

கரோனாவுக்குப் பிறகு தொற்றுநோய் குறித்த அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal Toxic Shock Syndrome) எனப்படும் தசையை உண்ணும் பாக்டீரிய நோய் ஜப்பானில் பரவிவருகிறது.
ஜப்பானில் கண்டறியப்பட்ட இவ்வகை பாக்டீரிய நோயானது அரிதானது என்றும் அதேநேரத்தில் ஆபத்தானது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம் 947 பேர் ஜப்பானில் இந்நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் நோய் பாதிப்பின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கியுள்ளது.
அறிகுறிகள்
காய்ச்சல், உடல் வலி, வாந்தி, மயக்கம் போன்றவை இந்நோயின் மிதமான அறிகுறிகளாகும். நோய் பாதிப்பு தீவிரமாக இருக்கும்பட்சத்தில் குறைந்த ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிப்பு, மூச்சுத் திணறல், சிறுநீரகச் செயலிழப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் இவ்வகை பாக்டீரியா உடல் உள்உறுப்புகளைப் பாதித்து அவற்றைச் செயலிழக்கச் செய்வதனால் இறப்பு ஏற்படுகிறது.
நோய் பாதித்த நபர்களுடன் நெருக்கமான தொடர்புள்ளவர்களுக்கு இந்நோய் எளிதில் பரவுவதாக ஜப்பானின் தேசியத் தொற்றுநோய் மையம் தெரிவித்துள்ளது.
அடிப்படையான சுகாதார வழிமுறைகளைப் (முகக்கவசம் அணிதல், கைகளைச் சுத்தம் செய்தல்) பின்பற்றினால் நோய் பாதிப்பிலிருந்து விடுபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.