Published : 24 Aug 2019 11:04 AM
Last Updated : 24 Aug 2019 11:04 AM

சவ்ரிமுத்து உருவாக்கிய சானடோரியம்

மிது கார்த்திக்

தொண்ணூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த தாம்பரம் சானடோரியம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சென்னைக்கு வந்தது. பல தசாப்தங்களுக்கு முன்னர் தாம்பரம் - குரோம்பேட்டைக்கு இடைப்பட்ட பகுதியில் தொடங்கப்பட்ட மருத்துவமனையே சானடோரியத்தின் அடையாளம்.

நூறாண்டுகளுக்கு முன்பு ‘டியூபர்குளோசிஸ்’ (டி.பி.) என்றழைக்கப்படும் காசநோய் மிகக் கடுமையான உயிர்க்கொல்லி நோயாகப் பார்க்கப்பட்டது. ‘ஆன்ட்டிபயாடிக்’ மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்வரை காசநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது மிகவும் சிக்கலாகவே இருந்தது. அதுபோன்ற சூழ்நிலையில் காசநோயால் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்குச் சிறப்பு மருத்துவமனைகள் தேவைப்பட்டன.

மருத்துவ ரிசார்டுகள்

பிரிட்டிஷ் நெஞ்சக மருத்துவரான ஜார்ஜ் பேடிங்டன் என்பவர் காசநோயாளிகளுக்காக 1836-ல் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் அருகே சானடோரியம் ஒன்றை நிறுவி சிகிச்சை அளித்தார். அந்தக் காலகட்டத்தில் மருத்துவ ரிசார்ட்டாகவே இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நோயாளிகளை நீண்டகாலம் தங்கவைத்துச் சிறப்புச் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பிறகு ஐரோப்பாவில் உள்ள பிற நாடுகளிலும் காசநோய் சிகிச்சைக்காக சானடோரியங்கள் உருவாகின.

யார் இந்த சவ்ரி முத்து?

ஐரோப்பாவில் உருவான சானடோரியங்களின் நீட்சியாகவே சென்னை தாம்பரத்திலும் சானடோரியம் வந்தது. தாம்பரத்தில் சானடோரியம் அமைந்ததற்கு முழுக் காரணமாக இருந்தவர் டாக்டர் டேவிட் ஜேக்கப் ஆரோன் சவ்ரி முத்து என்ற மருத்துவரே. 1864-ல் பிறந்த சவ்ரி முத்துவின் தொடக்ககாலம் பற்றிய தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை. இங்கிலாந்தில் எம்.டி., எம்.ஆர்.சி.எஸ். பட்டம் பெற்ற மருத்துவர் இவர். பிரிட்டனிலிருந்தபோது, நிறவெறியின் தாக்கத்தை எதிர்கொண்டவர்.

என்றபோதும், 1891-ல் மார்க்ரெட் ஃபோக்ஸ் என்ற பிரிட்டிஷ் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். காசநோய் உள்பட நெஞ்சக மருத்துவத்தில் கைதேர்ந்தவராக இருந்தார் சவ்ரி முத்து. சுற்றுப்புறத் தூய்மை, தூய காற்றை சுவாசித்தல் போன்ற விழிப்புணர்வுடன் கூடிய சிகிச்சையை அளித்துவந்த சவ்ரிமுத்து, 1900-ல் இங்கில்வுட் சானடோரியம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பிறகு 1910-ல் சாமர்செட் பகுதியில் உள்ள மெண்டிப் மலைப்பகுதியில் சானடோரியம் ஒன்றை விரிவாக்கி காசநோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தார். சானடோரியம் அமைத்து சிகிச்சை அளிப்பதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவராக விளங்கிவந்தார் சவ்ரிமுத்து.

சவ்ரி முத்து ஏற்படுத்திய சானடோரியம்

சவ்ரி முத்துவுக்கு மகாத்மா காந்தியுடன் அறிமுகம் இருந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்கு வரத் தொடங்கிய சவ்ரி முத்து, 1920-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக காலம் இந்தியாவில் தங்கினார். அப்போது சென்னைக்கு வந்தவர், இந்தப் பகுதியில் காசநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக சானடோரியம் ஒன்றை நிறுவ விரும்பினார். அதற்காகத் தாம்பரத்தில் பச்சை மலை அடிவாரத்தைத் தேர்வுசெய்தார். 1928-ம் ஆண்டில் 250 ஏக்கர் பரப்பில் அந்தப் பகுதியில் சானடோரியத்தை சவ்ரி முத்து அமைத்தார். 12 படுக்கைகளுடன் ரிசார்ட் குடில்கள் போல சானடோரியத்தை அமைத்து சிகிச்சையைத் தொடங்கினார். அதே காலகட்டத்தில் சவ்ரிமுத்துவுடைய மனைவி இங்கிலாந்தில் மரணமடையவே, 1930-ல் பிரிட்டனுக்குத் திரும்பினார். அப்போது சானடோரியத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துவிட்டுதான் சென்றார்.

சானடோரியத்தின் வளர்ச்சி

அதை ஏற்று 1935-ல் பிரிட்டிஷ் ஆளுகையின்கீழ் இருந்த மெட்ராஸ் மாகாண அரசு, தாம்பரம் சானடோரியத்தை ஏற்று நடத்தியது. இதன்பின்னர் சானடோரியத்தில் அறுவை சிகிச்சை அரங்கு, எக்ஸ்ரே வசதி, ஆய்வக வசதி, படுக்கை வசதி ஆகியவை உருவாக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் இந்த சானடோரியம் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றது. நாடு விடுதலைபெற்ற பிறகு மத்திய அரசு தாம்பரம் சானடோரியத்தில் காசநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அங்கே தங்கியிருந்த நோயாளிகளுக்குத் தொழில் வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. 1976-ம் ஆண்டில் 750 படுக்கை வசதிகளுடன் சானடோரியத்தைத் தமிழக அரசு விரிவுபடுத்தியது.

எய்ட்ஸ் நோய்க்கும் உண்டு சிகிச்சை

1993-ல் எய்ட்ஸ் நோய் அறிகுறிகளுடன் காசநோய்க்காக இங்கே தங்கி இருவர் சிகிச்சை பெற்றனர். எய்ட்ஸ் நோயாளிகளுக்கெனத் தாம்பரம் சானடோரியத்தில் சிகிச்சை தொடங்கியது அப்போதுதான். அத்துடன் அதன் கண்காணிப்பாளராக புகழ்பெற்ற மருத்துவர் செ.ந. தெய்வநாயகம் இருந்தபோது எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அலோபதி - சித்த கூட்டு மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டது. தற்போது ‘தாம்பரம் டிபி சானடோரியம்’ அறியப்படும் இந்த மருத்துவமனை தமிழகத்திலேயே காசநோயாளிகளுக்கென பிரத்தியேகமான மருத்துவமனையாகச் செயல்பட்டுவருகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய எய்ட்ஸ் நோய் மையமாகவும் தாம்பரம் சானடோரியம் இப்போது உள்ளது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கெனத் தனித்தனி சிகிச்சைப் பிரிவுகளும் இங்கே இயங்கிவருகின்றன. பிரிட்டிஷ் இந்தியாவில் குடில்களுடன் தொடங்கிய இந்த சானடோரியம், இன்று சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையாகவும் கிரேட்டர் சென்னையின் தனி அடையாளமாகவும் உருவெடுத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x