Last Updated : 29 Jun, 2022 03:42 PM

 

Published : 29 Jun 2022 03:42 PM
Last Updated : 29 Jun 2022 03:42 PM

ஒரு மரணமும் சில ஊடகங்களின் பொறுப்பின்மையும்

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று (ஜூன் 28) சென்னை மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் அவருடைய மரணம் குறித்த தவறான செய்திகள் தேவையற்ற குழப்பத்தை விளைவித்துள்ளன.

1982ல் வெளியான ‘நெஞ்சங்கள்’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாகத் தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக விளங்கியவர் மீனா. இவர் 2009இல் வித்யாசாகர் என்பவரை மணந்தார். இந்த இணையரின் மகள் நைனிகா 2016இல் வெளியான ‘தெறி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

வித்யாசாகர் மரணத்துக்குக் காரணம் கரோனா வைரஸ் தொற்றுதான் என்று ஒரு முன்னணி செய்தித் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. அதே நேரம் அவர் நீண்டகாலமாக நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்தார் என்கிற தகவலும் வெளியானது. இதையடுத்து கோவிட் தொற்றினால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பின் காரணமாக வித்யாசாகர் மரணமடைந்திருப்பதாகச் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இவ்விரண்டு தகவல்களும் சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பரவியது. அது வித்யாசாகரின் மரணம் குறித்த குழப்பத்தை விளைவித்தது. தற்போது கரோனா தொற்று எண்ணிக்கை தமிழகத்தில் மீண்டும் அதிகரித்திருக்கிறது. ஆனால், கோவிட்டுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேலும், மரணங்களும் நிகழ்வதில்லை. இந்தச் சூழலில் கரோனா தொற்றின் காரணமாக வித்யாசாகர் உயிரிழந்தார் என்னும் செய்தி தொற்றுப் பரவல் குறித்த தேவையற்ற அச்சத்தை விளைவித்தது.

‘நாட்டாமை’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட திரைப்படங்களில் மீனாவுடன் இணைந்து நடித்திருக்கும் குஷ்பு இந்தக் குழுப்பத்தை நீக்கும் வகையிலும் கரோனா குறித்த அச்சத்தைக் களையும் வகையிலும் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். “ஊடகங்கள் சற்று பொறுப்புடன் நடந்துகொள்ள பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மீனாவின் கணவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கோவிட் வந்தது. கோவிட் அவருடைய நுரையீரலின் நிலையை மேலும் மோசமாக்கியது. கோவிட்டாலேயே நாம் (வித்யா)சாகரை இழந்தோம் என்று சொல்வதன் மூலம் தவறான செய்தியைப் பரப்புவதையும் அச்சத்தை ஏற்படுத்துவதையும் தயவுசெய்து தவிர்த்திடுங்கள். ஆம் நாம் (கரோனா குறித்து) எச்சரிக்கையாக இருக்க வேண்டும்தான். ஆனால், தயவுசெய்து (பொறுப்புடன் செயல்படுங்கள்)..” என்று குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

இதன் மூலம் நீண்டகால நுரையீரல் தொற்று இருந்ததாலேயே வித்யாசாகர் மரணமடைந்திருப்பது உறுதியாகியுள்ளது. இடையில் அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அது அவருடைய மரணத்துக்கு முதன்மைக் காரணமோ நேரடிக் காரணமோ அல்ல. அவருக்கு இருந்த நுரையீரல் பிரச்சினை கோவிட் காரணமாக மேலும் மோசமாகியுள்ளது. அதோடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்த நிலையில் மாற்று நுரையீரல் கிடைக்கத் தாமதமானது வித்யாசாகரின் மரணத்துக்கு வித்திட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவே வித்யாசாகரின் மரணம் குறித்த சரியான முழுமையான செய்தி.

செய்தியை முந்திக் கொடுக்கும் அவசரத்தில் உறுதிசெய்யப்படாத தகவல்களை ஊடகங்களில் வெளியிடுவது இறந்தவரின் உற்றார் உறவினரும் நண்பர்களும் அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தி அவர்களுக்குக் கூடுதல் மன உளைச்சலைத் தருகிறது. கரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் நிகழும் மரணங்களை உரிய ஆதாரம் இல்லாமல் அதனுடன் தொடர்புப்படுத்துவது பொதுநலச் சுகாதார நோக்கிலும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது. ஊடகங்கள் மிக மிகக் கவனமாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டிய அவசியத்தை மீனாவின் கணவரின் மரணம் குறித்த செய்தி வழங்கல் மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருக்கிறது.

https://twitter.com/khushsundar/status/1541978834370560001

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x