Last Updated : 06 May, 2014 03:34 PM

 

Published : 06 May 2014 03:34 PM
Last Updated : 06 May 2014 03:34 PM

இரவில் தூங்காமல் இருப்பது தப்பா?

எனது தங்கைக்கு (வயது 27) தலையில் கட்டி உள்ளதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அது புற்றுநோய் கட்டி என்றும், அதை எடுக்க இயலவில்லை என்றும், எடுக்கப்படாததால் அது தொடர்ந்து வளரக்கூடும் என்றும் தெரிவித்தனர். இதைச் சரி செய்ய உரிய ஆலோசனை தேவை.

முருகேஷ், கோவை

மூளை புற்றுக் கட்டிகள் சில மூளையின் முக்கியப் பகுதியில் பொதிந்து வளர்ந்துள்ளபோது அறுவை மூலம் நீக்க முடியாது. கட்டியின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்க, அதனால் ஏற்படும் தலைவலியைக் குறைக்கச் சித்த மருந்துகளை எடுப்பது நல்லது. அது முழுமையான தீர்வைத் தருமா என்பது குறித்த முடிவுகள் இதுவரை எட்டப்பட வில்லை. என்றாலும், புற்றுக் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைப்பதிலும், நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையை (quality of life) தருவதிலும் சித்த மூலிகைகள் பலனளிப் பது ஆய்வு அளவில் உறுதியாகியுள்ளது

கிரீன் டீ, புரோக்கோலி, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் (சணல் - ஃபிளேக்ஸ் விதைகளில் இருந்தும் சில வகை மீன்களில் இருந்தும் பெறப்படுபவை), பாலிஃபீனால்ஸ் அடங்கிய சிவந்த நிறமான மாதுளை முதலான நலம் தரும் உணவுகளை அதிகமாகப் பயன்படுத்துங் கள். இதன் மூலம் நோய் இருந்தாலும், வலி குறைந்த வாழ்க்கை சாத்தியம்.

கடந்த ஒரு வருடமாக இன்சோம்னியாவால் (துாக்கமின்மை) அவதிப்பட்டு வருகிறேன். இப்போது அந்தப் பிரச்சினை தீவிரமடைந்துவிட்டது. என்னால் பல நாட்களுக்கு இரவில் தூங்க முடிவதில்லை. சில நேரம் மயங்கிப் போகிறேன் (hallucinated). ஆனால், என் அறிவு மட்டும் விழிப்புடனே இருக்கிறது. இப்போது தினமும் etizola 0.5 உட்கொண்டுவருவதால், 5 மணி நேரம் தூங்க முடிகிறது. இந்தப் பிரச்சினையில் இருந்து நான் எப்படி விடுபடுவது? ஆலோசனை கூறுங்கள்.

கே.அருணாசலம், மின்னஞ்சல்

மூளை தொய்வின்றிப் பணிபுரியவும் உடல் வேலை செய்யவும் நல்ல உடற் பயிற்சியும் சரியான அளவில் உறக்கமும் மிகவும் அவசியம். உங்களது பிரச்சினை தீவிரமாக இருப்பதால், நவீன உறக்கமுண்டாக்கும் மருந்துகளின் உதவியைச் சில காலம் பெறுவது நல்லதுதான். கூடவே சித்த மருத்துவ, பாரம்பரிய அனுபவ உதவிகளைப் பெறு வதும் மிக அவசியம். அது நாளடைவில் எவ்வித மருத்துவ உதவியுமின்றி, உங்களை உறங்க வைக்க வழிகாட்டும்.

வரும்போது கழிப்பறை போய்க்கொள்ளலாம் என்பதும் நேரம் கிடைக்கும்போது தூங்கிக்கொள்ளலாம் என்பதும் மேற்கத்திய அணுகுமுறை.

நமது மூதாதையர்கள் எப்போதும் அப்படிச் சொன்னதில்லை. ‘பகலுறக்கஞ் செய்யோம்’ என்று சொல்லி, இரவு உறக்கத்தின் இன்றியமையாமையை எடுத்துச் சொன்னவர்கள் சித்தர்கள்.

தினசரி இரவில் குறைந்தபட்சம் 6 ½ மணி நேர உறக்கம் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியம். அதுவும் இரவு விளக்கெல்லாம் இல்லாத இருளில்தான் உடலுக்கு நல்லது செய்யும் ‘மெலடோனின்’ சத்து சுரக்கும். இரவில் அந்தச் சுரப்புத்தான் பகலெல்லாம் நாம் நமது செயலால், உணவால், சிந்தனை யால் கெடுத்த நம் உடலைப் பழுது நீக்கி, மறுநாள் ஓட்டத்துக்குத் தயார் செய்கிறது. புற்றுநோய் உள்ளிட்ட வாழ்க்கைமுறை நோய்களைத் தடுக்கிறது.

மாலை நேரத்தில் 45 நிமிடங்களில் 3 கிலோமீட்டர் தூரம் நல்ல வேகநடை செய்துவிட்டு, பின் வீட்டுக்கு வந்து வெந்நீரில் குளியலிடுங்கள். அது இரவில் சீக்கிரம் தூக்கத்தை வரவழைக்கும். மனதை ஒருமுகப்படுத்தித் தூங்க வைக்கும் யோக நித்திரை பயிற்சியைப் பிராணாயாமத்துடன் பயிலுங்கள். எளிய தியானப் பயிற்சியை முறையாகக் கற்றுக் கொண்டு, தினசரி செய்யுங்கள். உங்கள் HALLUCINATION பிரச்சினை மறையும்.

பசும்பாலில் ஜாதிக்காய்த் தூள் 2 சிட்டிகை போட்டு, அதில் அரை ஸ்பூன் அளவு அமுக்கராங்கிழங்கு பொடியையும் சேர்த்து, படுக்கும் முன்னர் இளஞ்சூட்டில் அருந்துங்கள். மனஅழுத்தம் சார்ந்த பிரச்சினை இருந்தால், அதற்குரிய மருத்துவ மூலிகைகளைச் சித்த மருத்துவரிடம் ஆலோசித்துப் பெற்று, எடுத்துக் கொள்ளுங்கள்.

மனம் - உறக்கம் - நரம்பியல் சார்ந்த மூளையின் இயக்கங்களில், பாதிப்பின்றிப் பணியாற்ற உதவும் சடாமாஞ்சில், வாலுளுவை, நீர்ப்பிரம்மி, சங்கு புஷ்பம் முதலான மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உண்டு.

உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குத் தீர்வு

பிரபல மருத்துவரும், எழுத்தாளருமான கு.சிவராமன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட அனைத்து கேள்விகளையும் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும்.

மின்னஞ்சல்: nalamvaazha@kslmedia.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

ஓவியம்: சதீஷ் வெள்ளிநெழி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x