Published : 28 May 2014 10:37 AM
Last Updated : 28 May 2014 10:37 AM

பட்டமும் நூலும்

குட்டிப் பையன் விட்ட பட்டம்

கோட்டை மேலே பறக்குது - அது

குட்டிக் கரணம் போட்டு விட்டுக்

கோல வானில் மிதக்குது!

சுட்டிப் பையன் விட்ட பட்டம்

சுழன்று வானை அளக்குது - அது

சூறைக் காற்று வீசும்போதும்

சோர்ந்திடாமல் கலக்குது!

ஒட்டி விட்ட நூலும் எந்தன்

கையை மேலே இழுக்குது - அதில்

கட்டுப்பட்ட பட்டம் முட்டிக்

காற்றை வெட்டிக் கிழிக்குது!

வாலில்லாமல் விட்ட பட்டம்

வானம் ஏறிப் போகுமா? - வீட்டில்

வால் தனங்கள் செய்த போதும்

வாழ்வில் பட்டம் வாங்கலாம்!

விலை மிகுந்த பட்டத்திற்கும்

நிறங்கள் இல்லை விண்ணிலே-கற்று

நிலையுயர்ந்த மாந்தருக்கும்

நிறங்கள் ஏது மண்ணிலே?

நூலறுந்த பட்டம் மண்ணில்

நொடியில் வீழ்ந்து போகுமே - யாரும்

நூறு பட்டம் பெற்ற பின்னும்

நூல் மறந்தால் சோகமே!

- ஆத்தூர் சுந்தரம், சேலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x