Published : 02 Nov 2019 10:39 AM
Last Updated : 02 Nov 2019 10:39 AM

மருத்துவம் தெளிவோம் 07: நரம்புகள் நலமா? சர்க்கரை நோயாளிகள் கவனம்!

டாக்டர் கு. கணேசன்

சர்க்கரை நோய் கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவது இயல்பு. அந்தப் பாதிப்புகளுக்கு ‘டயபடிக் நியூரோபதி’ (Diabetic neuropathy) என்று பெயர். அந்தப் பாதிப்பு ஏன் வருகிறது? எப்படி வருகிறது? என்ன தீர்வு?

ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தாததுதான் இதற்கு முக்கியக் காரணம். ரத்தச் சர்க்கரை அதிகமாகும்போது அது ‘சார்பிட்டால்’ எனும் வேதிப்பொருளாக மாறி நரம்புகளில் ஒட்டிக்கொள்ளும். அது இலையைத் தின்னும் பூச்சிபோல நரம்பிழைகளைத் தின்னும். இதனால் நரம்புகளின் தகவல் பரிமாற்றம் தடைப்படும். மேலும், இவர்களுக்கு நுண்ணிய ரத்தக்குழாய்களும் பாதிக்கப்படுவதால், நரம்பு முனை களுக்குப் போதிய ஊட்டச்சத்தும் ஆக்ஸிஜனும் கிடைக்காது. இது அந்தப் பாதிப்பை அதிகப்படுத்தும்.

அடுத்து, சர்க்கரை நோய் காரண மாகச் சிறுநீரகமும் பாதிக்கப்படுவதால், ரத்தத்தில் சில நச்சுக்கள் சேரும். அவை நரம்புச் சுவர்களைச் சிதைக்கும். இவர்களுக்குப் புகைபிடிக்கும் பழக்கமும் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகும். புகையில் உள்ள நச்சுக்கள் ரத்தக்குழாய்களைச் சுருக்கிவிடுவதால், உறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய ரத்தம் குறைந்துவிடுவதுதான் காரணம்.

யாருக்கு இந்தப் பாதிப்பு அதிகம்?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எவருக்கும் இது வரலாம். என்றாலும், எப்போதும் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பவர்களுக்கு இது வேகமாக வந்துவிடும். உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன், ரத்த மிகு கொலஸ்டிரால், புகை/மதுப் பழக்கங்கள் உள்ளவர்களுக்கு இதற்கான சாத்தியம் அதிகம்.

நரம்பு பாதிப்புகள் எல்லாமே ஒரே வகைதானா? வெவ்வேறா?

நரம்பு பாதிப்புகளில் புற நரம்பு பாதிப்பு, தானியங்கு நரம்பு பாதிப்பு, அண்மை நரம்பு பாதிப்பு, குவிய நரம்பு பாதிப்பு எனப் பல வகை உண்டு. ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. இவற்றில் அதிகம் காணப்படுவது, ‘புற நரம்பு பாதிப்பு’ (Peripheral neuropathy). இதில் கை, கால், பாத நரம்புகள் பிரதானமாகப் பாதிக்கப்படும். இந்தப் பாதிப்பு இருப்பவர்களுக்குக் கை, கால் மரத்துப்போகும்; எரிச்சல் ஏற்படும்; ஊசி குத்தும் வலி உண்டாகும்; இந்தத் தொல்லைகள் இரவில் அதிகமாக இருக்கும்; சிலருக்குத் தொடு உணர்வு அதிகரிக்கும்; பாதங்களில் போர்வை பட்டால்கூடச் சுமையாகத் தோன்றும்; நடந்தால் மெத்தைமேல் நடப்பது போலிருக்கும்; பலருக்குச் செருப்பு கழன்று போவதுகூடத் தெரியாது. அந்த அளவுக்கு உணர்வு குறைந்து போகும்; பாதங்களில் கூர்மையான பொருட்கள் குத்தினாலும் தெரியாது என்பதால் அடிக்கடி பாதங்களில் தொற்றும் புண்களும் உண்டாகும்.

‘அண்மை நரம்பு பாதிப்பு’ என்பது என்ன? கேள்விப்படாததாக இருக்கிறதே! நாற்பது வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு ‘அண்மை நரம்பு பாதிப்பு’ (Proximal neuropathy) ஏற்படுகிறது. இதில் புட்டம், இடுப்பு, தொடை நரம்புகள் பெரிதும் பாதிக்கப்படும். அப்போது இடுப்பில்/ புட்டத்தில் / முன் தொடையில் திடீரென்று கடுமையாக வலிக்கும். தொடக்கத்தில் தொடை வலி ஒரு பக்கத்தில் மட்டுமே ஏற்படும். போகப்போக இரண்டு பக்கமும் வலிக்கும். அத்தோடு, சம்மணம்போட்டு உட்கார்ந்து எழுந்தி ருப்பதும் படிகளில் ஏறுவதும் சிரமப்படும். தொடைத் தசைகள் சுருங்கிவிட்டதுபோல் தெரியும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதய நரம்புகளும் பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். அது உண்மையா?

உண்மைதான். இது தானியங்கி நரம்புகள் பாதிக்கப்படுவதால் (Autonomic neuropathy) ஏற்படும் விளைவு. இதயம் மட்டுமல்ல, நுரையீரல், கண், சிறுநீரகம், வாய், உணவுக்குழாய், இரைப்பை, குடல், பாலின உறுப்புகள் ஆகியவற்றையும் தானியங்கி நரம்புகளே கட்டுப்படுத்துகின்றன. ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறினால் இந்த உறுப்புகள் பாதிக்கப்படுவதுண்டு. உதாரணமாக, இதய நரம்புகள் பாதிக்கப்பட்டால் இதயம் ஒழுங்கற்றுத் துடிக்கும். படபடப்பு வரும். ரத்த அழுத்தம் குறையும். உட்கார்ந்து எழுந்திருக்கும்போது தலைசுற்றும்.

மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சில் வலி வருவதை நமக்கு உணர்த்துவது தானியங்கு நரம்புகளே. ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த நரம்புகள் பாதிக்கப்படுவதால் மாரடைப்பு வரும்போது நெஞ்சில் வலி தெரிவதில்லை. அமைதியான மாரடைப்பு (Silent heart attack) வருகிறது. சிலருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்படுவதும் இப்படியே. இது ஓர் ஆபத்தான நிலைமை.

இதேபோல் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தாலும் இவர்களுக்குத் தெரிவதில்லை. ரத்தச் சர்க்கரை குறையும்போது உடல் வியர்க்கும். கைகால் நடுங்கும். தானியங்கு நரம்பு பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் தெரியாது. இதுவும் ஓர் ஆபத்தான பாதிப்பே. உறக்கத்தில் ரத்தச் சர்க்கரை குறைந்துவிட்டால் அதை உணர முடியாமல் உயிரிழப்புகூட ஏற்படலாம்.

பாதிக்கப்படுவது வாய்/உணவுக்குழாய் நரம்பு என்றால், உதடுகள் உலர்ந்து போகலாம். விழுங்குவதில் சிரமம் ஏற்படலாம். குடல் நரம்புகள் பாதிக்கப்பட்டால் அடிக்கடி வயிற்றில் வாயு சேரும்; ஏப்பம் உண்டாகும். மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறி மாறித் தொல்லை கொடுக்கும். மலத்தை அடக்க முடியாமல் போகும்.
பாதிக்கப்படுவது சிறுநீர்ப்பை நரம்பு என்றால், சிறுநீரை அடக்க முடியாது.

அவசரமாக வருவதுபோல் இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். ஆனால், சிறுநீர் கழிப்பது சிரமமாக இருக்கும். இரவில் இந்தத் தொல்லை அதிகமாக இருக்கும். அடிக்கடி உறக்கத்தில் எழுப்பிவிடும். பாலின நரம்பு பாதிக்கப் படும்போது ஆண்களுக்கு விரைப்புத் தன்மை குறைவதும் பெண்களுக்குப் பிறப்புறுப்பு உலர்வதும் உண்டு.

‘ஒற்றை நரம்பு பாதிப்பு’ என்பது என்ன?

உடலில் குறிப்பிட்ட ஒரு நரம்பு மட்டும் பாதிக்கப்படும் நிலைமை இது (Mononeuropathy); திடீரென்றுதான் வரும் உதாரணமாக, கண்ணுக்கு வரும். மூன்றாவது மத்திய நரம்பு பாதிக்கப்படுமானால், கண்ணுக்குப் பின்னால் கடுமையாக வலிக்கும். ஆறாவது மத்திய நரம்பு பாதிக்கப்படுகிறது என்றால், பார்க்கும் பொருளெல்லாம் இரண்டிரண்டாகத் தெரியும். முக நரம்பு பாதிக்கப்படும்போது முகவாதம் (Bell’s palsy) வரும். முகத்தில் ஒரு பக்கத்தில் தசைகள் இயங்காது என்பதால், பேசும்போது வாய் ஒரு பக்கமாகக் கோணும்.

ஒரு பக்க இமை மூடாது. கைக்கு வரும் நடுநரம்பு (Median nerve) பாதிக்கப்படுகிறது என்றால், விரல்களில் வலி, கூச்ச உணர்வு, மதமதப்பு, பலவீனம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் கையில் எடுக்கும் பொருட்களை அடிக்கடி கீழே போட்டுவிடுவார்கள். ஒற்றை நரம்பு பாதிப்பில் ஒரு நல்ல செய்தியும் உண்டு. இவை எல்லாமே சில மாதங்கள் இருந்துவிட்டு முழுமையாக மறைந்துவிடும்.

இதற்கு என்ன தீர்வு? இதைத் தடுப்பதற்கு வழி உண்டா?

ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதுதான் இதற்கான தீர்வு. இன்சுலின் சிகிச்சை, ஆரோக்கியமான உணவு முறை, தேவையான உடற்பயிற்சி மூலம் இது சாத்தியமாகும். உடல் எடையைச் சரியாகப் பேணுவதும் பாதப் பராமரிப்பும் பொருத்தமான காலணிகள் அணிவதும் முக்கியம். ரத்த அழுத்தம், ரத்த கொலஸ்டிரால் அளவுகளைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

மது, புகைப் பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை ‘பயோதிசியோமெட்ரி' (Biothesiometry) என்னும் பாதப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட வழிகளில் நரம்புகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் தள்ளிப்போடவும் முடியும். பொதுவாக, நரம்புப் பிரச்சினைகளைத் தொடக்கத்தி லேயே கவனித்துவிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும். தாமதமானால் சிரமமாகிவிடும்.

கட்டுரையாளர்,
பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x