Published : 31 Mar 2018 11:35 AM
Last Updated : 31 Mar 2018 11:35 AM

டிஜிட்டல் போதை 28: பூனைக்கு மணி கட்டத் தயாரா?

வீ

டியோ கேம்களின் நன்மைகள், தீமைகளைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். நாம் எவ்வளவுதான் திட்டமிட்டாலும், எடுத்துச் சொன்னாலும், குழந்தைகள் குழந்தைகள்தாம். தங்களுக்கு வேண்டியதை எந்தத் தந்திரம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்பது அவர்களுக்கு அத்துப்படி. அனைத்து விதமான தந்திரங்களையும் பெற்றோர்களிடம் அவர்கள் பிரயோகிப்பார்கள். பெற்றோர்கள்தாம் சற்று உஷாராக இருக்க வேண்டும்.

இன்று பன்னாட்டு நிறுவனங்களின் மார்கெட்டிங் பிரிவின் முதல் குறியே வீட்டில் இருக்கும் குழந்தைகள்தாம். குழந்தைகளுக்காக என்றால் எதையும் பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்துவிடுவார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். சாதாரண சாக்லேட் முதல் பல வித உணவுப் பண்டங்களைப் பெரும் சூறாவளிபோல் நம் சமையல்கட்டில் நுழைத்தவர்கள்தாம், இன்றைக்கு உங்கள் வாரிசு ஐ.ஐ.டியில் சேர வேண்டுமா என்று டிஜிட்டல் கருவிகளுடன் வந்துசேர்ந்திருக்கிறார்கள்.

பங்கெடுங்கள்

பிறந்து சில மாதங்களே ஆன ஆண் குழந்தைக்கு வார்த்தைகளைச் சொல்லிக் கொடுக்கலாம் என ‘யங் ஐன்ஸ்டைன்’ மாதிரியான புத்தகங்களைக் கொண்ட பொருட்களைச் சில ஆயிரங்களுக்குப் பெற்றோர் தலையில் கட்டிவிடுகிறார்கள். மெதுவாகக் கற்கும் குழந்தைதான் ஆழ்ந்து கற்கும், பகுத்து ஆராய்ந்து புரிந்துகொள்ளும். இதை எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும், ஐ.ஐ.டியில் சேர கருவில் இருந்தே பயிற்சி வகுப்புகளைத் தொடங்கிவிடும் பெற்றோர்களை என்ன செய்வது? அவர்கள்தாம் வீடியோ கேம், ஸ்மார்ட் கிளாஸ்களின் முதல் குறி.

வீடியோ கேம்கள், டிஜிட்டல் கருவிகளின் பயன்பாட்டில் பெற்றோர்கள் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அதேநேரம், இந்த டிஜிட்டல் புரட்சியில் உங்கள் குழந்தையுடன் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் அதன் சாதக, பாதகங்கள் புரியும்.

இதை ஒரு தனிநபராகச் செய்துவிட முடியாது, இதற்கு சமூகப் பங்களிப்பு அவசியம். டிஜிட்டல் பிரச்சினைகளை ஆராயும் குழுக்களில் பங்கேற்பது, ஒருவர் மற்றொருவருக்கு உதவுவது பற்றி விரிவாகப் பார்த்தோம். இதில் உதவுவதற்கான ஒரு முயற்சியாக முகநூலில் இருக்கும் இந்த குழுவில் இணையலாம். (https://www.facebook.com/digitaldiet4all).

மன அழுத்தத்துக்குப் போதையா?

இந்தத் தொடரின் அத்தியாயங்களைப் படித்துவிட்டு என்னைத் தொடர்புகொண்ட பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எந்நேரமும் வீடியோ கேம் விளையாடுவதாகக் கூறுகிறார்கள். அந்தக் குழந்தைகளை ‘வீடியோ கேம் அடிமைகள்’ என்று முத்திரை குத்த முடியாது. அந்தக் குழந்தைகளுடன் சிறிது நேரம் பேசினால் அவர்களுக்குப் பெற்றோர்களால் ‘மார்க், ரேங்க்’ போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படிப் போக்கிக்கொள்வது என்று தெரியாமல் இருப்பது புரியும். அதனால், வீடியோ கேம்கள் மூலம் தங்கள் மன அழுத்தத்தைத் திசை திருப்ப முயல்கிறார்கள். ஆனால், மன அழுத்தத்துக்குப் போதை மருந்து உட்கொண்ட கதையாக இது மாறிவிடுகிறது.

குழந்தைகளின் மன அழுத்தத்தைப் பெற்றோர்கள் புரிந்துகொள்வதில் இருந்துதான் டிஜிட்டல் போதைக்கு எதிரான யுத்தம் தொடங்கும். இந்த மன அழுத்தம், அதைத் தொடர்ந்து மன நல மருத்துவர்கள், மருந்துகள் என விஷச் சுழற்சியில் உங்கள் குழந்தைகளைச் சிக்கவைத்து விடாதீர்கள்.

வீடியோ கேம்களை முறைப்படுத்துவது என்பது நாள்தோறும் நிகழும் ஒரு விவாதம். பெற்றோர்கள், குழந்தைகள், கல்வியாளர்கள், மனநல ஆலோசகர்கள், மனநல மருத்துவர்கள், சமூகநல ஆர்வலர்கள் எனப் பலர் ஒருங்கிணைந்துதான் இந்தப் பூனைக்கு மணி கட்ட முடியும்.

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: digitaldiet2017@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x