

உடலுக்குத் தோல் முக்கியமான பாதுகாப்புக் கவசமாகும். கோடை வெயிலால் வெப்பச் சூடு, வியர்வை, சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றால் தோலில் எரிச்சல், ஊரல், அரிப்பு போன்றவை ஏற்படும். தோலில் ஏற்படும் நெருடலைச் சமாளிக்க நகத்தால் சொறிந்துவிடுவோம்.
சிலருக்கு இதனால் ரத்தமும் வருவதுண்டு. கோடையில் தோலின் மேல் பரப்பில் நுண்ணுயிர்க் கிருமியான ‘ஸ்டெஃபைலோ காக்கஸ் ஆரியஸ்’ (staphylococcus aureus) என்கிற பாக்டீரியா அதிக எண்ணிக்கையில் காணப்படும். இக்கிருமி நகங்கள் ஏற்படுத்திய சிராய்ப்பு வழியாகத் தோலில் நுழைந்து, தோல் மயிர்க்கால்களில் தொற்றை ஏற்படுத்தும். இத்தொற்று சீழ்க்கட்டியாகத் தோலில் வீக்கத்துடன் வலியை ஏற்படுத்தும். சிலருக்குக் கொப்பளங்களும் ஏற்படும்.