மெட்ராஸ் ஐ: அலட்சியமும் அச்சமும் வேண்டாம்

மெட்ராஸ் ஐ: அலட்சியமும் அச்சமும் வேண்டாம்
Updated on
3 min read

தமிழகத்தில் சமீப காலமாக மழை அதிகமாகப் பெய்துவருவதால் சளி, காய்ச்சலுடன் சேர்ந்து மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் மக்களிடையே பரவிவருகிறது. இந்த நோய் கண்ணில் கன்சங்டிவா (Conjunctiva) என்ற விழி வெண் படலத்தில் ஏற்படும் நோயாகும். இது அடினோ வைரஸ் என்ற கிருமியினால் வருகிறது. முதன்முதலில் சென்னை எழும்பூர் பிராந்திய கண் மருத்துவமனையில் இது கண்டறியப்பட்டதால், இதனை மெட்ராஸ் ஐ என்று அழைக்கிறோம்.

இந்த நோய் வைரஸ் கிருமியினால் வருவதால் இரண்டு வாரங்களில் எளிதில் சிகிச்சை மூலம் சரியாகும் தன்மையைக் கொண்டிருந்தாலும், இது கருவிழி பாதிப்பை ஏற்படுத்தி கண்ணில் கருவிழியில் சிறுசிறு தழும்புகளை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், இதனுடன் சேர்ந்து பாக்டீரியா கிருமி பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இதனால் கண் மருத்துவரின் தொடர் சிகிச்சை அவசியம்.

கவனமான சிகிச்சை தேவை: கண்ணில் எரிச்சல், கண் வலி, கண் சிவத்தல், கண்ணில் மண் விழுந்ததைப் போல் உறுத்தல், கண் பீளை, நீர் வருதல், காலை எழும்போது கண் ஒட்டிக் கொள்ளுதல், கண்ணில் ரத்தம் கலந்த நீர் வடிதல், கண் மங்கலாகத் தெரிதல் போன்ற அறிகுறிகளுடன் வரும் இந்த கண் நோயானது சளிக் காய்ச்சலுடன் சேர்ந்து வரலாம். மேற்கண்ட அறிகுறிகளுடன் மெட்ராஸ் ஐ இருந்தால் உடனடியாகக் கண் மருத்து வரை அணுக வேண்டும். கண் மருத்துவர் பரிந்துரையின்படி மட்டுமே மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

சுயவைத்தியம் செய்துகொள்வதோ, மாத்திரைப் பரிந்துரை இல்லாமல் மருந்துக் கடைகளில் மருந்து வாங்கி பயன்படுத்தவோ கூடாது. ஏனென்றால், கண்ணில் கருவிழி புண், கிளாகோமா, கண்ணில் தூசி விழுந்து அதனால் ஏற்படும் பாதிப்பு காரணமாகவும் கண் சிவந்து காணப்படலாம். இவற்றை மெட்ராஸ் ஐ என்று நினைத்துக் கொண்டு ஸ்டீராய்டு கலந்த மருந்தை மருந்து கடைக்காரர்கள் கொடுக்க வாய்ப்புள்ளது. இதனைப் பயன்படுத்தும்போது பார்வை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது ஆகவே மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தைப் பயன்படுத்தக் கூடாது.

மெட்ராஸ் ஐ நோய் வந்தவர்கள் கைக் குட்டையால் கண்களைத் துடைப்பதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் ஒரு சுத்தமான பாத்திரத்தில் பஞ்சை போட்டு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் கொதிக்கவிடுங்கள். சூடு குறைந்தவுடன் தண்ணீரை வடிகட்டி பஞ்சை மட்டும் பாத்திரத்தில் வைத்துக்கொண்டு அதனைக் கொண்டு கண்ணைத் துடைத்தவுடன் பஞ்சைக் குப்பையில் போட்டு விட வேண்டும். ஒரு முறை கொதிக்க வைத்த பஞ்சை சிறிது சிறிதாக எடுத்து ஆறு மணி நேரம் வரை பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் பஞ்சை எடுப்பதற்கு முன் கைகளைச் சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும்.

இந்த பாதிப்பு முழுமையாகச் சரியாக 15 நாட்கள் ஆகும். கண் மருத்துவரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் கண்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவர் பெ.ரங்கநாதன் கட்டுரையாளர், கண் மருத்துவ நிபுணர், drranganathansocial@gmail.co

மெட்ராஸ் ஐ வந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:

# உங்கள் போர்வை, தலையணை உறை, துண்டு கைக்குட்டை போன்றவற்றைத் தினமும் சுத்தமாகத் துவைத்துப் பயன்படுத்தவும்.
# ஈரமான துண்டை வைத்துத் துடைத்து முகத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
# குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகித் தனியாகப் படுத்துக்கொள்ள வேண்டும்
# கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவி அல்லது கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
# கண்ணுக்கு யார் மருந்து போடுகிறார்களோ அவர்கள் மருந்து போடும் முன், மருந்து போட்ட பின் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.
# எக்காரணம் கொண்டும் கண்ணை கைகளால் தொடக் கூடாது. அப்படி கண்ணைத் தொட நினைத்தால் கைகளைச் சுத்தமாகக் கழுவிவிட்டுத் தொட வேண்டும். கண்ணைத் தொட்ட பிறகும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். அப்போது மெட்ராஸ் ஐ பாதிப்பு வர வாய்ப்பு குறைவு.
# குழந்தைகளுக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். ஏனென்றால் குழந்தை மூலம் பல மாணவர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளது.
# மெட்ராஸ் ஐ பாதித்த குழந்தைகள், பெரியவர்கள் செல்போன் அதிகம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
# நல்ல ஆரோக்கியமான, நீர்ச்சத்து மிகுந்த, வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு, உறக்கம், கண்ணுக்கு ஓய்வு போன்றவை நோய்ப் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வைக்கும்.
# பேருந்து, ரயில் பயணம் மேற்கொண்டால் போர்வை, தலையணை எடுத்து சென்று பயன்படுத்தவும்.
# கண்ணில் சிவப்பாக இருந்தாலே மெட்ராஸ் ஐ என்று நினைத்துக்கொண்டு தாங்களாகவே மருந்துக்கடையில் சென்று டியூப் மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
# தாய்ப்பால், விளக்கெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
# மெட்ராஸ் ஐ நோய் உள்ளவர்கள் தங்களை அணுகினால், கண் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்குமாறு மருந்துக்கடை வைத்திருப்பவர்கள் அவர்களிடம் அறிவுரை கூற வேண்டும்.
# இரண்டு கண்ணில் மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர் வெதுவெதுப்பான நீரினால் தலைக்குக் குளிக்கலாம்.
# ஒரு கண்ணில் பாதிப்பு உள்ளவர்கள் முகத்தை ஈரத்துணியால் துடைத்துக் கொள்ளலாம்.
# தனித்திருத்தல், கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மூலம் மெட்ராஸ் ஐ பரவாமல் தடுக்கலாம்.
# இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் கண் நோயாகும் என்பதால் சமூகப் பரவலைத் தடுக்க மேற்கண்ட அறிவுரைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in