

மிது கார்த்தி
காந்தத்தோடு இரும்புப் பொருட்கள் ஒட்டிக்கொள்ளும் என்பது உங்களுக்குத் தெரியும். காந்தம் அல்லாத இரு பொருட்களை உங்களால் ஒட்ட வைக்க முடியுமா? ஒரு சோதனையைச் செய்வோமா?
என்னென்ன தேவை?
காந்தம்
ஊக்கு - 2
எப்படிச் செய்வது?
* காந்தத்தின் முனையை ஓர் ஊக்கால் தொடுங்கள். இப்போது அந்த ஊக்கு காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும்.
* இரண்டாவது ஊக்கை எடுத்து, காந்தத்தில் ஒட்டிய ஊக்கில் தொடுங்கள். அந்த ஊக்கும் ஒட்டிக்கொள்ளும்.
* இரண்டு ஊக்குகளும் காந்த முனையோடு சேர்ந்து தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
* காந்தத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கு முதல் ஊக்கைத் தனியாக எடுங்கள்.
* இப்போது நடப்பதைக் கவனியுங்கள். காந்தத்திலிருந்து ஊக்கை எடுத்த பிறகும் இரண்டு ஊக்குகளும் ஒட்டிக்கொண்டு தொங்குவதைக் காணலாம். இதற்கு என்ன காரணம்?
காரணம்
இரும்புப் பொருட்களைக் காந்தவிசை ஈர்க்கும். ஊக்கு இரும்புத் தன்மையுடன் இருப்பதால், காந்தத்தில் முதல் ஊக்கைத் தொட்டதும் ஒட்டிக்கொள்கிறது. காந்தத்தின் தன்மை ஊக்குக்குப் பரிமாற்றம் அடைந்துவிடுகிறது.
எனவே அந்த ஊக்கு காந்தத் தன்மையைப் பெறுகிறது. அதனால், இரண்டாவது ஊக்கை முதல் ஊக்குடன் தொடும்போது, காந்தத்தன்மையுடன் உள்ள முதல் ஊக்கு அதை ஈர்த்துவிடுகிறது. அதனால், இரண்டாவது ஊக்கு முதல் ஊக்கோடு ஒட்டிக்கொள்கிறது.
காந்தத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் முதல் ஊக்கை நீக்கிய பிறகு இரண்டு ஊக்குகளும் ஒட்டிக்கொண்டு இருந்தன அல்லவா? அதற்கு காந்த விளைவே காரணம். அதாவது, காந்தத்துடன் தொடர்பில் இருந்ததால், ஊக்கு காந்தத் தன்மையைப் பெற்று ஒரு காந்தத்தைப் போலச் செயல்படுகிறது.