Published : 28 Sep 2019 10:16 AM
Last Updated : 28 Sep 2019 10:16 AM

ஆரோக்கியமான உணவு

உடல்நலத்துக்கு முக்கிய மானது ஆரோக்கியமான உணவு. இதய நோய்களைத் தடுப்பதற்கும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது சிறந்த தீர்வாக இருக்கிறது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் இதயத்துக்கு நல்லது. பீன்ஸ், கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைவான கொழுப்பு கொண்ட பால் பொருட்கள், இறைச்சி, மீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

உப்பு, சர்க்கரை போன்றவற்றைக் கூடுமானவரை குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள். நிறை கொழுப்பு, நிறைவுறாக் கொழுப்பு ஆகியவற்றை அளவுடன் எடுத்துக்கொள்வது அல்லது தவிர்த்துவிடுவது நல்லது. ஆனால், அதற்காக முற்றிலும் கொழுப்புச்சத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை. பாதாம், அக்ரூட், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதயத்திலுள்ள கெட்ட கொழுப்புச்சத்தைக் குறைக்க இந்த உணவுப்பொருட்கள் உதவுகின்றன.

ஒருநாளில், ஐந்து அல்லது பத்து முறை பழங்கள், காய்கறிகளைக் கொஞ்சமாகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது இதய நோய்களைக் கட்டுப்படுத்துவதுடன் ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். சூரை (Tuna), சல்மன் (Salmon) ஆகிய மீன் வகைகளை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் இதய நோய் ஆபத்தைக் குறைக்கலாம். மது அருந்தும் பழக்கம் இருந்தால் அதைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது இதயத்துக்கு நல்லது. கட்டுக்கடங்காத மதுப் பழக்கம் இதயத்துக்கு ஆபத்தையே விளைவிக்கும்.

ஆரோக்கியமான தூக்கம்

தூக்கமின்மை உடல் ஆரோக்கி யத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடிய அம்சமாக இருக்கிறது. போதுமான தூக்கம் இல்லாதவர்கள் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கு சாத்தியம் அதிகம். பெரியவர்களுக்கு அன்றாடம் 7 அல்லது 9 மணி நேரத் தூக்கம் அவசியம் தேவை.

ஆனால், காலையில் உங்களால் நினைத்த நேரத்துக்கு எழுந்துகொள்ள முடியாமல் தொடர்ச்சியாகச் சிரமப்பட்டால் உங்களுக்குக் கூடுதல் தூக்கம் தேவைப்படுகிறது என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையின் முன்னுரிமையாகத் தூக்கத்தை மாற்றுங்கள். தூங்குவதற்கான நேரத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். அன்றாடம் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுந்துகொள்வது ஆரோக்கியமானது. உங்கள் படுக்கையறையை அமைதியாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதும் இதில் அடக்கம்.

‘நகர்ப்புற, கிராமப்புற நோய்த் தொற்று தொலைநோக்குப் பார்வை’ (PURE) என்ற தலைப்பில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள் சமீபத்தில் லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியிருக்கின்றன. ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 21 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நாடுகளில் வருமான அளவீடுகளைக் கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இதய நோய்களே இறப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வருமானம் கொண்ட நாடுகள் இதய நோய்களைக் கட்டுப்படுத்தியிருக்கின்றன. இந்தியா போன்ற குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இதய நோய்களால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க இன்னும் முறையான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம் என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியிருக்கிறது.

மன அழுத்தத்தைத் தவிர்த்தல்

மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காகச் சிலர் அதிகமாகச் சாப்பிடுவது, மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். இது இன்னும் தீவிரமான பாதிப்புகளையே ஏற்படுத்தும். அன்றாட மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, தியானம் போன்றவைதான் சரியான தீர்வாக இருக்கும்.

மருத்துவப் பரிசோதனைகள்

உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு போன்றவை உங்கள் இதய, ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினையை மருத்துவப் பரிசோதனை செய்யாமல் உங்களால் கண்டறிய முடியாது. அதனால், 40 வயதுக்கு மேலானவர்கள் ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து அளவுகள், நீரிழிவு போன்ற மருத்துவச் சோதனைகளைக் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது செய்துகொள்வது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x