

சிட்டுக் குருவி என்றொரு
சிறிய குருவி இருந்ததாம்
பட்டுச் சிறகை விரிக்குமாம்
விட்டு விட்டு பறக்குமாம்!
கீச்சு மூச்சு ஒலி யெல்லாம்
கீதமாக இருக்குமாம்
பாய்ச்சும் வரப்பு நீரிலே
பாய்ந்து பாய்ந்து குளிக்குமாம்!
இடை விடாத முயற்சி என்று
இங்கும் அங்கும் பறக்குமாம்
தடைகள் முடிந்து கிடைக்கும் இரையை
தவிக்கும் வாயில் திணிக்குமாம்
அம்மா அப்பா பார்த்தது
அத்தை எனக்கு சொன்னது
சும்மா சும்மா தேடுறேன்
சிட்டுக் குருவி வரலையே!
எப்படித்தான் இருக்குமோ?
என்று மனசு துடிக்குது
இப்படியா சிட்டுக் குருவி
என்னை ஏங்க வைப்பது?
- நம்பிக்கை நாகராஜன், கோவை