

கண் கருவிழியின் முன்பகுதியை மூடும் ஒரு தெளிவான அடுக்கு கார்னியா என்று அழைக்கப்படுகிறது. இது வெளிப் பொருள்களிலிருந்து கண்ணைப் பாதுகாக்கிறது; ஒளியின் தன்மைக்கேற்ப பார்வையை மேம்படுத்துகிறது; கண்ணைப் புற ஊதாக் கதிர் பாதிப்பிலிருந்து தடுக்கிறது.
வெளிப்புறக் கண் நோய்கள், கண்களின் வெளிப்புறத்தையும் மேற்பரப்பையும் பாதிக்கக்கூடியவை. பொதுவாக, கார்னியல் நோய் என்பது கண்ணுக்கு முன்னால் உள்ள தெளிவான படலத்தைப் பாதிக்கும் நிலையைக் குறிக்கிறது. கண் அசௌகரியம், பார்வை மங்குதல், கண் சிவந்துபோதல் அல்லது கண் கூச்சம் ஆகியவை இவற்றின் சில அறிகுறிகள்.
பொது நோய் நிலைகள்
வறண்ட கண்: இது கண்ணில் கண்ணீரை உருவாக்கும் திறன் குறைவதால் ஏற்படுவதாகும். சிலருக்கு வயதாகும்போது போதுமான ஈரப்பதத்தைக் கண்ணீர் வழங்க முடியாமல் போகும். கண்ணீர் ஒரு உயவுப் பொருள்போல் செயல் படும். கண்ணீர் இல்லை என்றால் கண்கள் உலர்ந்து மேற்பரப்பில் வீக்கமோ சேதமோ ஏற்படலாம்.
சிவந்த கண்: விழி வெண்படல அழற்சி அல்லது இளஞ்சிவப்புக் கண் என்பது ஒருவித நோய் நிலை. விழி வெண்படலத்தின் மேல் உறையில் ஏற்படும் அழற்சி யானது கான்ஜன்க்டிவிடிஸ் எனப்படும். இது ஏதேனும் ஒவ்வாமை, தொற்று அல்லது எரிச்சல் ஆகியவற்றின் விளைவாக இருக்கலாம். இது தொற்றுநோயாக இருக்கும் சாத்தியம் அதிகம். வைரல் கான்ஜன்க்டிவிடிஸுக்கு அதிகக் கவனம் தேவைப்படாது, தானே குணமாகிவிடும். அதே சமயம் பாக்டீரியா கான்ஜன்க்டிவிடிஸுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த வகை கான்ஜுன்க்டிவிடிஸ் மிகவும் அரிதானது.
கண்ணிமை அழற்சி: கண்ணிமை அழற்சி என்பது ஒரு நாள்பட்ட கண் நோய். கண்ணில் எரிச்சல் அல்லது அரிப்பு உணர்வு, மங்கலான பார்வை, கண் கூச்சம், கண் சிவந்துபோதல் உள்ளிட்ட பல அறிகுறிகள் இந்த நோயில் காணப்படலாம். இது பாக்டீரியா தொற்றாலோ தோல் பிரச்சினையாலோ ஏற்படலாம்.
ஒவ்வாமை: கண்களில் ஒவ்வாமை என்பது மிகவும் பொதுவானது. குறிப் பாக மருந்துகள், லென்ஸ் ஒவ்வாமை, சுற்றுச்சூழல் ஒவ்வாமை போன்றவற்றால் ஒருவருக்குக் கண் ஒவ்வாமை ஏற்படலாம். இதன் பொதுவான அறிகுறிகள் அரிப்பு, எரிச்சல் உணர்வு, சிவந்துபோதல், அதிகப்படியான கண்ணீர் வெளியேற்றம்.
கார்னியல் நோய்களைத் தவிர்ப்பது எப்படி?
ஆபத்துக் காரணிகளைக் குறைப்பதன் மூலம் பல கார்னியல் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பல தொற்று நோய்களைத் தவிர்ப்பதற்கான எளிய நுட்பம் கண் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து பராமரிப்பதே.
உதாரணமாக, சிற்றம்மை நோய் (ஷிங்கிள்ஸ்) தீவிரமடைவது அல்லது அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுவதை மட்டுப்படுத்தத் தடுப்பூசிகள் உள்ளன. தடுப்பூசி போட்டுக்கொண்டு சிற்றம்மையைத் தடுத்துக்கொண்டால், ஹெர்பெஸ் ஜோஸ்டர் ஆப்தல்மிகஸ் எனப்படும் கண் நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்து தடுத்துக்கொள்ளலாம். இதுபோல் பல வழிகள் உள்ளன. கண்களை எப்போதும் ஆரோக்கியமாகப் பராமரிப்பதும், நோய் அறிகுறிகள் தீவிரமடைந்தால் உடனடியாக கண் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டியதும் மிக முக்கியம்.
பொதுவாக காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் தீவிர கண் நோய்த்தொற்றுகளுக்கு ஆளாவ தற்கான சாத்தியம் மிக அதிகம். எனவே, உரிய வழிகாட்டுதல் படி அடிக்கடி காண்டாக்ட் லென்ஸ்களை அவர்கள் சுத்தம் செய்ய வேண்டும்.
ஆபத்துகள், காரணங்கள்
கார்னியல் நோய் பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். மரபியல் (பரம்பரை) காரணங்கள், நோய்த்தொற்று, காயம், ஆட்டோ இம்யூன் கோளாறுகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், ஒவ்வாமை, இரண்டாம் நிலை மருத்துவக் காரணங்கள், திடீர் வளர்ச்சிகள், கட்டிகள் போன்றவை மேற்கூறிய கண் நோய்களுக்குக் காரணமாகின்றன.
கண் ஒவ்வாமை அல்லது மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் மோசமடைந்தால் மருத்துவரைச் சந்தித்துப் பரிசோதனை செய்து கொள்வதும் அவரது அறிவுரை யைப் பின்பற்றுவதும் மிகவும் முக்கியம். கார்னியல் தொற்றுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவது, நிலைமையின் தீவிரத்தையும் அதன் மோசமான விளைவுகளையும் குறைக்கிறது. பார்வை பாதிக்கப் படாமல், நல்லதொரு வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுகிறது.
கட்டுரையாளர், கண் மருத்துவ நிபுணர்