Last Updated : 05 Aug, 2014 12:00 AM

 

Published : 05 Aug 2014 12:00 AM
Last Updated : 05 Aug 2014 12:00 AM

மரீச்யாசனம்

மரீசி என்னும் முனிவரின் பெயரால் வழங்கப்படும் ஆசனம் இது. மரீசி என்றால் ஒளிக் கீற்று எனப் பொருள்.

மரீச்யாசனத்தில் பல நிலைகள் உள்ளன. மிகவும் கடினமான நிலைகளும் உண்டு.

இங்கே நாம் பார்ப்பது மரீச்யாசனத்தின் எளிமையான நிலையை.

செய்முறை

# தண்டாசனத்தில் அமருங்கள். நீட்டியிருக்கும் கால்களின் குதிகால் பகுதிகள் வெளிப்புறம் இழுக்கப்பட்டிருக்க, நுனிக் கால்கள் உடலை நோக்கியபடி இருக்க வேண்டும். முழங்கால்கள், தொடைகள் இறுக்கமாக இருக்கட்டும்.

# இடது கால் நேராக அப்படியே இருக்க, வலது காலை மடித்துப் பாதத்தைத் தொடைக்கு அடியில் கொண்டுவாருங்கள்.

# இப்படிக் கொண்டுவரும்போது மூச்சை உள்ளே இழுத்துக்கொள்ளுங்கள்.

# வலது கால் பாதம் முழுவதும் கீழே பதிந்திருக்க வேண்டும்.

# வலது புறம் உடலைத் திருப்புங்கள். இப்போது மூச்சு வெளியே விட வேண்டும்.

# இப்போது இடது கையை வலது காலைச் சுற்றிப் பின்புறம் கொண்டுவாருங்கள்.

# வலது கையைப் பின்புறமாகக் கொண்டுசென்று இடது கையைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

# தலை வலது புறம் திரும்பியிருக்க, பார்வை பின் பக்கம் இருக்க வேண்டும்.

# உடல் நேராக இருக்கட்டும். தோள்பட்டைகள் விரிந்திருக்கட்டும்.

# நீட்டி இருக்கும் கால் திரும்பக் கூடாது.

# இதே நிலையில் சிறிது நேரம் இருக்கவும். அப்படி இருக்கும்போது மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள். ஐந்து முறை ஆழமாக, மெதுவாக மூச்சு இழுத்துவிட முடிந்தால் நல்லது.

பயிற்சி

# எடுத்த எடுப்பிலேயே சிலருக்கு இதைச் செய்ய முடியாமல் இருக்கலாம். அவர்கள் கைகளை எட்டிப் பிடிக்க முயற்சி செய்யாமல் உடலைத் திருப்புவதில் மட்டும் கவனம் செலுத்திப் பயிற்சி செய்யலாம்.

# பயிற்சி செய்யும்போது ஆரம்பக் கட்டத்தில் உடல் சிறிது முன்னே வளையும். தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் நிமிர்ந்து இருக்கும் நிலையிலேயே உடலைத் திருப்ப முடியும்.

# நன்கு திருப்புவதற்கேற்ற நெகிழ்ச்சி உடலுக்கு வந்துவிட்ட பிறகு, கைகளை இணைக்க முயற்சி செய்யலாம்.

பலன்கள்

# தோள்பட்டைகள் விரிவடையும். தோற்றப் பொலிவு கூடும்.

# உட்புற உறுப்புகளின் செயல்திறன் அதிகரித்து ஜீரண சக்தி அதிகரிக்கும்.

# அடிவயிறு அழுந்தப்பட்டுள்ள நிலையில், ஆழமாக மூச்சை இழுத்து விடுவது நுரையீரலை விரியச் செய்யும்.

# மிதமான முதுகு வலி, இடுப்புப் பகுதியின் அவஸ்தை ஆகியவற்றை இது போக்கும்.

# முதுகெலும்பை உறுதிப்படுத்தும்.

# இடுப்பை வலுப்படுத்தும். ஊளைச் சதையைக் குறைக்கும்.

# அடி வயிறு, சிறுகுடல், கல்லீரல் முதலான இடங்கள்வரை ஆக்ஸிஜன் செல்ல வழிவகுக்கும்.

# விலாப்புறத்தை விரிவடைய வைப்பதால் விலாப்புறங்களுக்குச் செல்லும் ஆக்ஸிஜனை அதிகரிக்க வைக்கிறது.

# பெண்களுக்கு மாத விலக்குக் கால அவதிகளைக் குறைக்கிறது.

எச்சரிக்கை

# கர்ப்பமாக இருக்கும்போது உடலை முறுக்கக் கூடாது.

# அடிவயிற்றில் ஏதேனும் அறுவை சிகிச்சை நடந்திருக்கும் பட்சத்தில் இதைச் செய்ய வேண்டாம்.

# குடலிறக்க நோய் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் செய்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x