Last Updated : 28 May, 2014 01:31 PM

 

Published : 28 May 2014 01:31 PM
Last Updated : 28 May 2014 01:31 PM

மர உச்சியில் சொர்க்கம்

என் வீட்டில் ஒரு தென்னை மரம் காய்த்தது. ஆனால் அதில் தேங்காய் குலைக்குப் பதிலாக, ஆச்சரியமளிக்கும் வகையில் மாங்காய் கொத்தாகக் காய்த்திருந்தது. மாங்கொத்தில் பதினோரு மாங்காய்கள் இருந்தன. ஆனால், மரத்திலிருந்த ஆந்தைகள் மாங்காய்களைத் தின்றுவிட்டன. அதனால் மாங்கொட்டைகளை எடுத்துக் குளத்தில் நட்டு வைத்தேன்.

பதினோரு மாங்கொட்டைகளும் சேர்ந்து ஒன்றாகி, ஒரு பலாக் கொட்டையாக மாறிவிட்டன. பலாக் கொட்டையிலிருந்து ஒரு பாக்கு மரம் முளைத்தது. ஒரே நாளில் பாக்கு மரம் பெரிதாக வளர்ந்தது. மரத்தின் உச்சியே கண்ணுக்குத் தெரியவில்லை. அம்மாம் உயரம்! மரத்தில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. ‘என் மீது ஏறினால், சொர்க்கம் போகலாம்'. அடடே!

நான் மரத்தின் மீது தாவி ஏறினேன். வேகமாக மேலே ஏறிவிட்டேன். அப்போது பாக்கு மரத்தின் உச்சி தெரிந்தது. கீழே பார்த்தேன். பூமியே தெரியவில்லை. மேலே பார்த்தால் பாக்கு மரத்தில் நெல்லிக் காய்கள். ஒவ்வொரு நெல்லிக் காயும் ஒரு ரத்தினம் போலிருந்தது.

வலது பக்கத்தில் ஒரு இடம் தெரிந்தது. அங்கே போவதற்குப் பாக்கு மரத்தின் உச்சியில் ஒரு பாலம் இருந்தது. நான் பாலத்தைக் கடந்து, அந்த இடத்தை அடைந்தேன். அங்கே கண்களால் அளவிட முடியாத அகலத்துடன் ஒரு நதி ஓடிக் கொண்டிருந்தது. அந்த நதியில் ஒரு வண்டி இருந்தது. அந்த வண்டியில் நான்கு தேனீக்களைப் பூட்டியிருந்தார்கள். வண்டி ஓட்டியது ஒரு பெருச்சாளி.

நான் வண்டியில் ஏறி அமர்ந்தேன். பெருச்சாளி சாட்டையால் தேனீக்களை அடித்தது. தேனீக்கள் வண்டியை இழுத்துக்கொண்டு நதியைக் கடந்தன.

நான் எதிர்க்கரையில் இறங்கினேன். அங்கே சிவப்பு நிறத்தில் ஒரு வயல். அதில் பச்சை மிளகாய் நிறைந்து இருந்தது. ஒவ்வொரு பச்சை மிளகாயும் ஒரு அடி நீளம். பச்சை மிளகாயை அன்னப் பறவைகள் கொத்தித் தின்று கொண்டிருந்தன.

“பரவாயில்லையே! காரத்தை இஷ்டப்பட்டு தின்கின்றன அன்னங்கள், ஆச்சரியமா இருக்கு” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஒரு அன்னப் பறவை ஒரு மிளகாயைக் கொத்தி எடுத்து, என்னிடம் நீட்டியது. பிறகு, “கொஞ்சம் சாப்பிட்டுப் பாரேன்” என்றது.

மரியாதைக்காக மிளகாயை வாங்கினேன். சந்தேகத்தோடு ஒரு நுனியில் லேசாகக் கடித்தேன். அட, சர்க்கரையைப் போல என்ன ஒரு இனிப்பு! நான்கு மிளகாய்களைத் தின்று தீர்த்தேன்.

பின்னர் வயலைத் தாண்டி, கடைவீதிக்கு வந்தேன்.இதற்கிடையில் தாகம் அதிகமாகிவிட்டது. நிறைய இனிப்பு சாப்பிட்டாச்சில்லியா? கடைவீதியில் ஒரு கடை. ‘இங்கே குடிப்பதற்கு காற்று விற்கப்படும்' என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. கடைக்குள் சென்றேன்.

கடைக்காரன் ஒரு ஓணான். பல வண்ணமுள்ள பலூன்கள் அங்கே தொங்கிக் கொண்டிருந்தன. ஓணான், ஒரு பச்சை பலூனை அவிழ்த்துக் கொடுத்தது. நான் பலூன் காற்றைக் குடித்தேன். காற்று தொண்டையின் வழியாக வயிற்றில் இறங்கியது. இளநீரின் குளுமையும் இனிப்பும் அதற்கு இருந்தது.

பின்பு ஆரஞ்சு காற்றைக் குடித்தேன். கடைசியில் எலு மிச்சைக் காற்றையும் குடித்தேன். பிறகு இரண்டு ரூபாயை எடுத்துக் கொடுத்தேன். ஓணான், “காற்று குடிக்கிறவர்கள் பணம் கொடுக்கவேண்டியதில்லை. பணம் வாங்கிக் கொள்ள வேண்டும். அதுதான் இங்கே வழக்கம்” என்று சொல்லி ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்தது.

நான் கடையிலிருந்து இறங்கி நடந்தேன். ஒரு திருப்பத்தை அடைந்தேன். ‘நரகத்திற்குப் போகும் வழி' என்று எழுதப்பட்டிருந்தது. அந்த வழியே நடந்து போனேன். அங்கே ஒரு ராட்சசன் நின்று கொண்டிருந்தான். ராட்சசன் என்னை உயரே தூக்கினான். குகை மாதிரி இருந்த வாயைத் திறந்தான். என்னை உள்ளே போட்டு வாயை மூடினான்.

என்னைச் சுற்றிலும் ஒரே கும்மிருட்டு. தட்டுத் தடுமாறி முன்னால் போனேன். தூரத்தில் ஒரு வெளிச்சம். அதைப் பார்த்துக்கொண்டே நான் போனேன்.வெளிச்சம் பெரிதாகிக்கொண்டே வந்தது. அது ராட்சசனுடைய காது. அந்தக் காது வழியே தோளில் நான் இறங்கினேன். கையில் தொங்கி கீழே நிலத்தில் குதித்தேன்.

அங்கே எட்டடி நீளத்துக்கு ஒரு புழு கிடந்தது.“நான் உனக்கு நரகத்தை காண்பிக்கிறேன்” என்று புழு சொன்னது. பிறகு என்னை மேலே ஏற்றிக்கொண்டு பறந்து சென்றது. ஒரு நெருப்புக்கோட்டைக்கு அழைத்துச் சென்றது.

புழு, நெருப்புக்கோட்டையைத் தாண்டிச் சென்றது. அங்கே ஒரு பெரிய மைதானம். மைதானத்தில் கார்மேகங்கள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. கார்மேகங்களின் பின்னால் கழுகுகள் ஓடின. கழுகுகள் பாட்டு வேறு பாடின. புழுவும் நானும் பாட்டைக் கேட்டோம். முன்னால் குனிந்து புழுவிடம்,”நரகத்துக்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு?”என்று கேட்டேன்.

புழு, “ரொம்பத் தூர மில்லை... கொஞ்சதூரம்தான்...” என்று சொன்னது. திடீரென எனக்கு வீட்டு ஞாபகம் வந்துவிட்டது. “புழுவே! நரகத்தைப் பார்ப்பதற்கு இன்னொரு தடவை வாரேன்... இப்போ வீட்டுக்குப் போகணும்” என்று சொன்னேன். அதற்குப் புழு, “இதோ, ஒரு வழி செய்றேன்...” என்றது.

பின்பு ஒரு குழலை எடுத்து ஊதியது. உடனே ஒரு தவளை வந்தது. வரும்போது ஒரு பீரங்கியையும் அது உருட்டிக்கொண்டு வந்தது. தவளை என்னிடம், “பீரங்கிக்குள்ளே ஏறு!” என்றது. நான் உள்ளே ஏறினேன். பயங்கரமான ஒரு சத்தம்! பீரங்கியின் வாயிலிருந்து பாய்ந்து, நான் காற்றில் பறந்துகொண்டிருந்தேன். எரிநட்சத்திரக் கல்லைப் போல வேகமாகப் பறந்தேன். ஒரு மணி நேரம் கழித்து நிலத்தில் இறங்கினேன். பார்த்தால் எங்கள் வீட்டு முற்றம்!

தலையைத் திருப்பி வானில் ஒரு வானவில்லைப் பார்த்தேன். அதில் ஒரு வாசகம் தெரிந்தது. 'சொர்க்கமும் நரகமும் பூமியில்தான் இருக்கின்றன.'

(மலையாளத்தில் மாலி எழுதிய கதையைத் தழுவி எழுதப்பட்டது)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x