

வருடாந்திர முன்கூட்டிய நோய் அறிதல் என்கிற ‘ஆன்யுவல் ஹெல்த் செக் அப்’ பற்றி விழிப்புணர்வூட்டினால் பலரும் அதெல்லாம் மோசடி, மருத்துவமனைகள் செய்யும் மார்கெட்டிங் உத்தி என்று உதாசீனம் செய்கின்றனர்.
‘வருடாந்திர முழு உடல் பரிசோதனையால் எந்தப் பயனும் இல்லை; அதனால் நேர விரயம், பண விரயம் மட்டுமே ஏற்படும்’ என்கிற கற்பிதங்கள் நம்மிடையே உண்டு. ஆனால், முன்கூட்டிய நோய் கண்டறியும் முறை அவசியமான ஒன்று.
இருபதாம் நூற்றாண்டுவரை நாட்டில் மலேரியா, காசநோய், தொழுநோய், காலரா, அம்மை, டெட்டனஸ் போன்ற தொற்று நோய்கள் அதிக மரணங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. 21ஆம் நூற்றாண்டில் தொற்று நோய் மரணங்கள் குறைந்து நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், இதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் போன்ற தொற்றா நோய்களால் அதிகப் பாதிப்புகளும் மரணங்களும் ஏற்பட்டு வருவதைக் காண்கி றோம்.
நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, புற்றுநோய் போன்றவை தொடக்கக்கட்ட அறிகுறிகளைப் பெரிதாக வெளிக்காட்டுவதில்லை. இதனால், பல நேரம் உடலுக்குள் பாதிப்பு ஏற்பட்ட பிறகே நோயைக் கண்டறியும் நிலை வருகிறது. புற்றுநோய் நன்றாக முற்றி வேறொரு தூர உறுப்புக்குப் புற்று பரவிய பிறகு கண்டறியும் சூழல் ஏற்படுகிறது. இது சிகிச்சை முறைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தெரியாத பாதிப்புகள்
நீரிழிவில் மூன்று மாத ரத்த குளுகோஸ் சராசரி அளவான ஹெச்.பி.ஏ.1சி. 13% என்கிற அளவுக்கு உயரும்வரை எந்த அறிகுறியும் காட்டாத நோயாளியை நான் அறிவேன். ரத்த அழுத்தம் 200/100 mm Hg என்கிற அளவில் மிக அதிகமாக இருந்தும், வெளியே தெரியாமல் இருக்கும் மக்களையும் பார்த்திருக்கிறேன்.
இந்நோய்களுக்கு வெளியே அறிகுறி காட்டவில்லை என்பதற்காக, உள்ளுக்குள் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்று அர்த்தமல்ல. கட்டுக்கடங்காத நீரிழிவும் ரத்தக் கொதிப்பும் இதய ரத்த நாள அடைப்பு, மூளை ரத்த நாள அடைப்பு, சிறுநீரக அழற்சி நோய், கல்லீரல் அழற்சி நோய், கால் பாத எரிச்சல், மதமதப்பைக் கொண்டுவரும் நியூரோபதி, கண் விழிப்படல அழற்சி, விறைப்புத்தன்மை இழப்பு எனப் பல பாதிப்புகளைக் கொண்டுவருகின்றன.
தொற்றா நோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரத்த அழுத்தம், ரத்த குளுகோஸ் அளவுகளை முன்கூட்டியே பரிசோதனை செய்யும் திட்டம் நடைமுறையில் இருந்துவருகிறது.