

2022 ஆம் ஆண்டுக்கான ‘இளம் சூழலியலாளர் விருது’, சென்னையைச் சேர்ந்த பி.எஸ். சாய் அருணுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் 14 முதல் 18 வயதுக்குரியவர்களுக்கு மத்திய அரசின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகமும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் இணைந்து போட்டிகளை நடத்திவருகின்றன. சுற்றுச்சூழல் குறித்த பதாகை தயாரிக்கும் போட்டியில் 1932 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் எட்டு மாணவர்கள் வெற்றி பெற்று, இளம் சூழலியலாளர் விருதை வென்றிருக்கிறார்கள்.
சென்னை சீதாதேவி கரோடியா இந்து வித்யாலயாவில் 9ஆம் வகுப்புப் படிக்கும் சாய் அருணும் விருது பெற்றவர்களில் ஒருவர். இவருக்கு 15 ஆயிரம் ரூபாய் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டிருக்கிறது. இயற்கையைப் புரிந்துகொள்ளவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வனவிலங்குகள் பாதுகாப்பில் பங்கேற்கும் விதத்தில் மாணவர்களைத் தயார்படுத்துவதற்காகவும் இந்த விருது உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்த விருதை வெல்வது இதுவே முதல் முறை. வாழ்த்துகள் சாய் அருண்!