

பற்களுக்கு வேர் சிகிச்சை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது பற்றிப் பலருக்குத் தெரியாது. இருந்தாலும்கூட, வேர் சிகிச்சை (ரூட் கெனால்) என்றவுடன் அச்சத்துக்கு உள்ளாவதே பொதுவான போக்காக இருக்கிறது.
வேர் சிகிச்சை மிகுந்த வலியை ஏற்படுத்தும், மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும், எந்தச் சூழ்நிலையிலும் அதைத் தவிர்க்க வேண்டும் என்பது போன்ற தவறான கருத்துகள் இந்த அச்சத்தை மேலும் அதிகரிக்கின்றன. ஆனால், உண்மைநிலை இதற்கு முற்றிலும் நேரெதிரானது.
நமக்கு உதவுவதே வேர் சிகிச்சையின் உண்மையான நோக்கம். அது வலியை அகற்ற உதவும்; ஒருபோதும் வலியை அதிகரிக்காது; காயத்தைக் குணப்படுத்தும்; ஒருபோதும் புதிய காயத்தை ஏற்படுத்தாது. அதனால்தான், நீங்கள் அடிக்கடி பல் வலி என்று பல் மருத்துவரிடம் செல்லும்போது, அவர் உங்களுக்கு வேர் சிகிச்சையைப் பரிந்துரைக்கிறார்.
பல்லுக்குள் இருக்கும் பாக்டீரியத் தொற்றை அகற்றி, எதிர்காலத்தில் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதே இந்த சிகிச்சையின் முதன்மை இலக்கு.
தவறான கற்பிதங்கள்
வேர் சிகிச்சை நம்மைப் பலவீனப் படுத்தும்; உடலுறுப்புகள் பாதிப்படையும்; வேர் சிகிச்சைக்குப் பின்னரும் மீண்டும் தொற்று ஏற்படும் என வேர் சிகிச்சை குறித்து இணையதளங்களிலும், சமூக ஊடகங் களிலும் தகவல்கள் பகிரப்படுகின்றன. இவற்றில் துளியும் உண்மையில்லை. வேர் சிகிச்சையால் உடலின் வேறு பாகங்களில் பாதிப்பு ஏற்படும் என்கிற கருத்தை நிறுவுவதற்கு அறிவியல்ரீதியாக எவ்வித ஆதாரமும் கிடையாது.
எது சிறந்த அணுகுமுறை?
வேர் சிகிச்சை ஏன் செய்ய வேண்டும்? பல் சொத்தை அல்லது பல்லில் பாதிப்பு எற்பட்டால், அந்தப் பல்லைப் பிடுங்கி எறிந்து விடலாமே? அதில் வலியும் குறைவு; செலவும் குறைவு என்று கருதும் போக்கும் பலரிடம் உள்ளது. ஆனால், அது ஒரு தவறான அணுகுமுறையே. பற்கள், இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு வரம். நமது இயற்கையான பற்களை முடிந்தவரைக் காக்க முயல வேண்டும்.
எவ்வளவுதான் மேன்மையான அம்சங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், செயற்கைப் பற்கள் ஒருபோதும் இயற்கைப் பற்களுக்கு ஈடாக முடியாது. இயற்கை பற்களின் செயல்பாடும், தோற்றப் பொலிவும் செயற்கையைவிட மேலானதாகவே எப்போதும் இருக்கும். இயற்கை பற்களைக் காப்பதற்கு வேர் சிகிச்சை நல்ல தீர்வை அளிக்கும்.
வெற்றி விகிதம் அதிகம்
பல் நோய்த்தடுப்பு மருத்துவத்தில் (எண்டோடான்டிக்) வேர் சிகிச்சையின் வெற்றி விகிதம் அதிகம். வேர் சிகிச்சை அளிக்கப்பட்ட பலரது பற்களின் செயல்பாடு கள் வாழ்நாள் முழுவதும் வெற்றிகரமாக நீடித்திருக்கின்றன. பெரும்பாலான வேர் சிகிச்சை செயல் முறைகள் வெற்றியில்தான் முடிகின்றன; பாதிக்கப்பட்ட பல்லையும் அவை காப்பாற்றுகின்றன.
எனவே, ஒரு பல்லைப் பிடுங்குவது முற்றிலும் தேவையற்றது. வேர் சிகிச்சை என்பது நவீன மருத்துவ அறிவியலின் விளைவு. அதைப் பயன்படுத்த மறுப்பது என்பது, கால் வலித்தாலும் முட்டு தேய்ந்தாலும் நடந்தே செல்வேன் என்பதைப் போன்றது.
தேவையை உணர்த்தும் அறிகுறிகள்
வேர் சிகிச்சை தேவையா இல்லையா என்பதை உங்கள் பற்களின் கூழைப் பார்த்து பல் நோய்த்தடுப்பு மருத்துவ நிபுணர் முடிவுசெய்வார். உங்களுக்குப் பல் வலி இல்லாமல் இருந்தாலும்கூட, அதில் சேதாரமோ, தொற்றோ ஏற்பட்டிருந்தால் உங்களுக்கு வேர் சிகிச்சை தேவைப்படும்.
வேர் சிகிச்சையின் தேவையை உணர்த்த இந்த அறிகுறிகள் உதவும்:
l மெல்லும் போது அல்லது கடிக்கும்போது கடுமையான வலி
l ஈறுகளில் பருக்கள் (ஃபிஸ்துலா). இது தொற்றிலிருந்து சீழ் வெளியேறும் பாதை.
l பல்லில் ஏற்படும் சிதறல் அல்லது வெடிப்பு
l பல்லில் ஏற்படும் கூச்சம்
l சூடான அல்லது குளிர்ந்த உணர்திறன் பல்லில் நீண்ட நேரம் நீடிப்பது.
l ஈறுகளில் ஏற்படும் வீக்கம்
l ஈறுகள் மென்மையாதல்
l ஈறுகளில் ஏற்படும் ஆழமான சிதைவு
l ஈறுகள் கருமையாதல்.
சிகிச்சை முறை
பல் வேர்களின் வடிவத்தைப் பார்க்கவும், சுற்றியுள்ள எலும்பில் நோய்த்தொற்றின் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து பல் மருத்துவர் தீர்மானிப்பார். ஈறுகளில் மயக்க மருந்து செலுத்தப்பட்ட பின்னரே வேர் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பதால், அந்த சிகிச்சையின்போது எவ்வித அசௌகரியமோ வலியோ தெரியாது.
சிகிச்சையின்போது, சிறிய துளையிடும் கருவியின் மூலம் பல்லின் மேற்பரப்பு திறக்கப்பட்டு, பல்லினுள் இருக்கும் கூழ் அகற்றப்படும். பின்னர் தொற்றுகள் முற்றிலும் அழிக்கப்படும். நோய்த் தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட உடன், அந்த வெற்றிடம் ‘கட்டா பெர்ச்சா பிசின்’, ஜிங்க் ஆக்சைடு, யூஜினால் கலந்த வேதிப்பொருளைக் கொண்டு நிரப்பப்படும்.
வேர் சிகிச்சைக்குப் பின்னர் பல்லில் ஏதேனும் சேதம் அல்லது சிதறல் ஏற்படுவதைத் தடுப்பதற்கு, கிரீடம் எனப்படும் மேல் மூடி பொருத்திக்கொள்வது அவசியம்.
வலியின்றி சிரிக்கலாம்
இன்றைய நவீன மருத்துவ அறிவியல், வேர் சிகிச்சையை எளிதானதாக மாற்றிவிட்டது. சொத்தைப் பல்லை நிரப்புவது எவ்வளவு எளிதோ, அதைப் போன்றே வேர் சிகிச்சை செயல்முறையும் இன்று எளிதானதாக இருக்கிறது.
உங்கள் பல்லின் நிலை, தனிப்பட்ட சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து, ஒன்று அல்லது இரண்டு அமர்வுகளில் இந்த வேர் சிகிச்சையை முழுவதும் முடித்துவிட முடியும்.
இதற்காக நீங்கள் ஒதுக்கும் நேரம் உணவைக் கடித்து மெல்லும் வலுவை வாழ்நாள் முழுவதும் வழங்கும். வாழ்நாள் முழுவதும் வலியின்றி சிரிக்கும் நிலையைப் பரிசளிக்கும்.
கட்டுரையாளர், வாய்வழி நோயியல் நிபுணர்
தொடர்புக்கு: hthamizh@gmail.com