Last Updated : 14 Oct, 2017 10:35 AM

 

Published : 14 Oct 2017 10:35 AM
Last Updated : 14 Oct 2017 10:35 AM

டெங்குவுக்கு நிலவேம்புக் குடிநீர்… தெரிந்ததும் தெரியாததும்!

 

டெ

ங்குவால் நிரம்பி வழிகின்றன தமிழக மருத்துவமனைகள். இன்னொரு பக்கம், ‘ஆஸ்பத்திரிக்கெல்லாம் எதுக்குப்பா… 10 நாள் நிலவேம்புக் குடிநீர் குடிச்சா சரியாப்பூடும்’ என்று சிலர் சுயமருத்துவம் செய்துகொள்கிறார்கள். நிலவேம்புக் குடிநீர் சிறந்த மருந்துதான். அதேநேரம், நிலவேம்புக் குடிநீரை எடுத்துக்கொள்வதிலும் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. அது குறித்த கேள்விகளுக்கு சித்த மருத்துவர் கு. சிவரமானின் தலைமையிலான சித்த மருத்துவர் குழுவின் பதில்கள் இவை:

நிலவேம்புக் குடிநீரை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?

டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் இந்தச் சூழலில், டெங்குவாக இருந்தாலும் சரி அல்லது சாதாரணக் காய்ச்சலாக இருந்தாலும் சரி, முதல் நடவடிக்கையாக நிலவேம்புக் குடிநீரை எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்புக் குடிநீர் கொடுக்கக் கூடாது. 3 முதல் 12 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு 15 மி.லி. முதல் 30 மி.லி.வரை மருத்துவர் அறிவுரையின்படி கொடுக்கலாம். பெரியவர்கள் 60 மி.லி. வரை எடுத்துக்கொள்ளலாம். காலை மாலை என இரு வேளையும், தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இது பக்கவிளைவுகள் அற்றது.

நிலவேம்புக் குடிநீர் எடுத்துக்கொண்ட முதல் மூன்று நாட்களுக்குப் பிறகும் காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி போன்றவை இருந்தால், உடனடியாக அருகிலுள்ள அரசு, தனியார் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதிக்கவும். அதை விடுத்து, சுயமருத்துவமாக நிலவேம்புக் குடிநீரை மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கக் கூடாது.

கர்ப்பிணிகள், பாலூட்டும் அம்மாக்கள் என எல்லோரும் நிலவேம்புக் குடிநீரை எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு, புற்றுநோய் போன்ற இதர நோய் பாதிப்புகள் உடையவர்கள், மருத்துவர் பரிந்துரையுடன் நிலவேம்புக் குடிநீரை எடுத்துக்கொள்ளலாம். மாதவிடாய் காலத்தில் டெங்கு ஏற்பட்டால், வழக்கத்தைவிட அதிக உதிரப் போக்கு இருக்கும். எனவே, அந்தக் காலத்தில் உடல் வலி, காய்ச்சல் ஆகியவையும் இருந்தால் அலட்சியமாக இருந்துவிடாமல், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவும்.

nilavembuநிலவேம்புக் குடிநீரை எந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்?

கடைகளில் நிலவேம்புக் குடிநீர் பொடி என்கிற பெயரில் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்பு விற்கப்படுகிறது. அவற்றுக்கு பதிலாக ‘நிலவேம்புக் குடிநீர் சூரணமே’ சிறந்தது. இது ‘இம்ப்காப்ஸ்’ மருந்துகள் விற்பனை செய்யப்படும் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும்.

அந்தச் சூரணத்தை இரண்டு கரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை இரண்டு டம்ளர் தண்ணீரில் கலக்க வேண்டும். பிறகு அடு்ப்பை ‘சிம்’மில் வைத்துச் சூடுபடுத்தி, அரை டம்ளராக வற்ற வைத்த பிறகே குடிக்க வேண்டும். சுமார் மூன்று அல்லது நான்கு மணி நேரம் மட்டுமே இந்த மருந்தின் தாக்கம் இருக்கும் என்பதால், உடனே குடித்துவிடுவது நல்லது. காலையில் தயாரித்துவிட்டு, மாலையில் குடிக்கலாம் என்கிற மெத்தனம் வேண்டாம்.

நிலவேம்பு சூரணம் எங்கு கிடைக்கும்?

சித்தா, யுனானி, ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்யும் ‘இம்ப்காப்ஸ்’ மருந்துக் கடைகளில் நிலவேம்புக் குடிநீர் சூரணம் கிடைக்கிறது. அத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 15 இம்ப்காப்ஸ் நேரடி விற்பனை மையங்கள் உள்ளன. சென்னையில் திருவான்மியூரில் தலைமையகம் உள்ளது.

இது தவிர 9710105678, 9710205678 ஆகிய எண்களுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுத்தால், உங்கள் வீடு தேடி நிலவேம்புக் குடிநீர் சூரணம் வரும். தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த மருந்தை 50 சதவீதத் தள்ளுபடியில் விற்பனை செய்கிறது இம்ப்காப்ஸ். சாதாரணமாக, 100 கிராம் நிலவேம்புக் குடிநீர் சூரணத்தின் விலை ரூ.213. தற்போது, 50 சதவீதத் தள்ளுபடியில் ரூ.106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டப்பாவில் விற்கப்படும் இந்தச் சூரணம் சுமார் ஒரு வருட காலத்துக்கு காலாவதியாகாமல் இருக்கும்.

என்ன சாப்பிட வேண்டும்?

பொதுவாக, டெங்குவை பித்த சுரம் என்று சித்த மருத்துவர்கள் அழைக்கிறார்கள். இந்த நோய்க்குக் கசப்பும் குளிர்ச்சியுமே மருந்து. எனவே, இனிப்பு வகைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. பாகற்காயை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறுமிளகை அதிகம் பயன்படுத்த வேண்டும். எண்ணெய் உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். மீன் தவிர, இதர அசைவ உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

பப்பாளியில் ரத்தத் தட்டு அணுக்களை அதிகரிக்கும் மருத்துவக் குணங்கள் இருப்பதால், அதைப் பழச்சாறாக எடுத்துக்கொள்ளலாம். தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அரிசி அல்லது தானியக் கஞ்சி போன்ற எளிதில் செரிமானம் அடையக்கூடிய உணவை எடுத்துக்கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x