Published : 11 Dec 2019 12:46 PM
Last Updated : 11 Dec 2019 12:46 PM

கதை: சூரியன் கொடுத்த பரிசு!

மு. சுகாரா

சுந்தரவனக் காட்டில் இரண்டு புள்ளிமான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இரண்டும் இணைபிரியாத நண்பர்களாகத் திகழ்ந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் சென்றன. ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் வெளியே செல்ல முடியவில்லை. நீண்டநேரம் குகைக்கு அடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தன. திடீரென்று இரண்டு மான்களுக்கும் பசி எடுக்க ஆரம்பித்தது. அப்போது மழை நின்றது.

இரண்டு மான்களும் வெளியே வந்தன. மழை வருமா என்று வானத்தைப் பார்த்தன. அப்போது மேகத்துக்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், “இன்னும் மழை வருமா?” என்று கேட்டன. அதற்குச் சூரியன், “நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்?” என்று மான்களைப் பார்த்துச் சிரித்தது.

“எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய்?” என்றது ஒரு மான். “நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அதுதான் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்?” என்று கேட்டது சூரியன். “என் பெயர் கிவி, இவன் பெயர் நிவி. நாங்கள் இருவரும் நண்பர்கள்” என்றன புள்ளிமான்கள்.
“சரி, உங்களில் யார் திறமையானவர்?” என்று கேட்டது சூரியன்.

“நாங்கள் இருவருமே திறமையானவர்கள்தான்!” சூரியன் சற்று யோசித்துவிட்டு, “சரி, அப்படி என்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் யார் அந்த மரத்தை முதலில் தொடுகிறாரோ அவர்தான் திறமையானவர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு நான் ஒரு பரிசு தருவேன்” என்றது. நிவியும் கிவியும் பார்த்துக்கொண்டன.

“என்ன யோசனை? ஓடுகிறீர்களா, இல்லையா?” என்று கேட்டது சூரியன். “ஓடுவது என்றால் எங்களுக்குக் கொண்டாட்டம். நாங்கள் தயார்” என்று இரண்டு மான்களும் ஒரே குரலில் கத்தின. “ஓட ஆரம்பிக்கலாம்” என்றது சூரியன். கிவியும் நிவியும் போட்டிப் போட்டுக்கொண்டு வேகமாக ஓடின. இதில் யார் வெற்றி பெறப் போகிறார் என்று கணிக்க இயலவில்லை. இரண்டும் மரத்தை நெருங்கின. ஆனால், மரத்தைத் தொடாமல் நின்றுகொண்டிருந்தன.

சூரியனுக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன் இருவரும் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டது. “என் நண்பன் நிவி பரிசை வெல்லட்டும்” என்றது கிவி. “இல்லை இல்லை, கிவி பரிசை வெல்லட்டும்” என்றது நிவி. சூரியனுக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

“அழகான புள்ளிமான்களே, உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் ஒற்றுமையச் சோதித்துப் பார்க்கவே யார் திறமையானவர் என்று கேட்டேன். இருவரும் திறமையானவர் என்று சொல்லிவிட்டீர்கள். பிறகு பரிசு தருவதாகச் சொல்லி, இந்தப் போட்டியை வைத்தேன். இதிலும் நீங்கள் இருவரும் ஒற்றுமையைக் காட்டிவிட்டீர்கள். நீங்கள் இருவரும் எப்போதும் இதே மாதிரி ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

உங்கள் ஒற்றுமைக்குப் பரிசாக, வானவில்லைத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போது ‘வானவில்லே வருக’ என்று சொன்னால் போதும். அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப் பார்த்து ரசிக்கலாம்” என்று சொல்லிவிட்டுச் சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றுக்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரவழைத்து ரசித்துக்கொண்டிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x