Last Updated : 26 Apr, 2017 08:23 AM

 

Published : 26 Apr 2017 08:23 AM
Last Updated : 26 Apr 2017 08:23 AM

தினுசு தினுசா விளையாட்டு: ஓடாதே நில்!

விளையாடுவதற்குக் கூட எங்கேயும் வெளியே செல்லாமல், எப்போதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து படித்துக்கொண்டே இருக்கும் குழந்தைகளிடம் சற்றே மந்தமான நிலை காணப்படும். இதனால், அவர்கள் உடலில் தேவையற்ற கொழுப்புச் சத்து கூடுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது.

மனித உடலில் இருக்கும் கொழுப்புச் சத்து இரு வகைப்படும். ஒன்று, எச்.டி.எல்; மற்றொன்று எல்.டி.எல். இதில், எச்.டி.எல் வகை கொழுப்பினால் எந்தத் தீங்கும் கிடையாது. எல்.டி.எல் வகை கொழுப்பு கூடுவது இதயத்துக்கு நல்லதல்ல. மேலும், ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் பொருளையும் இவ்வகைக் கொழுப்பு உருவாக்குகிறது. எச்.டி.எல் வகை நல்ல கொழுப்பு நம் உடலில் அதிகரிக்க வேண்டுமானால் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியாக அமைபவை அவர்களது விளையாட்டுகளே.

‘ஓடாதே நில்..!’. இதுதான் நாம் இந்த வாரம் விளையாடப் போகும் விளையாட்டு.

விளையாட்டுன்னு சொல்லிட்டு, இப்படி ‘ஓடாதே நில்…’என்று சொல்வது சரியான்னுதானே கேட்கிறீங்க? இந்த விளையாட்டின் பெயர்தான் அப்படி. இதில், உடலுக்குப் புத்துணர்வு தரும் வகையான செயல்களும் இருக்கின்றன.

பத்து முதல் பதினைந்து குழந்தைகள் வரை இந்த விளையாட்டைச் சேர்ந்து விளையாடலாம். இருபால் குழந்தைகளும் ஒன்றாக சேர்ந்து விளையாடும் விளையாட்டிது.

‘சாட், பூட், திரி…’ மூலமாக இந்த விளையாட்டின் முதல் போட்டியாளரைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

விளையாடும் மைதானத்தின் நடுவில் ஐந்தடி சுற்றளவில் ஒரு வட்டமொன்றை வரைந்துகொள்ள வேண்டும். அந்த வட்டத்தின் நடுவில் முதல் போட்டியாளர் நின்றுகொள்ள வேண்டும். விளையாட்டில் பங்கேற்கும் அனைவரும் வட்டத்தைச் சுற்றி நிற்பார்கள்.

முதல் போட்டியாளர் தன் கையிலுள்ள பந்தை, வட்டத்துக்குள் நின்றபடியே, மேல்நோக்கித் தூக்கி வீச வேண்டும். அவர் மேல் நோக்கி வீசியதும், வட்டத்தைச் சுற்றி நிற்பவர்கள் அனைவரும் கலைந்து, வட்டத்தை விட்டுத் தூரமாக ஓடத் தொடங்குவார்கள்.

போட்டியாளர் பந்தை வீசும்போதே, விளையாட்டில் உடன் பங்கேற்றிருப்பவர்களில் யாராவது ஒருவரின் பெயரைச் சத்தமாகச் சொல்ல வேண்டும்.

போட்டியாளர் யார் பெயரைச் சொன்னாரோ, அவர் மட்டும் வட்டத்தை விட்டு விலகி ஓடாமல், வேகமாய் வட்டத்துக்குள் வந்து, போட்டியாளர் மேலே வீசிய பந்தைப் பிடிக்க வேண்டும்.

அவர் பந்தைப் பிடித்த அடுத்த நொடியே ‘ஓடாதே நில்…’ என்று குரல் கொடுப்பார். ஓடியவர்கள் அனைவரும் அவரது குரல் கேட்டதும் அப்படியே அந்தந்த இடத்தில் நின்றுவிட வேண்டும்.

இப்போது பந்தைப் பிடித்தவர், நிற்பவர்களில் யாரையாவது குறி பார்த்துப் பந்தை வீச வேண்டும். நிற்பவர்கள் பந்து தன்மேல் பட்டுவிடாமல் குனிந்து வளைந்துகொள்ளலாம். ஆனால், தன் இடத்தை விட்டு மட்டும் நகரவே கூடாது. பந்து யார் மேலாவது பட்டுவிட்டால், அவர் ‘அவுட்’ ஆவார். ‘அவுட்’ஆனவர் அடுத்த போட்டியாளராக மாறி, வட்டத்துக்குள் வந்து, பந்தை மேல்நோக்கி வீச வேண்டும்.

கொஞ்சம் நேரம் நிற்பதும், பிறகு ஓடுவதும், அப்புறம் பந்து மேலே பட்டு விடாமல் குனிந்து வளைந்து கொள்வதுமென மிகுந்த உற்சாகத்தைத் தருகிற விளையாட்டுகளுள் இதுவும் ஒன்று.

(இன்னும் விளையாடலாம்..!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x