

எனக்கு 25 வயது ஆகிறது. நான் நான்கு மாதங்களாக இரண்டு கால்களிலும் மூட்டு வலியுடன் அவதிப்பட்டுவருகிறேன். எவ்வளவோ சிகிச்சை எடுத்தும் பயனில்லை. எனக்கு ஏதேனும் வழி கூற முடியுமா?
- வி. மணிகண்டன்
இந்த வாரக் கேள்விக்குப் பதில் அளிப்பவர் சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் அபிஷேக் லுல்லா:
முழங்கால் மூட்டு நாம் அதிகம் பயன்படுத்தும் ஒரு உறுப்பு. அது உடலின் பெரும்பாலான எடையைத் தாங்குகிறது. இளம் வயதில், விளையாட்டு, அதிகப் பயணம் போன்றவற்றால் மூட்டுத் தசைகளில் காயம் ஏற்படுவதற்குச் சாத்தியம் உள்ளது. பொதுவாக ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு எலும்புத் தேய்மான நோய் மிகவும் பொதுவானது. ஆனால், உங்கள் வயதைப் பார்க்கும்போது, அது வந்திருக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில் முழுமையான மருத்துவப் பரிசோதனை மிகவும் அவசியம். முழங்கால் மூட்டுப் பிரச்சினைகளுக்கு அறுவை சிகிச்சையைத் தவிர்க்க, ஆயுர்வேதம் பெரிதும் உதவுகிறது. அஸ்தி சிருங்கலா எனப்படும் மூலிகையில் பற்று போடுவது நன்கு உதவும். லாஷா எனப்படும் மூலிகையும் மிகவும் சிறந்தது. சல்லாகி எனப்படும் மூலிகை மிகச் சிறந்த வலி நிவாரணி. மேலும் சில சிகிச்சைகள் மிகவும் பயனளிப்பவை, அதை பரிசோதனைக்குப் பிறகே பரிந்துரைக்க முடியும்.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002 |