Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

டிங்குவிடம் கேளுங்கள்: தொடர்ச்சியாகக் கொட்டாவி வருவது ஏன்? :

ஒருவருக்குக் கொட்டாவி வரும்போது அது மற்றவர்களையும் தொற்றிக்கொள்கிறதே ஏன், டிங்கு?

- ப. முனவ்வரா சித்திகா, 10-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.

கொட்டாவி வருவதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டுவந்தன. அவற்றில் ஒன்று, கூடுதல் வேலையின் போது மூளை வெப்பமடையும். அதனைக் குளிர்விக்கத்தான் கொட்டாவி வருகிறது. வாயை அகலமாகத் திறந்து காற்றை உள்ளே இழுக்கும்போது, குளிர்ந்த ரத்த ஓட்டம் மூளைக்குப் பாயும் என்று உடலியல் ஆய்வாளர்கள் சொன்ன கருத்தை, 2016-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

ஒருவர் கொட்டாவி விட்டவுடன் தொடர்ச்சியாக அருகில் இருப்பவர்களும் கொட்டாவி விடுவது ஏன் என்பதற்கும் பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். இதுதான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. ஒருவர் கொட்டாவியை நினைத்தால்கூடக் கொட்டாவி வந்துவிடும்; மனிதர்கள் கொட்டாவி விடுவதைப் பார்க்கும் நாய்களும் கொட்டாவி விடுகின்றன என்றெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்கள், முனவ்வரா சித்திகா.

இடது கை பழக்கம் வருவது ஏன்? பெற்றோர் அதை மாற்றுவது சரியா, டிங்கு?

- எஸ். செந்தில் குமார், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, ஈரோடு.

90 சதவீதம் மக்கள் வலது கை பழக்கமுடையவர்களாகவே இருக்கிறார்கள். அதனால், இடது கை பழக்கமுடையவர்களைப் பார்க்கும்போது, இயல்புக்கு மாறாக இருக்கிறார்களோ என்று பதற்றமடைகிறார்கள். எனவே, இடது கை பழக்கம் உள்ளவர்களை வலது கை பழக்க முடையவர்களாக மாற்றுவதற்கு முயல்கிறார்கள். ஆனால், அப்படிச் செய்வது தவறு. நம் பெருமூளை இரண்டு அரைக்கோள வடிவில் இருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு இடது அரைக்கோளம் சற்று மேலோங்கி இருக்கும். இதனால்,இவர்களுக்கு வலது பக்க உறுப்புகள் சிறப்பாகச் செயல்படும். சிலருக்கு வலது அரைக்கோளம் சற்று மேலோங்கி இருக்கும்.

இவர்களுக்கு இடது பக்க உறுப்புகள் சிறப்பாகச் செயல்படும். இது இயற்கையால் உருவாகும் மாற்றம். இதை வலுக்கட்டாயமாக மாற்றும்போது இடது கை பழக்கமுள்ளவர்கள் சிரமப்படுவார்கள். மனதளவிலும் பாதிக்கப்படுவார்கள். அதனால்,இவர்களை இடது பழக்கம் உள்ளவர்களாகவே விடுவதுதான் சிறந்தது. இடது கை பழக்கம் உள்ளவர்கள் புத்திக்கூர்மையுடன் இருப்பார்கள். காரணம், பெரும்பாலானவர்களிடமிருந்து அவர்கள் மாறுபட்டிருப்பதால் கிடைக்கும் சாதக அம்சம். படிப்பு, விளையாட்டு, விவாதம் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்படுவார்கள், செந்தில்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x