

மனிதன் ஒரு நாளைக்குச் சுமார் 21,000 முறை சுவாசிக்கிறான்; சுவாசம் நம் உணர்வின்றித் தானாகவே நடை பெறுகிறது. சுவாச விகிதம் கூடும்போது மட்டுமே நாம் அதை உணர்கிறோம். உடலின் இயக்கம் அதிகரிக்கும்போது இயல்பாகவே சுவாச விகிதம் அதிகரிக்கும். அவ்வாறு இன்றிச் சுவாசம் அதிகரித்தால், அது உடலில் உள்ள நோயைக் குறிக்கும். ஒய்வில் இருக்கும்போது சுவாசம் அதிகரித்தல், சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல் என்பது மருத்துவக் காரணங்களால் ஏற்படுகிறது.
மூச்சுத் திணறல் மனிதனைப் பயமுறுத்தி இயல்பு வாழ்க்கையில் இருந்தே முடக்கி விடும். மூச்சுத் திணறலுக்குப் பல மருத்துவக் காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமாக இருப்பது உயிருக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய COPD (chronic obstructive pulmonary disease) என்று அழைக்கப்படும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 35 லட்சம் பேருக்கு மேல் இந்த நோயால் இறக்கின்றனர்.