

The People of the Indus, l Nikhil Gulati - Jonathan Mark Kenoyer, Penguin Books
இந்தியா என்கிற பெயர் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து உருவான பெயரே. உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்று சிந்து சமவெளி நாகரிகம். இந்த நாகரிகம் கடந்த நூற்றாண்டில்தான் கண்டறியப்பட்டது. சிந்து சமவெளிப் பண்பாட்டின் தொடர்ச்சியை இன்றைக்கும் நம்முடைய பல பண்பாட்டு அம்சங்களில் காணலாம். சிந்துவெளி மொழியின் தொடர்ச்சியே தென்னிந்திய மொழி, தென்னிந்திய மக்கள் என்று நவீன ஆய்வுகள் கூறுகின்றன.
இப்படிப் பல்வேறு பெருமைகள் கொண்ட சிந்துவெளி நாகரிகம் குறித்து எளிமையாக, சுவாரசியமாக, காட்சிகளாக அறிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கிறது இந்த நூல். பரபரப்பான ஒரு திரைப்படம்போலப் படக்கதையாக இந்த நூலை வடித்திருக்கிறார் நூலாசிரியர் நிகில் குலாட்டி. சிந்துவெளி ஆராய்ச்சியாளர் ஜோனதன் மார்க் கெனோயர் அதற்குப் பக்கபலமாக இருந்துள்ளார்.
Ancient Tamilnadu, l K.Indrapala, Kumaran Book House
கீழடி, பொருநை நாகரிகங்கள் சார்ந்த தொல்லியல் ஆய்வுகள் தமிழ்நாட்டின் வரலாறு குறித்த ஆர்வத்தை இளைஞர்களிடம் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டின் தொன்மை குறித்து அறிவதற்கான ஆர்வமும் சமீப ஆண்டுகளாக அதிகரித்துவருகிறது. ஆனால், தமிழ்நாட்டின் வரலாறு குறித்து முழுமையான ஒரு சித்திரத்தைத் தரும் நூல்கள் அதிகமில்லை. இந்நிலையில் பண்டைய தமிழ்நாட்டின் வரலாற்றைப் பதின்வயது வாசகர்களுக்குச் சுருக்கமாகத் தருகிறது இலங்கை வரலாற்று ஆய்வாளர் இந்திரபாலா எழுதியுள்ள இந்த நூல்.
A Treasure Trove Of Timeless Tales, l Shobha Tharoor Srinivasan, Red Panda (Westland books)
நாடோடிக் கதைகள் காலம் காலமாக, தலைமுறைகளைக் கடந்து ஏதோ ஒருவகையில் சொல்லப்பட்டும், எழுதப்பட்டும் வருகின்றன. குழந்தைகளுக்காக ஆங்கிலத்தில் எழுதிவரும் ஷோபா தரூர் சீனிவாசன் அந்த வகையில் பல நாட்டுக் கதைகளை இந்தத் தொகுப்பில் தந்துள்ளார். அத்துடன் இந்தியக் கதைகளும் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொகுப்பில் புதுமை அம்சமாக கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் எழுதப்பட்ட குறுங்கதைகளும் இடம்பெற்றுள்ளன. பொதுவாகப் பெரியவர்களுக்கே இதுபோன்ற குறுங்கதைகள் எழுதப்படுவது வழக்கம்.