

சில நோய்களைக் குறிப்பிடும் வார்த்தைகள் தொடக்கத்தில் விநோதமாகத் தெரிந்தாலும் அதனால் ஏற்படும் விளைவுகள் பல ஆண்டுகளுக்கு நம் மனதில் அமிலத்தைச் சுரக்கவைக்கும்.
பிளேக், காலரா என்று நீளும் அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்த நோய் ‘கரோனா’. 2020 – 2021இல் உலகையே ஆட்டுவித்த இந்நோய்ப் பாதிப்பின் தாக்கம், இப்போதும் இருந்துவருவதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது, ‘கரோனரி ஆர்ட்டரி எக்டேசியா’ (Coronary Artery Ectasia) குறித்து ‘ஐரோப்பியன் ஹார்ட் ஜர்ன’லில் வெளியான ஓர் ஆய்வு.
கரோனா பாதிப்புக்குப் பின்னர் ‘CAE’ எனப்படும் இதய ரத்த நாளம் அசாதாரணமாக விரிவடைவது, கரோனாவுக்கு முன்பிருந்ததைவிட நான்கு மடங்கு அதிகரித்துள்ள தாக அந்த ஆய்வில் குறிப்பிடப் பட்டிருந்தது.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவரும் பேராசிரியருமான டாக்டர் ஜெ. சிசிலி மேரி மெஜல்லா, டாக்டர் ஏ. ஆண்டீனா ஸ்டெபானி இந்த ஆய்வை 2025 ஆகஸ்ட் மாதம் ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட்டில் நடைபெற்ற ‘இதயவியல் மன்றக் கூட்ட’த்தில் சமர்ப்பித்திருந்தனர்.
ஆய்வு சொல்லும் சேதி
“கரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகு கரோனரி ஆர்ட்டரி எக்டேசியாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதாகத் தெரிந்தது. அதை உறுதிப்படுத்துவதற் காக 2017 முதல் 2019 வரை கரோனாவுக்கு முந்தைய காலக் கட்டமாகவும் 2020 முதல் 2023 வரை கரோனாவுக்குப் பிந்தைய காலக் கட்டமாகவும் பிரித்து, எங்களிடமிருந்த ஏழு ஆண்டுத் தரவுகளை ஆய்வு செய்தோம்.
நெஞ்சு வலியோடு வந்த 19,720 பேருக்கு இங்கு ‘ஆஞ்சியோ’ பரிசோதனை செய்யப்பட்டது. கரோனாவுக்கு முன்னர் 8,300 பேரும் கரோனாவுக்குப் பின்னர் 11,420 பேரும் அதைச் செய்துகொண்டனர்.
தரவுகளை ஆய்வுசெய்ததில், கரோனாவுக்கு முன்பு 30 - 40 வயதுக்குள் இருப்பவர்களிடம் இப்பாதிப்பு 7%ஆக இருந்தது. அதுவே கரோனாவுக்குப் பிறகு 14%ஆக அதிகரித்திருந்தது.