Published : 29 Aug 2015 03:13 PM
Last Updated : 29 Aug 2015 03:13 PM

வல்லமை மிக்க கீரை

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. சரஸ்வதி கீரை என்று இன்னொரு பெயரும் உண்டு. இந்தக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் 'ஏ', வைட்டமின் 'சி', ஏராளமான தாதுஉப்புக்கள் அடங்கியுள்ளன.

ரத்தத்துக்குத் தேவையான சத்துகளை, சரியான அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவேதான், இதைச் சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இதனாலேயே 'வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே' என்ற பழமொழியும் ஏற்பட்டது.

மருத்துவப் பயன்கள்

அவரை விதை வடிவமுடைய இலைகளைக் கொண்ட வல்லாரை, ஏழு பிரதான நரம்பமைப்பைக் கொண்டது. இந்தத் தாவரத்தின் எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை.

l உடலின் வலு அதிகரிக்கவும் வைரஸ் நோய்க்குப் பிறகு உடல் தேறவும் உதவுகிறது.

l தூக்கமின்றித் தவிப்பவர்களுக்கு நல்ல மருந்தாகிறது.

l ரத்தக்குழாய்களை நெகிழ்வடையச் செய்கிறது.

l நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

l காலை வேளையில் வல்லாரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை செயலாற்றல் பெறும்.

l இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கும்.

l இதிலுள்ள ஏஸியாடிக்கோசைடு என்னும் பொருள், புண்களைக் குணமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

l மூளைச் சோர்வை (Mental fatique) நீக்கிச் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.

மனநோய்கள் மறைய...

சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக மென்று தின்னவும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் பசும்பால் அருந்தவும். கூடியவரை உப்பு, புளி குறைத்த உணவை உண்டுவந்தால், மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல மனம் சார்ந்த நோய்களும் தீரும்.

தவிர்க்க வேண்டியவை

l இதை உண்ணும் காலங்களில் மாமிச உணவு, அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றை உண்ணக் கூடாது. புளி, காரத்தை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.

l இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப் பயன்படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும்.

l வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

எளிய வைத்தியம்

ரத்தச் சோகைக்கு (Anaemia):

1/2 தேக்கரண்டி வல்லாரை இலைச்சாற்றுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து 1 மாதம் அருந்தவும்.

மன அமைதிக்கு:

வல்லாரை இலைகளைக் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தினமும் 1/4 தேக்கரண்டி சூரணத்தைத் தேன் அல்லது பசும்பாலோடு சேர்த்து உட்கொள்ளவும்.

தூக்கமின்மை:

1/2 தேக்கரண்டி வல்லாரை பொடியை 1 க தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, இரவில் படுக்கும் முன் குடிக்கவும்.

ஞாபகமறதி:

5 வல்லாரை இலைகளை இடித்துச் சாறெடுத்து, ஒரு தேக்கரண்டி தேனோடு சேர்த்துத் தினமும் உண்ணவும்.

அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று, அடுத்த நான்கு மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், பயம் போன்ற மனநோய்கள் விலகும்.

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ,

தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x