

என். சொக்கன், எழுத்தாளர்
மருத்துவக் காரணங்களுக்காக வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய இந்தச் சூழ்நிலை அனைவருக்கும் புதிதுதான். சமூக விலங்காகிய நமக்கு ஓரிடத்திலேயே அடைபட்டிருப்பது சிரமம்தான் என்றாலும் நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வதும் சாத்தியம்தான்.
பல ஆண்டுகளாகவே, Remote Working எனப்படுகிற, எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றுவதற்கான தொழில்நுட்பங்கள் நன்கு வளர்ந்திருக்கின்றன. பணிகளை உட்கார்ந்த இடத்திலிருந்தே செய்வதற்கான வாய்ப்புகள் மிகுந்துள்ளன. அதனால் வீடிலிருந்தே வேலை செய்துகொண்டிருக்கிறேன்.
இணையம் மிகப் பெரிய கல்விக்கூடம். எல்லாத் தலைப்புகளிலும் எல்லாவிதமான கற்றல் கருவிகளும் (வீடியோக்கள், பயிற்சித்தாள்கள், வல்லுனர்களுடன் உரையாடல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள்) அங்கு குவிந்துள்ளன. துறை எதுவானாலும் அதற்கென்று ஒரு கற்றல் பாடத்திட்டத்தை உருவாக்கிக்கொண்டு என்னை முன்னேற்றிக்கொள்கிறேன்.
ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் மனம், உடல் இரண்டும் சோர்வடையும். அதனால் அவ்வப்போது அறையைச் சுற்றி நடக்கிறேன். சிறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறேன். சமையல் செய்கிறேன். வீட்டு வேலைகளைச் செய்கிறேன். அரட்டையடிக்கிறேன்.
ஊரடங்கால் மிகப் பெரிய நன்மை, நம் தேவைகள் மிகக் குறைவு என்ற புரிதல் வந்திருக்கிறது. ஆங்கிலத்தில் இதை Minimalism என்கிறார்கள், குறைவான வளங்களைப் பயன்படுத்தி நிறைவாக வாழ்வது. ஊரடங்கின்போது கட்டாயமாக இதைப் பின்பற்றினாலும், அந்தப் பழக்கத்தைக் கூர்ந்து கவனித்தால், வழக்கமான நிலை திரும்பிய பிறகும் ஆடம்பரங்களைவிட முயலலாம் என்று தோன்றுகிறது.