Last Updated : 30 May, 2015 02:38 PM

 

Published : 30 May 2015 02:38 PM
Last Updated : 30 May 2015 02:38 PM

நின்று கொல்லும் புகை: சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள்- மே31

சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள் மே 31

உலகில் எக்குத்தப்பாக எகிறிக்கொண்டிருக்கிறது புகைபிடிக்கும் பழக்கம். புகைபிடிக்கும் பழக்கத்தால் வரும் நோய்கள் காலம்காலமாக உயிரைக் காவு வாங்கிக்கொண்டிருக்கின்றன. இது ஒரு புறம் இருக்க, புகைபிடிப்பவர்கள் விடும் புகையைச் சுவாசித்துப் பாதிப்புகளுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆண்களுக்குப் போட்டியாகப் பெண்களும் புகைபிடிக்க ஆரம்பித்திருப்பது மிகப் பெரிய பிரச்சினையாக உருமாறிவருகிறது. புகைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள், நோய்கள், தடுப்பு நடவடிக்கைகளை உலகச் சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது:

புகையின் தாக்கம்

# சிகரெட் மட்டும்தான் என்றில்லை, பீடி, பான் பொருட்கள், புகையிலை மெல்லுதல் என எல்லா வகை புகையிலைப் பொருட்களும் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவு வாங்கிக் கொண் டிருக்கின்றன.

# ஒவ்வோர் ஆண்டும் புகை யிலை பழக்கங்கள் 60 லட்சம் பேரைக் கொல்கின்றன. இதில் 50 லட்சம் பேர் நேரடியாகப் புகைப்பவர்கள். 6 லட்சம் பேர் புகைப்பவர்கள் விடும் புகையைச் சுவாசிப்பதால் மட்டும் இறப்பவர்கள்.

# புகைபிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும்.

# புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழை, வளரும் நாடுகளில் வாழ்கிறார்கள்.

# உலகளவில் 10 சதவீத வருவாய் புகையிலை சார்ந்த பொருட்கள் மூலம்தான் கிடைக்கிறது. பொருளாதார ரீதியில் இது நல்லதாகப் பார்க்கப்பட்டாலும், சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம், தேவையற்ற மருத்துவச் செலவு, மனித உழைப்பு வீணடிப்பு ஆகியவற்றையும் சேர்த்தே இந்தப் பிரச்சினையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில்...

# இந்தியாவில் 53 சதவீதம் ஆண்களும் 3 சதவீத பெண்களும் புகைப் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

# புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய் இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு வருகிறது. புகையிலையால் உருவாகும் புற்றுநோய்களில் இதுவே அதிகம்.

# 2020-ம் ஆண்டில் இந் தியாவில் 13 சதவீத இறப்புகளுக்குப் புகையிலைப் பழக்கமே காரணமாக இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பாதிப்புகள்

# புகைபிடிப்பவர்கள் புகையை மட்டும் விடுவதில்லை. அதோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான நச்சுகளையும் வெளியிடுகின்றனர். இந்த நச்சுகளில் 250 நச்சுகள் கொடிய தீங்கு விளைவிப்பவை. 69 நச்சுகள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை.

# புகைபிடிப்பவர்களில் பாதி பேரின் மரணத்துக்கு நச்சு கலந்த புகையைச் சுவாசிப்பதுதான் முதன்மைக் காரணம்.

# எந்த வடிவத்தில் புகையிலையைப் பயன்படுத்தினாலும் வாய், தொண்டை, நுரையீரல், உணவுக் குழாய், வயிறு, சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளில் அது புற்று நோயை ஏற்படுத்திவிடுகிறது.

# ஒவ்வோர் ஆண்டும் 1.50 கோடிப் பெண்கள் புகையிலை பயன்பாட்டால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இறக்கிறார்கள்.

# சிகரெட்டில் நோயை உண்டாக்கக் கூடிய கார்பன் மோனாக்சைடு நச்சு அதிகம் உள்ளது. தொடர்ந்து புகைப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப் பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்று நோய் ஏற்படலாம். மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காச நோய், மலட்டுத் தன்மை என மற்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

பக்கத்தில் நின்றால்

# புகைப்பவர்கள் விடும் புகையைச் சுவாசிக்கும் வயதுவந்தோரில் பலரும் கடுமையான சுவாச நோய்களுக்கும், இதய நோய், நுரையீரல் புற்று நோய்க்கும் ஆளாகிறார்கள். புகையைச் சுவாசிக்கும் சிசுக்களுக்குத் திடீர் மரணம் ஏற்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் எடை குறைந்த குழந்தையைப் பிரசவிக்கிறார்கள்.

# வீட்டில் புகைபிடிப்பதால் 40 சதவீதக் குழந்தைகள், அது சார்ந்த நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதில் 31 சதவீதம் பேர் இறக்கவும் செய்கிறார்கள்.

# புகைப்பவர்கள் விடும் புகையைச் சுவாசிக்கும் குழந்தைகளுக்குக் காது தொற்று, ஆஸ்துமா பாதிப்பு, சுவாசக் கோளாறுகள் உண்டாகின்றன.

# பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி ஆகிய நோய்களுக்குப் புகையிலைப் புகைதான் முதன்மைக் காரணம்.

# வீட்டில் யாராவது ஒருவர் புகைப்பதால் புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத மற்றவர், ஒன்றரை முதல் இரண்டு மடங்கு புகையைச் சுவாசிக்கிறார்.

எப்படித் தடுக்கலாம்

# புகைபிடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அது தொடர்பான சட்டங்கள் உலகளவில் 94 சதவீத மக்களைப் பாதுகாக்கவில்லை

# புகைபிடிக்கத் தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டாலும்கூடப் புகைபிடிப்பவர்கள் விடும் புகையிலிருந்து மற்றவர்களைப் பாதுகாக்க முடிவதில்லை. 100 சதவீதப் புகையில்லாப் பகுதியை உருவாக்கினால் மட்டுமே, புகை பரவுவதைத் தடுக்க முடியும்.

# புகைபிடிப்பதைத் தடுக்கப் புகையிலை மீதான வரிகளை அதிகரிப்பது முக்கியமான வழி.

# சிறுவர்களுக்குப் புகையிலை சார்ந்த பொருட்களை விற்க முழுமையான தடை விதிக்க வேண்டும்.

# புகைபிடிப்பவர்கள் அந்தப் பழக்கத்தைக் கைவிட ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும். மன நல, மருத்துவ உதவிகள் இரண்டும் தேவை. புகைபிடிப்பதை ஒருவர் கைவிட்டால், அதன் பிறகு மீண்டும் அந்தப் பழக்கத்தை மீண்டும் தொடராமல் இருக்கத் தொடர் கவுன்சலிங்கும் அவசியம்.

பெண்களும் புகையும்

# ஆண்களுக்குப் போட்டியாகப் பெண்களும் அதிக அளவில் புகைபிடிக்கிறார்கள் என்கிறது உலகச் சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு. உலகம் முழுவதும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ள 100 கோடிப் பேரில் 20 கோடிப் பேர் பெண்கள் என்கிறது ஓர் ஆய்வு.

# பெண்கள் புகைபிடிப்பது சில நாடுகளில் வேகமாக அதிகரித்துவருகிறது. பல்வேறு காரணங்களுக்காகப் பதின்ம வயதுப் பெண்களும் புகைபிடிக்கிறார்கள்.

# பெண்கள்தான் என்றில்லை, 12-15 வயது சிறுவர்களின் கையில்கூட இன்றைக்குச் சிகரெட்டைப் பார்க்க முடிகிறது. இதனால் புகையிலை சார்ந்த நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x