப் பிரசித்தி பெற்றது எனச் சொல்லப்பட்டிருந்தது. உடனே அந்த ஹோட்டல் பணியாளரை அழைத்து இந்த வகை உணவு இங்கு பிரபலம் என்று சொல்லியிருக்கலாமே எனக் கேட்டாராம். அதற்கு அந்த சர்வர் சொன்னாராம், “மேடம்! அந்த வகை மீன் உணவைத்தான் நீங்கள் சாப்பிட்டீர்கள்!” என. செய்யும் செயலில் முழுக்கவனமும் இல்லாமல் இருப்பதைக் கிண்டல் செய்யச் சொல்லப்படும் கதை இது.
அதிகரிக்கும் உளச்சிக்கல்: நாம் செய்யும் செயலில் முழுக்கவனம் இல்லையென்றால் வாழ்வில் பல விஷயங் களைத் தவறவிடுவோம். அவற்றில் முக்கியமானது மனநிறைவு. கடந்த பத்து ஆண்டுகளாகத் திறன்பேசிகளின் பயன்பாடு மிக அதிகளவில் அதிகரித்துவருகிறது. குறிப்பாக கரோனா பெருந்தொற்றுத் தாக்கத்தின்போது நடைமுறையில் இருந்த ஊரடங்கு போன்றவற்றால் இன்னமும் அதிகமானது.
குறிப்பாகப் பதின்வயதினரிடம். இதே காலக்கட்டத்தில் உளவியலாளர்கள் இன்னோர் அம்சத்தையும் கவனித்தனர். அதாவது, பதின்வயதினரிடம் மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்சினைகள், தற்கொலை எண்ணங்கள், போதைப் பழக்கம் போன்றவை அதிகமாவதைக் கண்டனர். நிச்சயமாக இரண்டுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என ஆய்வுகள் நடத்தப்பட்டன. இவ்விரண்டுக்கும் தொடர்பு இருக்கிறதா அல்லது இரண்டும் தற்செயலான நிகழ்வுகள்தானா என ஆராய்ந்தனர்.
குறிப்பாகச் சீனாவில் பல்வேறு ஆய்வுகள் இதுகுறித்து நடைபெற்றிருக்கின்றன. ஆயிரக் கணக்கான மாணவர்களிடம் அவர்கள் நாள்தோறும் திறன்பேசிகளைப் பயன் படுத்தும் விதம், கால அளவு போன்றவற்றையும் அவர்களது உளவியல் சிக்கல்கள், தூக்கம், போதைப் பழக்கம் போன்ற விஷயங்களையும் ஆய்வு செய்ததில் திறன் பேசிகளைப் பயன்படுத்தும் காலஅளவு அதிகரிக்க அதிகரிக்க மனச் சோர்வும் உளச்சிக்கலும் அதிகரிக்கின்றன.
