Last Updated : 02 Mar, 2022 11:15 AM

 

Published : 02 Mar 2022 11:15 AM
Last Updated : 02 Mar 2022 11:15 AM

புத்தகத் திருவிழா 2022 | புதிய சிறார் நூல்கள்

பசுமைப் பள்ளி, l நக்கீரன், காடோடி, வாட்ஸ்அப் தொடர்புக்கு: 80727 30977

ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு மனிதர்கள் வரையிலான உயிரினங்கள்குறிஞ்சி முதல் பாலை வரையிலான ஐந்திணைகள், நிலம் தொடங்கி வானம் வரையிலான ஐம்பூதங்கள் என இயற்கை படைத்தவற்றின் அடிப்படை என்ன, அவற்றின் இன்றைய சீர்கெட்ட நிலை என்ன என்பதை, குழந்தைகளுடனே பயணிப்பதுபோல் எழுதப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை சூழலியலை அறிந்துகொள்வதற்கான அடிப்படைப் பாடம் இந்நூல்.

நீலப்பூ, l விஷ்ணுபுரம் சரவணன், வானம் பதிப்பகம், தொடர்புக்கு: 91765 49991

சமூகத்தில் ஏற்படும் எந்த ஒரு பாதிப்பும் குழந்தைகளை மிக அதிகமாக பாதிக்கிறது. பள்ளி செல்லும் வயதே, குழந்தைகள் வார்த்தெடுக்கப்படும் முக்கியமான பருவம். ஆனால், சமூகத்துக்கு முட்டுக்கட்டை போடும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், வேறுபாடுகளை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதனால் படிக்கும் வயதிலேயே குழந்தைகள் படும் இன்னல்களையும், சாதியம் குறித்தும் காத்திரமாகப் பேசியுள்ளது இந்த நாவல்.

கால்களில் ஒரு காடு, l உதயசங்கர், புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044 2433 2924

நாம் வாழும் உலகம் மனிதர்களுக்கானது மட்டுமில்லை, அனைத்து உயிரினங்களும் இணைந்து வாழவேண்டிய இடம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நூலில் சூழலியல் கதைகள் நிறைந்திருக்கின்றன. குழந்தைகளின் மகிழ்ச்சியான உலகத்தைக் கொண்டாடக்கூடிய வகையில், எழுத்தாளர் உதயசங்கர் சமீபக்காலத்தில் எழுதிய சிறார் கதைகளின் தொகுப்பு.

குண்டு மாமாவும் குதிரையும், l இரா. கற்பகம், என்.சி.பி.எச். தொடர்புக்கு: 044 26359906

ஆற்றங்கரைக்குப் போகலாம் / ஆடிப்பாடி மகிழலாம் / மணலில் வீடு கட்டலாம் / மாடிப்படியும் வைக்கலாம் / தோட்டம் போட்டுப் பார்க்கலாம் / செடிகள் நட்டு வைக்கலாம் / கோட்டைகூடக் கட்டலாம் / கொடிகள் ஏற்றி வைக்கலாம் / கும்மி கொட்டி ஆடலாம் / கும்மாளம் அடிக்கலாம்.

- இதுபோன்று குழந்தைகள் பாடி மகிழக்கூடிய பாடல்களைக் கொண்ட புத்தகம்.

1650, l விழியன், வானம் பதிப்பகம், தொடர்புக்கு: 91765 49991

ஜலியான்வாலா பாக் படுகொலை குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். உதம் சிங், பகத் சிங் போன்ற சிறாரையும் இளைஞர்களையும் விடுதலைப் போராட்டத்தை நோக்கித் திருப்பிய சம்பவம் ஜலியான்வாலா பாக் படுகொலை. அந்தப் படுகொலை சம்பவத்தை, சரீனா என்கிற சிறுமியின் வழியாக இன்னும் நெருக்கமாக அறிய வைக்கும் முயற்சிதான் 1650. விடுதலைப் போராட்ட கால வரலாற்றுத் திருப்பங்களை நம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சி.

குழந்தைகள் சென்ற குஷியான பயணம், l தேவி நாச்சியப்பன், பழனியப்பா பிரதர்ஸ், தொடர்புக்கு: 044 28132863

ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி போன்ற மலைவாசத்தலங்கள், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், பிள்ளையார்பட்டி போன்ற புனிதத்தலங்கள், சென்னை, மதுரை, திருச்சி-தஞ்சை, நாகர்கோவில் போன்ற பெருநகரங்களுக்குக் குழந்தைகளை சுற்றுலா அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.

டுட்டுடூ, l வே. சங்கர், புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044 2433 2424

குழந்தைகள் மனம் என்பது புதுவித உலகம். அங்கே உயிரினங்கள், பறவைகள் உண்டு. ஏன் பொம்மைகளும் அங்கே உயிர் பெற்றுவிடும். இப்படி இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் மற்ற உயிர்கள் மேல் காட்டும் அன்பு, அதைச் சார்ந்து நிகழும் சம்பவங்கள் கதையாக விவரிக்கப்பட்டுள்ளன.

பாடும் இறகு, வஸீலி சுகோம்லின்ஸ்கி, l தமிழில் சரவணன் ஜெயராமன், குட்டி ஆகாயம், தொடர்புக்கு: 98434 72092

புகழ்பெற்ற ரஷ்ய சிறார் எழுத்தாளர் வஸீலி சுகோம்லின்ஸ்கியின் கதைத் தொகுப்பு. பொய் சொல்லத் தெரியாத குழந்தை, கேள்விகளை நிறுத்தாத குழந்தை, புத்துணர்வான பதில்களைக் கண்டுபிடிக்கும் குழந்தை, இயற்கையுடன் உறவாடும் குழந்தை எனக் குழந்தைகளில்தாம் எத்தனை வகை. அவர்களில் சிலர் இந்தக் கதைகளில் வருகிறார்கள். அவர்களின் உலகம் இயல்பானது, அழகானதும்கூட.

தமிழ்க் குழந்தை இலக்கியம்-இன்றும் இனியும், l சுகுமாரன், நெஸ்ட்லிங் புக்ஸ், தொடர்புக்கு: 044 26359906

தமிழ்ச் சிறார் இலக்கியம் இன்றைக்கு எப்படியிருக்கிறது, அது எப்படி இருக்க வேண்டும், சிறார் இலக்கியத்தை மேம்படுத்துவதில் சமூகம், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு இருக்கும் பங்கு ஆகியவை வலியுறுத்தப்பட்டுள்ளன. சிறார் இதழ்கள், சிறார் நூலகம், சிறார் இலக்கியப் போக்கு, சிறார் எழுத்தாளர் சங்கம் போன்றவை சார்ந்த ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி சிறுவர் இலக்கிய வரலாறு, l ஆர்.வி. பதி, நிவேதிதா பதிப்பகம், தொடர்புக்கு: 89393 87276

சிறார் இலக்கியம் குறித்த கவனம் பெரிதாக இல்லாத நிலையில், சிறார் இலக்கிய வரலாறும் கவனம் பெறாமலே இருந்துவருகிறது. இந்நிலையில் புதுச்சேரி சிறார் இலக்கியம் வளர்ந்த விதம், சிறார் இலக்கிய முன்னோடிகள், சிறார் இதழ்கள், நூல்கள் எனப் பல அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது இந்த நூல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x