சந்தேகம் சரியா 49: அமர்ந்தே வேலை செய்வது ஆபத்தா?

சந்தேகம் சரியா 49: அமர்ந்தே வேலை செய்வது ஆபத்தா?
Updated on
2 min read

என் பணி நிமித்தம் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு அமர்ந்தே வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் ஆரோக்கியம் கெடும், பல நோய்கள் வரும் என்று பயமுறுத்துகிறார், என் நண்பர். அவர் சொல்வது சரியா?

உங்கள் நண்பர் கூறுவது மிகவும் சரி. நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வாழ்க்கைமுறை மாற்றங்களில், அமர்ந்தே வேலை செய்வது என்பது தற்போது கவனிக்கப்பட வேண்டிய பட்டியலில் சேர்ந்துவிட்டது. கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கும் ரிமோட், மடிக்கணினி போன்ற புதிய தொழில்நுட்ப வசதிகளால், அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்து வேலைகளையும் செய்ய முடிவதாலும், தங்களுக்கு வழங்கப்பட்ட அலுவலகப் பணியைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தாலும், தொடர்ந்து அமர்ந்தே வேலை செய்வது அவசியமாகிவிட்டது. இவர்கள் இடையிடையே எழுந்திருப்பதும், நடப்பதும் குறைந்துவிட்டது. அரை நூற்றாண்டுக்கு முன்புவரை இம்மாதிரியான பணியில் ஈடுபட்டவர்களுக்குக் கிடைத்த உடல் அசைவுகள் இப்போது இவர்களுக்குக் கிடைப்பதில்லை.

இவ்வாறு பல மணி நேரத்துக்குத் தொடர்ந்து அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு, தினமும் பத்து சிகரெட் புகைத்தால் உடலுக்கு எவ்வளவு ஆபத்து காத்திருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆபத்தானது என்பது உறுதியாகியுள்ளது.

உடற்பருமன், நீரிழிவு, இதயநோய்கள், புற்றுநோய், குறைவான ஆயுள் போன்றவை நம் வாழ்க்கைமுறை மாற்றங்களால் நாமே வரவழைத்துக்கொண்ட நோய். கழுத்துவலி, இடுப்புவலி, முதுகுவலி எனப் பலதரப்பட்ட உடல்வலிகளுக்கும் நம் வாழ்க்கைமுறை மாற்றங்களே காரணம். இந்த வாழ்க்கைமுறை மாற்றங்களில், அமர்ந்தே வேலை செய்வது என்பது முக்கிய இடத்தைப் பெற்றுவருகிறது.

நகர்ப்புறப் பணிகளில் ஒருவர் சராசரியாகப் பத்து மணி நேரம் தொடர்ந்து அமர்ந்துகொண்டே வேலை செய்பவராகத்தான் இருக்கிறார் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வறிக்கை. செய்யும் பணி தவிர, பலர் காரில் பயணம் செய்பவர்களாக இருக்கின்றனர். இன்னும் பலர் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பு அமர்ந்துகொள்கின்றனர். உடலுழைப்புக்கும் உடற்பயிற்சிக்கும் பலரும் நேரம் ஒதுக்குவதே இல்லை என்பதால் இதயம், மூளை, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு, பல வழிகளில் ஆரோக்கியம் கெடுகிறது என எச்சசரித்துள்ளது அந்த ஆய்வறிக்கை.

அதேநேரத்தில், நாம் அமர்ந்து பணி செய்கிற நேரத்தில் உடல் அசைவுகளையும் கவனித்து, அமரும் முறைகளை முறைப்படுத்தினால், அந்தப் பாதிப்புகளைப் பெருமளவு தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையையும் அந்த ஆய்வறிக்கை ஏற்படுத்தியுள்ளது.

கழுத்து எலும்புகள், முதுகுத்தண்டு சவ்வு, முதுகுத் தசைகள், தண்டுவட நரம்புகள் ஆகியவை எல்லாமே ஒன்றோடொன்று இணைந்து இயங்குவதால்தான் கை, கால், கழுத்து, முதுகு ஆகியவற்றின் இயக்கங்கள் சரியாக இருக்கின்றன. நாம் உட்காரும் நிலை தவறாக இருந்தாலோ உடல் அசைவுகள் குறைந்தாலோ இவற்றின் இயக்கங்களும் குறைந்து, வலிகளை ஏற்படுத்திவிடும். கழுத்துவலி, முதுகுவலி, இடுப்புவலி, முழங்கால் வலி, மூட்டுவலி, தலைவலி, கண் வலி, கண் எரிச்சல் எனப் பலதரப்பட்ட வலிகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகி வருகிறது.

வருடக்கணக்கில் இம்மாதிரி அமர்ந்தே வேலை செய்யும்போது, உடல் திசுக்கள் சோர்வடைந்துவிடுகின்றன. வளர்ச்சிதை மாற்றப் பணிகள் தாமதமாகின்றன. கொழுப்பு கரைவதற்கு வழி இல்லாமல், உடற்பருமன் வந்துவிடுகிறது. இது இன்சுலின் செயல்பாட்டைத் தடுக்கிறது. ‘இன்சுலின் எதிர்ப்புணர்வு’ (Insulin resistance) ஏற்படுகிறது. இதனால், இவர்களுக்கு விரைவிலேயே நீரிழிவு ஏற்படுகிறது. இந்த அதீதக் கொழுப்பு இதயத்தமனிகளில் சேருமானால், மாரடைப்பு வரக் காத்திருக்கிறது. இதுவே மூளைத் தமனியில் ஏற்பட்டால், பக்கவாதம் வரும்.

அமர்ந்தே வேலை செய்யும்போது அசைவுகள் குறைவதால், உடலில் ரத்தச்சுழற்சியில் மாற்றங்கள் நிகழ்கின்றன. ரத்தம் ஓடும் வேகத்தைக் குறைத்துக்கொள்கிறது. இவ்வாறு மெதுவாக ஓடும் ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, ரத்த ஓட்டத்தை இன்னும் அதிகமாகப் பாதிக்கிறது. ஆகவே, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற இதய பாதிப்புகள் மற்றவர்களைவிட இவர்களுக்கு விரைவாக வந்துவிடுகிறது. இதனால் இவர்களின் ஆயுள் குறைகிறது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்குக் குடல் புற்றுநோயும் புராஸ்டேட் புற்றுநோயும் மார்பகப் புற்றுநோயும் ஏற்படுவது அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ (Osteoporosis) அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, அமர்ந்து வேலை பார்ப்பது நம் பணியானாலும், அதில் சிற்சில மாற்றங்களைச் செய்தாக வேண்டியது அவசியமாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in