செடிகள் பேசிக்கொள்ளுமா?

செடிகள் பேசிக்கொள்ளுமா?
Updated on
1 min read

மனிதர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் பேசித் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறோம் இல்லையா? விலங்குகளும்கூடக் குரலை எழுப்பிச் சொல்ல விரும்பும் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. மனிதர்கள், விலங்குகள் போல செடி, கொடிகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளுமா?

செடிகள் பேசிக்கொள்ளும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை. செடிகள் தங்களுக்குள் வேதியியல் மொழியில் பேசிக்கொள்கின்றன. வாசனையைப் பயன்படுத்தி அவை தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்தை எளிதாகச் செய்கின்றன.

சில செடிகள் நூறு வேதியியல் வார்த்தைகளுக்கு மேல் தெரிந்துவைத்திருக்கின்றனவாம். என்ன, ஆச்சரியமாக இருக்கிறதா? செடிகள் அந்த வேதியியல் வார்த்தைகளைப் பூச்சிகளைப் பற்றித் தெரிவிக்கவும், ஏதாவது உதவிக்கு அழைக்கவும் பயன்படுத்துகின்றன.

உதாரணத்துக்கு, ஒரு கம்பளிப்பூச்சி மக்காச்சோளத்தைச் சாப்பிட்டால், செடியில் இருக்கும் குளவிகளுக்குப் புரியும்படி ‘எச்சரிக்கை வேதிப்பொருட்களை’ அந்தச் செடி வெளியிடும். எச்சரிக்கை கிடைத்தவுடன் அச்செடியின் குளவிகள் கம்பளிப்பூச்சிகள் மீது முட்டையிடும்.

இது கம்பளிப்பூச்சிகளை உடனடியாக அழித்துவிடும். தக்காளிகளைச் சாப்பிடும் கம்பளிப்பூச்சிகளை அழிப்பதற்காகத் தக்காளிச் செடிகள் நச்சுகளை வெளியிடுகின்றன. அத்துடன், பிற செடிகளையும் வாசனை மூலம் எச்சரிக்கும். அதே மாதிரி, சில மூலிகைச் செடிகளில் இருக்கும் முக்கியமான எண்ணெய்களும்கூடத் தகவல்களைப் பரிமாற உதவுகின்றன.

இவை மகரந்தச் சேர்க்கைக்கான பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். ஆனால், மற்ற பூச்சிகளை வரவேண்டாம் என்று சொல்லித் தடுக்கும்.

இனிமேல், செடிகள் பேசுமா என்று யாராவது கேட்டால், தைரியமாகப் பதில் சொல்லுங்கள் ‘செடிகள் பேசும்’ என்று.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in