

உலகச் சுகார அமைப்பு மன நலம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. கரோனாக் காலத்துக்குப் பிறகு உலக மக்களின் மன நலம் குன்றியிருப்பதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
2022-ம் ஆண்டுக்கான இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ் நெருக்கடியான மன நல பாதிப்புக் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் எனக் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
உலக அளவில் 1 கோடி மக்கள் மன நலத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2022-ம் ஆண்டுக்கான ஐநாவின் மன நலம் அறிக்கை தெரிவிக்கிறது.
நாம் மிகுந்த மன நல நெருக்கடியான சூழலில்தான் வாழ்கிறோம் எனக் குறிப்பிட்ட அவர், மன நலம் பாதிக்கப்பட்ட இந்த ஒரு கோடிப் பேரில் குழந்தைகளும் இருக்கிறார்கள். மன நலம் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்வது இல்லை. மன நலச் சிகிச்சை அவர்களுக்குக் கிடைக்கூடிய சூழல் இல்லாமல் இருக்கலாம். அல்லது மன நலச் சிகிச்சை எடுத்துக்கொள்ளக்கூடிய பின்புலம் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். அல்லது மன நலக் குறைவை வெளிப்படுத்துவதில் உள்ள தயக்கத்தால் அவர்கள் சிகிச்சை பெறாமல் இருக்கலாம் எனக் கவலை தெரிவித்தார்.
மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடல், மன ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்புளளது ஐநாவின் அறிக்கை குறிப்பிடுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மறுப்பு மற்றும் பிற மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகும் வாய்ப்பும் உள்ளதாகவும் மேலும் அந்த அறிக்கை கூறியுள்ளது. மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநலப் பிரச்சினைகளால் உலகப் பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு 100 கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பு ஆவதாகவும் புள்ளி விபரங்களை மேற்கோள் காட்டி அந்த அறிக்கை கூறுகிறது.
கொரானாத் தொற்று இந்த மன நலப் பிரச்சினைகளுக்கு முக்கியமான காரணம் என அந்த ஆய்வறிக்கை கண்டறிந்துள்ளது. மேலும் பல உலக நாடுகள் தங்கள் சுகாதாரத் திட்டங்களில் மன நலத்தைப் புறக்கணிப்பதாகவும் ஐநா பொதுச்செயலாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.