Published : 28 Nov 2015 12:15 PM
Last Updated : 28 Nov 2015 12:15 PM

புதின் பருவமா, புதிர்ப் பருவமா 11: காளையை அடக்க என்ன செய்யலாம்?

இளம் வயதில் சமூகவிரோதச் செயல்களைச் சார்ந்து இளைஞர்கள் தடம் புரள்வது பற்றி கடந்த வாரம் பார்த்தோம். இந்தப் பிரச்சினைகளுக்கான காரணத்தைப் புரிந்துகொண்டு, பெற்றோர்களும் ஆசிரியர்களும் இளைஞர்களிடம் எப்படி மாற்றத்தைக் கொண்டுவரலாம்?:

* வகுப்புகளில் சிறுசிறு குழுக்களாகப் பிரித்து, ஒருவர் மாற்றி ஒருவரை தலைமைப் பொறுப்பை ஏற்கவைத்துப் பள்ளி சார்ந்த பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்கலாம். சிறுவயதில் தலைமைப் பண்பு வளரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

* பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்புகளைப் பாடமாக நடத்துவதைவிட சிறு குழு விவாதங்களாகவோ, நாடகங்களாகவோ (Role play) நடத்தலாம்.

* பள்ளிகளில் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களை வேறுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. அது அவர்களுடைய தனித்தன்மையைப் பாதிப்பதுடன் காழ்ப்புணர்ச்சியையும், தாழ்வுமனப்பான்மையையும் அதிகப்படுத்தி, குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டும்.

* மற்றவர்களிடம் பேசிப் பழகும் திறன் (Interpersonal skills), இதுபோன்ற வளர்இளம் பருவத்தினரிடம் பெரும்பாலும் குறைவாகக் காணப்படும். சிறுவயதிலேயே, மனதில் தோன்றும் பிரச்சினைகளை ஆரோக்கியமான வார்த்தை வடிவில் வெளிப்படுத்தும் திறனை வளர்க்க உதவ வேண்டும். மேலும் பிரச்சினைகளை விட்டு விலகிச் செல்வதைவிட, அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

* பொழுதுபோக்குக்காகச் சினிமா தியேட்டர்களை நாடி செல்வதைவிட ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களுக்கு வளர்இளம் பருவத்தினரை அவ்வப்போது அழைத்துச் சென்று, மற்றவர்களுக்கு உதவக் கற்றுக்கொடுக்க வேண்டும். மனித உயிரின் முக்கியத்துவத்தை இது அவர்களிடம் உணர்த்தும்.

* Attention defecit and hyperkinetic disorder (ADHD) என்று அழைக்கப்படும் அதீதத் துருதுருப்பு, கவனக்குறைவு மற்றும் அதிக எழுச்சிக்கு ஆளாகும் குழந்தைகள் வளர்இளம் பருவத்தில் அதிக அளவில் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், இப்படிப்பட்ட அறிகுறிகள் உள்ள குழந்தைகளை மனநல மருத்துவரிடம் காண்பித்துச் சிகிச்சை பெறுவது நல்லது.

* இது போன்றவர்களிடம் தீவிரக் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே போதைப்பொருள் பழக்கத்தைக் கண்டுபிடிக்க முடியும். அப்படி இருக்கும்பட்சத்தில் ஆரம்ப நிலையிலேயே மனநலச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது, நிலைமை கைமீறிச் செல்வதைத் தடுக்கும்.

(அடுத்த முறை: வாழ்க்கை வாழ்வதற்கே)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x