

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜமகேந்திர வரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 5 பேர் அண்மையில் கலப்படப் பாலைக் குடித்து உயிரிழந்துள்ளனர்.
அங்கீகரிக்கப் படாத பால் விற்பனை முகவரிடமிருந்து வாங்கிய பாலைக் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டட நிலையில் 12 பேர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 70க்கும் மேற்பட்டவர்களிடம் சந்தேகத்திற்குரிய கலப்படப் பால், பால் பொருள்கள் கைப்பற்றப்பட்டதுடன், அந்தப் பாலைப் பருகியவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
கலப்படப் பொருள்கள்
பாலில் தண்ணீர் கலப்பதும் ஒருவகை ‘கலப்படம்’தான். ஆனால், எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. தண்ணீரைத் தவிர எந்தப் பொருளைக் கலந்தாலும் பால் நஞ்சுடையதாக மாறிவிடும். பாலின் நுரைத்தன்மையை அதிகரிக்க சோப்புக்கரைசலைக் கலப்படம் செய்கிறார்கள்.
பாலின் அடர்த்தியைக் கூட்டுவதற்கு யூரியா, ஸ்டார்ச் போன்ற பொருள்களையும், பாலின் இனிப்புத்தன்மையைக் கூட்டுவதற்கு ‘குளுக்கோஸ்’ போன்றவற்றையும் கலப்படம் செய்கிறார்கள்.
இவை தவிர பால் நீண்ட நாள்கள் கெடாமல் இருக்க ஃபார்மலின், ‘சலவை சோடா’ (சோடியம் ஹைட்ராக்சைடு) போன்றவற்றையும் கலப்படம் செய்கிறார்கள். ஆந்திரத்தின் ராஜமகேந்திரவரம் பகுதியில் பயன்படுத்தப் பட்ட பாலில் குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் ‘எத்திலின் கிளைக்கால்’ என்கிற வேதிப்பொருள் கலக்கப் பட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.