Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

கதை: ஓடும் மான்... துரத்தும் சிங்கம்...

அடர்ந்த சிங்கம்புரி காட்டில் ஏராளமான சிங்கங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ஒரு சிங்கத்துக்கு இரவில் தூங்கி மறுநாள் காலை எழுந்திருக்கும் போது பயம் வந்துவிடும்.

சிங்கத்துக்கே பயமா! ஆமாம். அந்தப் பயந்த சிங்கம், “இன்று நானும் என் குட்டிகளும் மானைவிட வேகமாக ஓட வேண்டும். அதற்கான வலிமை வேண்டும். இல்லாவிட்டால் நானும் என் குட்டிகளும் பட்டினிதான்” என்று தனக்குள் சொல்லிக்கொள்ளும்.

தாய் சிங்கம் குட்டிகளிடம், “பிள்ளைகளே, ஒவ்வொரு நாளும் வேகமாக ஓடுவதற்கு நீங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். வேகமாக ஓடினால்தான் உங்களுக்கு உணவு கிடைக்கும். இல்லாவிட்டால் பட்டினிதான். அதனால் உடலை வலிமையாக்கிக்கொள்ளுங்கள்” என்றது.

புத்திசாலிக்குட்டிகளில் ஒன்று, ”அம்மா, நம் இனம்தானே இந்தக் காட்டுக்கே ராஜா!. அப்படி இருக்கும் போது நமக்கு இரை கிடைக்காதா?”என்று கேட்டது.

“காட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் உணவு நம்மைத் தேடி வராது. நாம்தான் உணவைத் தேடிச் செல்ல வேண்டும். அதற்குத்தான் ஓட்டப் பயிற்சி முக்கியம். ஏனென்றால் நமக்கு மிகவும் பிடித்த உணவான மான், ஓட்டத்தில் சிறந்தது. இந்தக் காட்டிலேயே அதிக வேகத்தில் ஓடக்கூடியது. அதைப் பிடிக்க வேண்டும் என்றால், நாம் அதைவிட வேகமாக ஓட வேண்டும் அல்லவா?” என்று கேட்டது தாய் சிங்கம்.

“ஓ... நமக்கு எந்தவிதச் சலுகையும் கிடைக்காதா? இன்று முதல் நாங்கள் தவறாமல் பயிற்சி எடுக்கிறோம்” என்று உறுதி அளித்த குட்டிகள், பயிற்சியை மேற்கொண்டன.

சிங்கக் குட்டிகளின் பயிற்சியை ஒளிந்திருந்து கவனித்த தாய் மான், வேகமாகத் தன் இருப்பிடம் சென்றது.

“குட்டிகளே, உங்களின் ஓட்டப் பயிற்சியை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். இல்லை என்றால் சிங்கத்துக்கும் அதன் குட்டிகளுக்கும் நீங்கள்தான் உணவு” என்று எச்சரிக்கை செய்தது தாய் மான்.

குட்டிகளில் ஒன்று, ”ஏன் அம்மா, இப்படிப் பயமுறுத்துறீங்க? இந்தக் காட்டிலேயே நம் இனம்தானே வேகத்தில் சிறந்தது?அப்படி இருக்கும்போது சிங்கங்கள் நம்மைப் பிடிக்க முடியுமா?” என்று வாதிட்டது.

“அப்படி இல்லைடா என் செல்லக்குட்டி.என்னதான் நமக்கு இயல்பாக வேகம் இருந்தாலும் சிங்கத்துக்குப் பசிக்கும்போது இரையைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்கில் வேகத்தை இன்னும் தீவிரப்படுத்தும். ஆகையால் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்” என்றது தாய் மான்.

“ஓ... அப்படியா!இதோ நாங்கள் தீவிரமாகப் பயிற்சி எடுக்கப் போகிறோம்” என்று குட்டிகள் சொன்னவுடன், தாய் மானுக்கு நிம்மதியாக இருந்தது.

பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு மான் குட்டியை நோக்கி, சிங்கக் குட்டி ஒன்று வேகமாக வந்தது. உடனே மான் குட்டி வேகமாக ஓடி, புதருக்குள் மறைந்துகொண்டது.

“அடச்சே... அம்மா சொன்னது சரிதான். என்ன ஓட்டம் ஓடுகிறது இந்த மான் குட்டி! இன்னும் என்னுடைய வேகத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே இருப்பிடம் திரும்பியது சிங்கக் குட்டி.

புதரில் இருந்து வெளியே வந்த குட்டி மான், “அம்மா, நீங்கள் சொன்னது சரிதான். சிங்கம் வேகமாகப் பாய்ந்து வந்தபோது, அதைவிட வேகமாக ஓடியதால்தான் இன்று நான் தப்பித்தேன்” என்று சொன்னது.

மறுவாரம் தாய் சிங்கம் குட்டிகளோடு வந்துகொண்டிருந்தது. தூரத்தில் ஒரு மான் குட்டி மேய்ந்துகொண்டிருந்தது. ஒரு குட்டியை அனுப்பி, மானைப் பிடிக்கச் சொன்னது தாய் சிங்கம்.

சற்று நேரத்தில் திரும்பி வந்த சிங்கக் குட்டி, “அம்மா, என்னால் பிடிக்க முடியவில்லை. அதற்கு மட்டும் எங்கிருந்து அவ்வளவு வேகம் வருகிறது?” என்று களைப்புடன் கேட்டது.

“நீ பசிக்காக ஓடுறே... மான் உயிருக்காக ஓடுது. அப்படின்னா மானோட ஓட்டத்துல வேகம் அதிகமா இருக்கும்தானே?” என்ற தாய் சிங்கம், சிங்கக் குட்டிகளை அழைத்துக்கொண்டு இரை தேடிச் சென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x