வாழ்க்கை வரலாறு: பொறுமையும் பொறுப்பும்

வாழ்க்கை வரலாறு: பொறுமையும் பொறுப்பும்
Updated on
1 min read

விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின்னரே மின்சார பல்பைக் கண்டுபிடித்தார். ஆனால், வெற்றிக்குப் பின்னர் அந்த ‘பல்பு’ எடிசன் உதவியாளரால் உடைத்து நொறுக்கப்பட்டது. அப்போது எடிசன் எப்படி நொந்து போயிருப்பார்?

அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் எடிசன் பொறுமையுடன் நடந்து கொண்ட சுவாரஸ்யமான சம்பவம் இது.

தனது நண்பர்களுக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் மின்சார பல்பை ஒளிர வைத்துக் காட்டுவதற்காக எடிசன், ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அவரது ஆய்வகத்தின் மேல் தளத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

எடிசன், தனது உதவியாளரை அழைத்து மின்சார பல்பை மேல் தளத்துக்குக் கொண்டு வரச்சொன்னார். பல்பை கொண்டு வரும்போது, அது கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டது. அங்கிருந்த எல்லாருமே அதிர்ச்சி அடைந்தார்கள். உதவியாளர் பதற்றம் அடைந்தார். ஆனால், எடிசன் சற்றும் திகைக்கவில்லை.

ஆயிரம் தோல்விகளைச் சந்தித்து வெற்றி கண்ட அவருக்கு, மின்சார பல்பை மீண்டும் உருவாக்குவது எளிதாக இருந்தது. சிறிது முயற்சி செய்து ஒரு பல்பை திரும்பவும் உருவாக்கினார். அதனை மீண்டும் அந்த உதவியாளரிடமே கொடுத்து மேலே எடுத்துவரச் சொன்னார்.

- எடிசன் கண்டுபிடித்த விளக்கு

பல்பை கீழே போட்டு உடைத்தவனிடமே மீண்டும் அந்த வேலையைக் கொடுக்கிறீர்களே? என்று சிலர் எடிசனிடம் கேட்டேவிட்டனர்.

அதற்கு, “பல்பு உடைந்தாலும் என்னால் திரும்பவும் செய்துகொள்ள முடியும். ஆனால், அவரது மனதை காயப்படுத்திவிட்டால் அதை என்னால் சரிசெய்து கொடுத்துவிட முடியுமா? அதனால்தான் திரும்பவும் அவனிடமே பணியைக் கொடுத்தேன். அவர் தனது பொறுப்பையும், எனது நம்பிக்கையும் உணர்ந்து கூடுதல் கவனத்துடன் பணிபுரிவார்” என்றார்” எடிசன்.

எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்த பொறுமை உணர்ச்சி எல்லையை அப்போதுதான் மற்றவர்கள் முழுமையாக உணர்ந்தார்கள். குழந்தைகளே! உங்களுக்கு எந்த அளவுக்கு பொறுமை உண்டு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in