Published : 25 Jan 2020 11:14 AM
Last Updated : 25 Jan 2020 11:14 AM

நானும் ஜானியும் சிகிச்சை கொடுக்கிறவங்க!

வா.ரவிக்குமார்

உறவுகளால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற இல்லங்களில் ஒடுங்கியிருக்கும் முதியவர்களுக்கு, சென்னையைச் சேர்ந்த ஷில்பா ராகவன் அனிமல் அஸிஸ்டட் தெரபி எனும் ஆற்றுப்படுத்தும் சிகிச்சையை அளித்துவருகிறார். உளவியலில் பட்டம் பெற்றிருக்கும் இவர், செல்லப் பிராணிகளைக் கொண்டு நோயாளிகளை ஆற்றுப்படுத்தும் சிகிச்சை முறையை ‘அனிமல் அஸிஸ்டட் தெரபி’ என்கிறார். இதற்கென்றே இவர் தொடங்கியிருக்கும் அமைப்பு ‘டேல்ஸ் வித் டெய்ல்ஸ்’!

தனது தீய பழக்கவழக்கத்தாலோ உறவுகளில் இருந்து தனிமைபடுத்தப்பட்டதாலோ பலவீனமான மனநிலையோடு வாழும் ஒருவருக்கு அளிக்கப்படும் ஆற்றுப்படுத்தும் சிகிச்சைகள் பல இருக்கின்றன. வண்ணங்களை, ஓவியங்களைக் கொண்டு அளிக்கும் சிகிச்சை, நடனத்தின் மூலமாக அளிக்கப்படும் சிகிச்சை, இசையின் மூலமாக அளிக்கப்படும் சிகிச்சை போன்றவை அவற்றுள் சில. இவற்றைப் போன்ற சிகிச்சை முறைகளில் ஆகச் சிறந்ததாக மேற்குலக நாடுகளில் கொண்டாடப்படுவதுதான் இந்த ‘அனிமல் அஸிஸ்டட் தெரபி’.

செல்லப் பிராணியும் நோயாளியும்

“குகைகளில் மனிதர்கள் வசித்த காலத்திலிருந்தே அவர்களோடு நெருக்கமாக இருந்தவை ஆடு, மாடு, கோழி, பூனை, நாய் போன்ற விலங்குகளும் பறவை இனங்களும். கிராமங்கள் மறைந்து நகர எல்லைகள் விரிவானதில் காணாமல் போனவற்றின் பட்டியலில், வீட்டில் நாம் வளர்த்த செல்லப்பிராணிகளும் அடங்கும்.

நகரத்திலும் தனி வீடுகள் வைத்திருப்போர் மட்டுமே யதார்த்தத்தில் செல்லப் பிராணிகளை வைத்திருக்க முடியும் என்னும் நிலை உருவாகிவிட்டது. இயல்பாக நம்மிடையே இருந்த விலங்குகளுடனான நேசம் இன்றைக்கு சிகிச்சை முறையாக மாறியிருக்கிறது என்கிறார் ‘அனிமல் அஸிஸ்டட் தெரபி’ குறித்து பென்சில்வேனியாவிலிருக்கும் ஹார்கம் கல்லூரியில் படித்திருக்கும் ஷில்பா.

தொடக்கத்தில் ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் வயதானவர்களுக்கு இந்த ஆற்றுப்படுத்தும் சிகிச்சையை அளித்த ஷில்பா, அதன்பின் சில மருத்துவமனைகளிலும் இந்த சிகிச்சையை நோயாளிகளின் விருப்பத்துக்கேற்ப அளித்திருக்கிறார். மது போதைக்கு ஆளானவர்களை மீட்கும் டி.டி.கே. மருத்துவமனையிலும் நோயாளிகளுக்கு இத்தகைய சிகிச்சையை அளித்துவருகிறார்.

“எல்லோருக்கும் இந்த தெரபி சரியாக வராது. யாருக்கு இந்த தெரபி தேவைப்படும் என்பதை அறிய சில உளவியல் சார்ந்த அணுகுமுறைகள் இருக்கின்றன. நோயாளி அவரின் சிறு வயதில் செல்லப் பிராணி ஏதாவது வளர்த்திருந்தாரா? செல்லப் பிராணிகள் குறித்து அவருக்கு இருக்கும் சில கருத்துகள். இதையெல்லாம் ஆலோசித்துதான் இந்த சிகிச்சைக்கு நோயாளியையும் செல்லப் பிராணியையும் தயார்படுத்த வேண்டும்.

தெரு நாயும் சிறந்ததுதான்!

இப்படிப்பட்ட சிகிச்சையை அளிப்பதற்குக் குறிப்பிட்ட சில இன நாய்களைப் பரிந்துரைக்கின்றனர். சில இனங்கள் இயல்பிலேயே ஆக்ரோஷமானவையாக இருக்கும். சில இனங்கள் வளர்ப்பவரிடத்தில் நட்பாக இருக்கும். ஆனால், எல்லோரிடமும் நட்பு பாராட்டுவது சில செல்லப் பிராணிகளின் இயல்பான குணமாக இருக்காது. இயல்பாக நட்பாக பழகும் வீட்டு விலங்குகளைத்தான் ஆற்றுப் படுத்தும் சிகிச்சைக்குப் பழக்க முடியும். தெருவில் கண்டெடுத்து நான் தத்தெடுத்து வளர்த்துவரும் ஜானிதான், பிரத்யேகமாக நோயாளிகள் சிலருக்கு நான் சிகிச்சை அளிப்பதற்கு உதவுகிறது. நோயாளியிடம் எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றித் தன்னை ஒப்புக்கொடுக்கும் செல்லப் பிராணிகள்தாம் இந்த சிகிச்சைக்கு முதன்மையான மருந்து. அதனால்தான் அவர்களின் உதவி முக்கியம் என்கிறேன்.

விலங்குக்கும் ஆயுள்காப்பீடு

ஒரு நாளில் ஒரு தெரபி என்பது ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம்தான் கொடுக்க முடியும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இதற்குப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அங்கு மருத்துவ ஆயுள் காப்பீட்டில்கூட இந்த தெரபியைச் சேர்த்திருக்கின்றனர். ஒரு தெரபி விலங்கால் நோயாளி பாதிக்கப்பட்டாலோ, நோயாளியால் தெரபி விலங்கு பாதிக்கப்பட்டாலோ இருவருக்கும் இது பொருந்தும். இந்த தெரபியை அளிப்பதில் நான் என்னுடைய பார்ட்னராகத்தான் ஜானியைப் பார்க்கிறேன். அதனால் நான் வாங்கும் தொகையில் அவனுக்கான மருத்துவத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

சிகிச்சைக்கு உதவும் பிராணிகள்

வீட்டுச் செல்லப் பிராணிகளில் எலி இனத்தில் ஒரு வகை, முயல், பூனை, பன்றி்க்குட்டி ஆகியவற்றையும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பறவைகளையும் இதற்குப் பழக்கப்படுத்துகின்றனர். பறவைகளை அப்படிப் பழக்குவது தவறு என்பது என்னுடைய கருத்து. அதனால் அதை நான் செய்வதில்லை. ஆதி காலத்திலிருந்தே செல்லப் பிராணிகளோடு மனிதர்களுக்குப் பெரிய அளவுக்கு உணர்வுரீதியான நெருக்கம் இருக்கிறது. அதுதான் இந்த தெரபிக்கு அடிப்படை.

சிலருக்கு தெரபி விலங்கைத் தொடுவதன்மூலமே அவர்களின் மனம் சந்தோஷப்படும். தன்னம்பிக்கை மிகவும் குறைந்து காணப்படும் நோயாளிகளிடம் செல்லப் பிராணிகளின் கதையையும் கூறுவோம். உதாரணத்துக்கு ஜானியைத் தெருவில்தான் கண்டெடுத்தேன். ஆனால், தற்போது சிகிச்சை அளிக்கும் செல்லப் பிராணியாக அது மாறியிருக்கும் கதையைக் கூறுவேன். இதுபோன்ற நிஜக் கதைகள்கூடச் சில நோயாளிகளுக்கு உத்வேகம் அளிக்கும்.

அதேபோல் அவர்களின் தனிப்பட்ட வலிகளை, பிரிவுகளை, எதிர்பார்ப்புகளை தெரபி விலங்குகளுடன் பகிர்ந்துகொள்வார்கள். மனிதர்களேகூட சில நேரங்களில் அடுத்தவரின் பிரச்சினைகளைக் கேட்கும்போது, ஏனோதானோவென்று அலட்சியத்துடன் நடந்துகொள்வதற்கு வழி இருக்கிறது. ஆனால் தெரபி விலங்கு, சைகாலஜிஸ்ட், தெரபி விலங்கின் பாதுகாவலர், நோயாளி இவர்களுக்கு இடையே பகிர்ந்துகொள்ளப்படும் விஷயங்களின் ரகசியம் காக்கப்படும் என்னும் உத்தரவாதத்துடனே இந்த தெரபி நடக்கும்” என்கிறார் ஷில்பா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x