Last Updated : 21 Oct, 2020 10:00 AM

 

Published : 21 Oct 2020 10:00 AM
Last Updated : 21 Oct 2020 10:00 AM

என்ன வாசிக்கலாம்? - ஏழும் ஏழும் பதினாலாம்

சூரியனின் கோபம்,

உதயசங்கர்

ராஜா காட்டை வெட்டியதால் சூரியனின் கோபத்துக்கு ஆளான ஊர், எலியைக் கடவுளாகப் போற்றச் சொல்லும் ராஜா திம்மன், நாட்டிலிருந்தே விரட்டப்பட்ட ஊர்சுற்றி ராஜா, வரியை எதிர்த்து மக்கள் பேசுவதற்குத் தடையிட்ட ராஜா… இப்படி மக்களைக் கிள்ளுக்கீரையாக நடத்தும் ராஜாக்கள் என்ன ஆனார்கள் என்பதைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கதைகள் வழியாக அறிமுகப்படுத்தியுள்ளார் எழுத்தாளர் உதயசங்கர்.

வானம், தொடர்புக்கு: 91765 49991

டும் டும் டும் தண்டோரா,

மோ. கணேசன்

‘ஒரெழுத்து ஒரு மொழி’ பாடலில் தமிழின் ஒவ்வோர் எழுத்துக்கும் உள்ள அர்த்தத்தை விளக்கியுள்ளார். ‘ஒரு சொல்லில் இரு பொருள்கள்’ பாடலும் சுவாரசியம். பாடுவதற்குத் தோதான பாடல்கள் இந்தத் தொகுப்பில் உள்ளன. தாய், தந்தை, ஆசிரியர், நட்பு, சுற்றுச்சூழல், வேளாண்மை உள்ளிட்ட அம்சங்கள் சார்ந்து தலா 4 நறுங்குறள்களையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.

புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924

தோழன் ரோபோட்,

ஆயிஷா இரா. நடராசன்

ரோபி என்ற ரோபாட்டுடன் மிகவும் நெருக்கமாகிறாள் குளோரியா. ரோபி மீதான அவளுடைய பிடிப்பு தீவிரமடைந்து வருவதை உணர்ந்து, ரோபியிடமிருந்து குளோரியாவைப் பெற்றோர் பிரிக்கிறார்கள். இதனால் அவள் பாதிக்கப்படுகிறாள். ரோபாட் உடனான குளோரியாவின் பிணைப்பை நிரந்தரமாகப் பிரிக்க முடிந்ததா என்பதே கதை.

அறிவியல் வெளியீடு, தொடர்புக்கு: 99943 68501

ஏழும் ஏழும் பதினாலாம்,

அழ. வள்ளியப்பா

அழ. வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்களுக்கு இணையாகத் தமிழில் வேறு குழந்தைப் பாடல்களைச் சொல்வது கடினம். இதற்குக் காரணம் எளிமை, பாடுவதற்கு ஏற்ற தன்மை, புதிய சொற்களைத் தெரிந்துகொள்ள முடிவது போன்றவையே. இந்தத் தொகுப்பில் அவர் எழுதியதில் சிறிய, எளிய 15 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

பஞ்சு மிட்டாய், தொடர்புக்கு: 97317 36363

யாருக்குத் தைக்கத் தெரியும்?

ரமணி

தமிழில் குழந்தைகள் கதைகளை எழுதுவதும், அவை புத்தகமாக வெளியிடப்படுவதும் குறைவு. இந்த நிலையில் 7-ம் வகுப்பு மாணவி ரமணியின் இந்த நூல், வண்ணத்தில் வெளியாகியிருக்கிறது. தலைப்புக் கதையில் பருந்து ராஜாவின் கிழிந்த உடையைத் தைத்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசு அறிவிக்கப்படுகிறது. பல பறவைகளும் தைக்க முயன்றாலும், தையல்சிட்டுதான் நன்றாகத் தைத்துத் தருகிறது. ஆனால், ராஜா சொன்னபடி அதற்கு பரிசு மட்டும் தரவில்லை.

வானம், தொடர்புக்கு: 91765 49991

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x