Last Updated : 02 Nov, 2016 10:57 AM

 

Published : 02 Nov 2016 10:57 AM
Last Updated : 02 Nov 2016 10:57 AM

தினுசு தினுசா விளையாட்டு: அடிச்சிக்க, புடிச்சிக்க... கல்லுப்பந்து..!

குழந்தைகள் விளையாடும்போது மட்டும் நேரம் போவதே தெரிவதில்லை என்கிறார்களே… ஏன்? எப்போதும்போல காலம் ஒரே சீராய்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. எதையும் மனம் ஒன்றி, ஆர்வமாக செய்யும்போது நேரம் போவதே நமக்குத் தெரிவதில்லை. அவ்வளவுதான்.

விளையாட்டுக்கு மட்டுமல்ல; ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் செய்யும் எந்தச் செயலுக்கும் இது பொருந்தும். பாருங்க, உங்களுடன் பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. சரி… சரி… வாங்க விளையாடப் போகலாம்.

‘அடிச்சிக்க, புடிச்சிக்க… கல்லுப்பந்து..!’

இதுத்தான் இந்த வாரம் நாம் விளையாடப் போகும் விளையாட்டு.

இந்த விளையாட்டை எத்தனைப் பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். விளையாடுபவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்துகொள்ள வேண்டும். குழுவாக பிரிவதற்கு ‘சாட் பூ திரி’ போடலாம். அப்படியில்லையென்றால் ‘உத்திப் பிரித்தல்’ மூலமாகவும் பிரிக்கலாம். இன்னொரு முறையும் இருக்கிறது.

‘பூவா… தலையா…!’

இந்த முறையில் குழு பிரிக்க, நம் கையில் ஒரு காசை (நாணயம்) மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.

“உனக்கு பூ வேணுமா..? தலை வேணுமா..?” என்று கேட்க வேண்டும்.

இதில், ஏதாவது ஒன்று வேண்டும் என கேட்பார்கள். உதாரணத்துக்கு, “எனக்கு பூ வேண்டும்” என்று கேட்ட பிறகே, கையைத் திறக்க வேண்டும். இப்போது உங்கள் கையிலுள்ள நாணயத்தில் பூ பகுதி மேலிருந்தால், கேட்டவர் குழுவுக்குச் சென்று விடவேண்டும். நாணயத்தில் தலை இருந்தால், அடுத்த குழுவுக்குச் சென்றுவிட வேண்டும். இப்படி இரு குழுக்களாகப் பிரிந்த பிறகு, விளையாடத் தொடங்கலாம்.

எப்படி விளையாடுவது?

# முதலில் ஒரு செங்கல்லைச் செங்குத்தாக நிற்க வைத்துக்கொள்ளுங்கள்.

# இரண்டு குழுவும் செங்கல்லை விட்டு இருபது அடி தொலைவில் நிற்க வேண்டும்.

# கையில் வைத்திருக்கும் ரப்பர் பந்தால், அங்கிருந்தே குறி பார்த்து, செங்கல்லை அடிக்க வேண்டும். இரு குழுவிலிருந்தும் ஒவ்வொருவராக மாறி மாறி முயற்சிக்க வேண்டும்.

# எந்தக் குழுவைச் சேர்ந்தவர் முதலில் செங்கல்லை அடித்தாரோ, அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செங்கல்லைச் சுற்றி வட்டமாக நிற்க வேண்டும். அனைவரும் தோளோடு தோள் சேர்ந்து நெருக்கமாக இருக்க வேண்டும்.

# வெளியே இருக்கும் மற்றொரு குழுவுக்குத் தெரியாத வகையில், அவர்களிடமிருக்கும் ரப்பர் பந்தொன்றை யாராவது ஒருவர் கையில் மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

# பிறகு, குழுவிலுள்ள அனைவரின் கையிலும் பந்து இருப்பது போல பாவனையில், அனைவரும் வெறுமனே கையை மூடி, சட்டைக்குள் கையை மறைத்து வைத்துகொள்ளுங்கள்.

# ஒருவர் மட்டும் செங்கல்லுக்குக் காவலிருக்க, மற்றவர்கள் அடுத்த குழுவை விரட்டிச் செல்ல வேண்டும். யார் கையில் பந்து இருக்கிறது என்பது தெரியாமல், அந்தக் குழுவினர் பயந்து ஓடுவார்கள். பந்து வைத்திருப்பவர் எதிர் குழுவிலுள்ள யாரையாவது பந்தால் அடித்துவிட்டால் அவர் ‘அவுட்’.

இப்படி ஒவ்வொருவராக ‘அவுட்’ செய்ய வேண்டும். இதற்கிடையில், அந்தக் குழுவிலிருந்து யாராவது செங்கலைத் தொட வருவார்கள். அவர்களைத் தொட விடாமல் தடுக்க வேண்டும். மீறித் தொட்டுவிட்டால், மீண்டும் ஆட்டத்தை முதலிலிருந்து தொடங்கி ஆடலாம்.

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x