Last Updated : 24 Jun, 2014 10:07 AM

 

Published : 24 Jun 2014 10:07 AM
Last Updated : 24 Jun 2014 10:07 AM

எது ஆரோக்கியம்? எது மருத்துவம்?

மருத்துவம் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஆங்கில மருத்துவம்தான். சுமார் இருநூற்றைம்பது ஆண்டு கால வெள்ளையர் ஆட்சி நமக்குத் தந்த சீதனங்களில் இந்த ஆங்கில மருத்துவமும் ஒன்று.

நம்முடைய ஆதி மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஆங்கில மருத்துவ முறையை மறுதலித்துப் பிறந்த ஹோமியோபதி மருத்துவம், சீன மருத்துவ முறைகளான அக்குபஞ்சர், அக்குபிரஷர் என்று பல்வேறு மருத்துவ முறைகள் நம்மிடையே இருந்தாலும், மருத்துவம் என்றால் உடனே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ஆங்கில மருத்துவ முறை மட்டும்தான்.

எதற்கெடுத்தாலும் அலோபதி

ஆங்கில மருத்துவ முறை தவிர்த்த மற்ற மருத்துவ முறைகள் குறித்து கேலியான சிரிப்புடன் ‘நாட்டு வைத்தியம்' என்று பொத்தாம்பொதுவாகப் பெயர் சூட்டித் தரம் தாழ்த்தி மகிழ்கிறார்கள். ஒரு பக்கம் நம்முடைய தாய்மொழியான தமிழையே வாசிக்கவும், எழுதவும் தெரியாமல் பல தலைமுறைகள் வளர்ந்துகொண்டிருப்பதோடு, அதைக் கேவலமாக நினைக்கிற மனோபாவமும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் என்ன நோய் என்றாலும் ஆங்கில மருத்துவத்தை நோக்கி ஓடுவது என்ற சிந்தனை பரவியிருப்பதில் ஆச்சரியமில்லை.

முதலாளித்துவம் வளர்த்தெடுத்த நுகர்வுக் கலாச்சாரத்தில் பொருட்கள், உடைகள், உணவு, நீர், ஆரோக்கியம் எல்லாமே சந்தையில் விற்பனை செய்யப்படுகிற பொருட்கள்தான். கொசுக்களை ஒழிப்பதைவிட கொசுக்களை விரட்டுவதற்கான கொசுக் கொல்லிகளை விற்பனை செய்வதுதான் முதலாளித்துவத்துக்கு உகந்தது. எதில் எதிலெல்லாம் லாபம் சம்பாதிக்க முடியுமோ, அதில் எல்லாம் தன் கைவரிசையைக் காட்டுவதோடு மட்டுமல்ல, அதற்கான நுகர்வோராக நம் மனநிலையை வசியப்படுத்தி மாற்றுவதிலும் கில்லாடிகள்.

மருந்துகளே வாழ்க்கை?

அதனால்தான் இன்று பெரும்பாலான குடும்பங்களில் மருத்துவத்துக்காகத் தங்கள் வருமானத்தில் பாதிக்கு மேல் செலவு செய்ய நேரிடுகிறது. ஒரு தும்மல் போட்டாலும் சரி, ஒரு நாள் தலைவலி, காய்ச்சல் என்றாலும் சரி, மருத்துவமனையை நோக்கிப் படையெடுக்கிறோம்.

அதுவும் குழந்தைகளுக்கு என்றால் கேட்கவே வேண்டாம். மருத்துவரும் ரத்தம், மலம், நீர், எக்ஸ்ரே (இது இப்ப ரொம்ப பழசு), ஸ்கேன் என்று ஏராளமான டெஸ்ட்களை எடுக்கச் சொல்வார். எல்லா டெஸ்ட்களையும் எடுத்த பிறகு அவர் ஒரு முடிவுக்கு வந்து, மருந்துகளை எழுதிக் கொடுப்பார். அத்துடன் எதிர்காலத்தில் இதனால் ஆபத்து அதிகரிக்கும் என்று பயமுறுத்தவும் செய்வார். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்.

பெற்றோரும் சாதாரணச் சளித் தொந்தரவை “பிள்ளைக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ்” என்ற ஆங்கில வார்த்தையை உச்சரிப்பதன் மூலம், தாங்கள் குழந்தை மீது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறார்கள். மருந்து, மாத்திரைகள், டானிக்குகள் (டானிக்குகளின் மீது அப்படி என்ன ஒரு மோகமோ!). ஆனால் உண்மையில் நடப்பதென்ன தெரியுமா?

குழந்தைகளோ, பெரியவர்களோ, நோயால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் தொடர்ந்து சாப்பிடும் இந்த மருந்து மாத்திரைகளாலும், டானிக்குகளாலும்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்! எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் சரி, தேவைக்கு அதிகமாகத் தொடர்ந்து உட்கொள்ளப்படும் மருந்துகள், நம்முடைய உடலின் நோய்/மருந்து ஏற்கும் திறனை வெகுவாகப் பாதிக்கும்.

அதாவது நம்முடைய உடலின் தற்காப்பு செயல்முறைகளைப் பாதிப்பது மட்டுமல்லாமல் உடலின் முக்கிய உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம், இதயம் ஆகியவற்றையும் பாதிக்கும். நாளடைவில் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, எல்லாவற்றுக்கும் மருந்துகளைச் சார்ந்தே வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும். அப்படியானால் மருந்துகளே வேண்டாமா?

நோயின் ஆதாரம்

குழந்தைகளின் நோய்களில் பெரும்பாலானவை ஒவ்வாமையால் உருவாகுபவை. அவை: குளிர் அல்லது வெப்ப ஒவ்வாமை, உணவு ஒவ்வாமை, தூசி ஒவ்வாமை, மலச்சிக்கல், மனஅழுத்தம். இவற்றில் பெரும்பாலான ஒவ்வாமைகளைத் தவிர்த்துவிட்டாலே நோய் வராது. ஏனென்றால், ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான உடல், மன அமைப்புடனே பிறக்கின்றன.

அது மட்டுமல்ல ஒவ்வொரு குழந்தையும் வெப்பம் தாங்கிகளாகவோ, குளிர் தாங்கிகளாகவோ, இரண்டையும் தாங்க முடியாதவர்களாகவோ, தங்களுக்கென்று தனித்துவமான வெப்பமானியுடன் பிறந்து வளர்கிறார்கள். வெப்பம் தாங்கிகளுக்குக் குளிர் ஒத்துக்கொள்ளாது, குளிர் தாங்கிகளுக்கு வெப்பம் ஒத்துக்கொள்ளாது, இரண்டுமே ஒத்துக்கொள்ளாத குழந்தைகளும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு மிதமான வெப்பம் அல்லது குளிர் மட்டுமே ஒத்துக்கொள்ளும். இதற்கு மாறான சீதோஷ்ண நிலைகள் குழந்தையின் உடல்நிலையில் மாறுபாட்டை ஏற்படுத்தும். இவற்றையெல்லாம் பெற்றோர் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். இதற்குப் பெரிய மருத்துவர்களோ, ஆய்வுகளோ தேவையில்லை.

ஒரு குழந்தைக்கு வெயில் காலத்தில் அதிகமான வியர்க்குருவோ, வேனல்கட்டிகளோ வருமென்றால் அந்தக் குழந்தை வெப்பம் தாங்க முடியாத, குளிர் தாங்கிக் குழந்தையாக இருக்கும்.

அதேபோல ஒரு குழந்தை குளிர்காலத்தில் சளி, இருமல், தும்மல் என்று அதிகமான சளித் தொந்தரவுகளால் சங்கடப்படுமானால் அந்தக் குழந்தை குளிர் தாங்க முடியாததாக, அதாவது வெப்பம் தாங்கியாக இருக்கும். இன்னும் சில குழந்தைகள் வெப்பத்தையும் தாங்காது, குளிரையும் தாங்காது, மிதமான சீதோஷ்ண நிலையில் நன்றாக இருக்கும். மற்றக் காலங்களில் ஏதாவது தொந்தரவுகள் இருந்துகொண்டேயிருக்கும்.

நோயின் தனித்தன்மை

இது எல்லோருக்கும் பொருந்தும். நாம் அனைவருமே தனித்துவமானவர்கள் என்பதால், நம் உடலில் மாற்றம் அல்லது நோய் வந்தால், அதுவும் தனக்கே உரிய தனித்தன்மையுடன் இருக்கும். உதாரணத்துக்கு வெளிக் காற்றில் ஒருவருக்கு இருமல் வராது. ஆனால் வீட்டுக்குள் அதிகமாக வரும்.

இது அந்த நபரின் தனித்தன்மையான இருமல். சிலருக்கு இரவில் மட்டுமே இருமல் வரும். சிலருக்கு இரவோ, பகலோ கீழே தலையைச் சாய்த்தவுடன் வரும். நிமிர்ந்து உட்கார்ந்தால் வராது. சிலருக்குத் தூங்கி எழுந்தவுடன் இருமல் வரும். அதன் பிறகு இருக்காது. ஆனால், நோய் என்னவோ இருமல்தான். ஆனால், ஒவ்வொருவருக்கும் அவரவருக்கே உரிய தனித்தன்மையுடன் அது வெளிப்படுகிறது.

நம்முடைய ஆதி மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோ மருத்துவ முறைகள் இந்தத் தனித்தன்மையைக் கணக்கில் எடுத்துக்கொண்டே நோய்க்கான மருந்தைத் தெரிவு செய்கின்றன. ஆனால், ஆங்கில மருத்துவ முறைக்குத் தனித்துவம் பற்றிக் கவலையில்லை. அது அதன் அடிப்படைத் தத்துவத்திலேயே கிடையாது. எனவே, மேலே சொன்ன அத்தனை வகையான இருமலுக்கும் ஒரே மாதிரியான மருந்துகளையே தரும். இப்படி நோயாளிகளைத் தனித்துவம் மிக்க மனிதர்களாகப் பார்க்காமல் மந்தைகளாகப் பார்த்து மொத்தமாக ஒரே விதமான மருந்துகளைத் தருகிறது அலோபதி. இதனால் ஒவ்வொரு உயிரின் தனித்துவம் மிக்க உடற்செயல்பாட்டியல் மாறுகிறது. அது மட்டுமில்லை. பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளே ஆங்கில மருத்துவத்தில் கிடையாது.

மருத்துவ வியாபாரம்

சேவையாக இருந்த மருத்துவம் இன்று செல்வம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டதால் மருத்துவர்களும் மருத்துவ அற உணர்வு இல்லாமல், மனிதாபிமானம் இல்லாமல், சக மனிதன் என்ற அனுதாபம் இல்லாமல், பணத்தைக் கறப்பதிலேயே குறியாக இருக்கிற அவல நிலை இருக்கிறது.

இதனால் தேவையில்லாத டெஸ்ட்கள், தேவையில்லாத மருந்துகள், தேவையில்லாத ஊசிகள், தேவையில்லாத டானிக்குகள் என்று நோயாளியின் உயிரோடு விளையாடுகிறார்கள். தாங்கள் பணம் சம்பாதிக்க, நோயாளியின் உயிரைப் பணயம் வைக்கிறார்கள் டாக்டர்கள். இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.

மருத்துவக் கல்வி தனியார் வசம் போனபிறகு ஒருவர் மருத்துவக் கல்வியை முடிக்கக் கிட்டத்தட்ட இருபது லட்சம் ரூபாய் செலவாகிறது. அவர் படித்து முடித்தவுடன் அதைச் சம்பாதிக்க வேண்டும், அதற்கு மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதன் விளைவாக நோயாளிகளைப் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளிடம் பணயம் வைத்து, தன் வசூல் வேட்டையை நடத்துகிறார். இதுதான் இன்றைய பொதுவான சூழ்நிலை. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்.

ஆரோக்கியம் பற்றி, நோய்களைப் பற்றி குறிப்பாக எந்தெந்த நோய்களுக்கு மருந்து சாப்பிடவேண்டும், எது எதற்குத் தேவையில்லை என்று கல்வி கற்கும்போதே கற்பித்திருந்தால், இத்தனை மருந்துக் கடைகளுக்கு நம்மூரில் வேலையிருக்காது.

அத்துடன் நம்முடைய ஆதி மருத்துவ முறைகளை அரசு ஆதரித்து, அந்த மருத்துவ முறைகளைப் பரப்புவதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும். மக்களும் கடன் வாங்கியாவது ஆங்கில மருத்துவத்தில்தான் சிகிச்சை பெறுவேன் என்ற மந்தை மனோபாவத்தைக் கைவிட்டு, நம்முடைய மருத்துவ முறைகளை நாட வேண்டும்.

நம்முடைய ஆதி மருத்துவ முறைகளில் பக்கவிளைவுகள் கிடையாது. ஒருவருடைய நோயின் தனித்தன்மையைப் பார்த்து மருந்துகள் கொடுக்கப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. மீண்டும் அந்த நோய் வருவதில்லை. ஒப்பீட்டு நோக்கில் ஆங்கில மருத்துவத்தைவிட எளிமையானது. அதிகச் செலவில்லாதது. இத்தனை சாதகங்கள் நம்முடைய மருத்துவ முறைகளில் இருக்கின்றன.

அதற்காக ஆங்கில மருத்துவ முறையே வேண்டாம் என்று சொல்லவில்லை. அறுவை சிகிச்சை, விபத்தில் உயிர்காப்பு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற துறைகளில் ஆங்கில மருத்துவத்தின் பணி அளப்பரியது. ஒருங்கிணைந்த மருத்துவ முறையே இப்போதைய தேவை.

நோயின் தன்மைக்கேற்ப அது சித்தா அல்லது ஆயுர்வேதம் அல்லது யுனானி அல்லது ஹோமியோ அல்லது அக்குபஞ்சர் அல்லது அக்குபிரஷர் அல்லது ஆங்கில மருத்துவ முறையாக இருக்கலாம். இத்தகைய ஒருங்கிணைந்த மருத்துவ முறையே எதிர்காலத்தில் ஒரு வலுவான சமுதாயத்தைக் கட்டமைக்கும்.

- உதயசங்கர், எழுத்தாளர்

தொடர்புக்கு: udhayasankar.k62@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x