Last Updated : 20 Feb, 2016 12:46 PM

 

Published : 20 Feb 2016 12:46 PM
Last Updated : 20 Feb 2016 12:46 PM

புற்றுநோய் சிகிச்சையின் புதிய நம்பிக்கை மஞ்சள்!

சாம்பாருக்கும் மசாலாவுக்கும் நிறத்தைக் கொடுக்கும் மஞ்சளுக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவக் குணங்கள் ஏராளம். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் மஞ்சள் தரும் மருத்துவப் பலன்கள் வெகு பிரசித்தம். மஞ்சளில் உள்ள ‘கர்கியுமின்’ (curcumin) என்ற மூலக்கூறு பல நோய்களுக்கு மருந்தாக ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இப்போது இதைப் புற்றுநோய்க்கு மருந்தாகவும் சிலர் பயன்படுத்துகிறார்கள். உணவில் தவிர்க்க முடியாத பொருளான மஞ்சளுக்கு, புற்றுநோயைத் தீர்க்கும் வல்லமை உண்டா?

பெரும் அச்சுறுத்தல்

உலகைப் பெரிதாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது புற்றுநோய். வயது வித்தியாசமின்றி, பாலினப் பாகுபாடின்றி, யாருக்கு வேண்டுமானாலும், உடலின் எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம் என்ற நிலை உள்ளது. மாறி வரும் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் சீர்கேடு, மன அழுத்தம், புகை மற்றும் மதுப் பழக்கம் போன்றவை புற்றுநோய் ஏற்பட முக்கியக் காரணிகளாக உள்ளன.

ஒருசில புற்றுநோய்களைத் தவிர மற்றப் புற்றுநோய்களை முன்கூட்டியே தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. புற்றுநோய் தாக்கிய இடத்தில் அறுவைசிகிச்சை மூலம் உறுப்பு அகற்றம், கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்றவை அலோபதி மருத்துவத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சையாக அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் பக்கவிளைவுகள் ஏராளம். அது மட்டுமல்லாமல் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோயை மட்டுமே முழுமையாகக் குணப்படுத்த முடிகிறது. முற்றிய நிலையிலான புற்றுநோய்க்கு மரணமே வாசலாக உள்ளது.

இந்திய ஆராய்ச்சி

இப்படி ஆட்கொல்லி நோயாகப் பொதுமக்களை அச்சுறுத்திவரும் புற்றுநோய்க்கான மருந்தைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்துவருகிறார்கள். இதுபோன்ற ஆராய்ச்சிகளில் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுப்பதில் மஞ்சளில் உள்ள கர்கியுமினுக்கு உள்ள பங்களிப்பைப் பற்றியும் ஆராய்ச்சி நடந்துவருகிறது. கர்கியுமினில் நோய் எதிர்ப்பு ஆற்றலும், புற்றுநோயைத் தடுக்கும் ஆண்டிஆக்ஸிடன்ட்டும் இருப்பதால் அதன் பக்கம் விஞ்ஞானிகளின் பார்வை திரும்பியது.

இந்தியாவில் பண்டைக் காலம் முதலே ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் மஞ்சள் பயன்படுத்தப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக கர்கியுமின் தரும் மருத்துவப் பலன்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் இந்தியாவிலும் அதிகம் நடைபெற்றுவருகின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கர்கியுமின் மருந்தைக் கொடுத்தும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. புற்று நோயாளிகளுக்கு கர்கியுமின் தரும் பலன்கள் பற்றி பலர் அறிந்திருந்தாலும், சிகிச்சை முறைகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இதன் சிகிச்சை முறை என்ன என்பது குறித்துக் கர்கியுமினில் மருத்துவ ஆராய்ச்சியை மேற்கொண்டுவரும் மங்களூர் சமி லேப்ஸ் நிறுவனரும் மருத்துவருமான முகமது மஜித்திடம் கேட்டோம்:

புற்றுநோய் எதிர்ப்புப் பண்பு

“புற்றுநோய் வளர்வதையும், அது பரவுவதையும் கர்கியுமின் தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மஞ்சளின் மூலப்பொருளான கர்கியுமினுக்கு நோய் எதிர்ப்பு, அழற்சி தடுப்பு, பூஞ்சை எதிர்ப்பு, ஒட்டுண்ணி எதிர்ப்பு, ஆண்டிமியூடாஜெனிக் ஆகிய பண்புகள் உள்ளன. கர்கியுமின் மாத்திரையை எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோய் வளர்ச்சி தடுக்கப்படுகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 73-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளில் கர்கியுமின் சி3-யைத் தனியாகவோ அல்லது பயோபெரின் உடன் இணைந்து எடுத்துக்கொண்டாலோ ஆயுளை அதிகரிக்க முடியும் எனத் தெரிய வந்துள்ளது.

உணவுக் குழாய், இரைப்பை, புராஸ்டேட், கணையம், மார்பகம், நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பை, கர்ப்பப்பை வாய் மற்றும் வாய் புற்றுநோய்களுக்கு லைகோபீனை எடுத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்றும் புற்றுநோய்க்கு எதிரான ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது” என்கிறார் முகமது மஜித்.

வாழ்நாள் அதிகரிப்பு

புற்றுநோய் சிகிச்சையின்போது கொடுக்கப்படும் கீமோதெரபி, ரேடியோ தெரபியால் நோயாளிகளுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் மிக அதிகம். அப்போது கர்கியுமின் மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம், இதுபோன்ற பாதிப்புகளின் தீவிரத் தாக்கத்தைக் குறைத்துக்கொள்ள முடியும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த மருந்தை எடுத்துக்கொள்வதில் பக்க விளைவுகளும் இல்லை என்பதால், கர்கியுமினை மிகவும் பாதுகாப்பான மருந்தாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆரம்ப நிலையில் மட்டுமல்ல முற்றிய நிலையில் உள்ள புற்றுநோயாளிகள்கூட கர்கியுமின் மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம் புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுத்து, வாழ்நாளை அதிகரித்துக் கொள்ளலாம் என்பதுதான் இந்த மருந்து தந்துள்ள நம்பிக்கை.

“மார்பகப் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் ஏற்படும் பக்க விளைவுகளை மஞ்சள் குறைக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 60 ஆயிரம் நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந்து, பக்கவிளைவுகளை கர்கியுமின் தடுப்பது தெரியவருகிறது. மார்பகம், பெருங்குடல், கணையம், இரைப்பை, கல்லீரல், ரத்தம், நுரையீரல், புராஸ்டேட், சிறுநீர்ப் பை, கருப்பை வாய், கருப்பை, தலை மற்றும் கழுத்து, மூளை எனப் பல புற்றுநோயாளிகளிடமும் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

புற்றுநோய் எல்லோரிடமும் ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், அதற்கான சிகிச்சையில் கர்கியுமின் மருந்து புதிய நம்பிக்கையைத் தருவதாகப் புற்றுநோய் சார்ந்த ஆராய்ச்சிகள் கூறுகின்றன. புற்றுநோய் வளர்ச்சியையும், பரவலையும் பாரம்பரிய மருந்தான கர்கியுமின் சிதைக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எந்த நிலையில் உள்ள புற்றுநோயாளிகளும் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாம்” என்கிறார் மஜித்.

மஞ்சளின் மகிமை காலம் கடந்தும் மனிதக் குலத்தைச் செழிப்பாக வாழ வைக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x