Last Updated : 05 Mar, 2014 12:00 AM

 

Published : 05 Mar 2014 12:00 AM
Last Updated : 05 Mar 2014 12:00 AM

குட்டி அரக்கனின் கதை

காட்டில் வசிக்கிற அரக்கன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா? அந்த அரக்கன் மனுஷனையெல்லாம் பிடிச்சுச் சாப்பிட்டுவிடும் என்றெல்லாம் பயமுறுத்தி இருப்பாங்க.

ஆனால், இந்தப் படத்தில் அமெரிக்காவில் ஒரு காட்டுக்குள்ள ஷ்ரெக் என்று ஒரு குட்டி அரக்கன் தனியாக வசித்து வருகிறது. இந்த அரக்கன், பயங்கரமான விலங்கு அல்ல. நம்ம வீட்டில் இருக்கிற புசுபுசு கரடி பொம்மை மாதிரிதான் இருக்கிறது. ஒரு பெரிய மரத்துக்குக் கீழே வீடு கட்டி, வாழ்ந்துவருகிறது.

காலை எழுந்ததும் யானை மாதிரி ஜாலியாக ஒரு சேற்றுக் குளியல். அப்புறம் வீட்டைச் சுற்றி இருக்கிற பூச்சிகளைப் பிடிச்சு சாப்பிட்டுவிட்டு நல்ல தூக்கம் போடுகிறது ஷ்ரெக். இப்படி இந்தக் குட்டி அரக்கனின் வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்தது.

விலங்குகளை வெறுக்கும் அரசன்

ஒரு நாள் காட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் டூலோஸ் நாட்டு அரசனின் படை வீரர்கள் ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் ஷ்ரெக்கைப் பிடிச்சுட்டுப் போக வந்துவிட்டார்கள். டூலோஸ் நாட்டோட அரசன் ஃபாக்காடுக்கு விசித்திரமான விலங்குகள் என்றால் பெரிய வெறுப்பு. அவற்றையெல்லாம் பிடிக்க உத்தரவிட்டிருந்தான். ஷ்ரெக்கும் பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தது என்பதால், அதையும் பிடிக்க வீரர்களை அனுப்பியிருந்தான் அரசன்.

ஆனால், ஷ்ரெக் மனுஷங்களைவிட மூணு மடங்கு பெரிய உருவம் கொண்டது. வந்த வீரர்கள், ஷ்ரெக்கின் சத்தத்தைக் கேட்டே பயந்து ஓடிவிட்டார்கள். ஷ்ரெக் சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் போய் வழக்கம்போல் தூங்கிவிடுகிறது.

அரசன் ஃபாக்காடின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசனுக்குப் பயந்து மக்கள் எல்லாம் தங்களிடம் உள்ள பேசும் கழுதை, பேசும் பொம்மை, பேசும் கரடி, பேசும் பிஸ்கட் போன்ற விசித்திரமான விலங்குகளையெல்லாம் அரசனிடம் ஒப்படைத்து வந்தனர். அப்படி மாட்டிக்கொண்ட பேசும் கழுதை, அந்த வீரர்களிடம் இருந்து தப்பித்துக் காட்டுக்குள் ஓடிவருகிறது. காட்டில் ஷ்ரெக்கின் பின்னால் ஒளிந்துகொள்கிறது. ஷ்ரெக்குக்குப் பயந்து வீரர்கள் ஓடிவிடுகிறார்கள்.

பேசும் கழுதை, ஷ்ரெக் கூடவே பிடிவாதமாக வந்துவிடுகிறது. ஷ்ரெக் தனிமை விரும்பி என்பதால் கழுதை கூட இருப்பதை விரும்பவில்லை. கடைசியாக, ‘சரி, இருந்து தொலையட்டும்’ எனக் கழுதையை வெளியே தங்கச் சொல்லிவிட்டு ஷ்ரெக் உள்ளே சென்று கதவைப் பூட்டிக்கொள்கிறது.

இரக்க குணமுள்ள ஷ்ரெக்

ஆனால், கழுதை வெளியே இருந்து புலம்பிக்கொண்டு இருக் கிறது. எரிச்சல் அடையும் ஷ்ரெக் வெளியே வந்து கதவைத் திறந்து பார்த்தால், அரசனால் வெறுக்கப்படும் விசித்திரமான உருவ அமைப்பு கொண்ட விலங்குகள் எல்லாமும் ஷ்ரெக்கின் வீட்டு முன்னால் கூடி இருக்கின்றன. ஷ்ரெக் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறது.

கழுதைதான் இந்த விலங்குகளைக் கூட்டி வந்திருக்க வேண்டும் என

நினைத்துக் கழுதையை அடிக்கப் போகிறது. ‘நாங்களாகத்தான் வந்தோம்’என விலங்குகள் எல்லாம் ஒரே குரலில் சொல்கின்றன.

ஷ்ரெக் எல்லோரையும் போகச் சொல்லிக் கத்துகிறது. ஆனால் ‘அரசனிடம் இருந்து, எங்களுக்குப் பாதுகாப்பு பெற்றுத் தந்தால்தான் நாங்கள் போவோம்’என எல்லா விலங்குகளும் சொல்கின்றன.

ஷ்ரெக் பிறப்பால் அரக்கனாக இருந்தாலும் ரொம்பவும் இரக்கக் குணம் கொண்டது. அதனால், வேறு வழியில்லாமல் அரசன் ஃபாக்காடிடம் சென்று, இது பற்றி பேச ஷ்ரெக் கிளம்புகிறது. டூர்ஸ் நாட்டுக்கு வழி காண்பிப்பதற்காகப் பேசும் கழுதையும் கூடப் போகிறது. அரசன் ஃபாக்காடிடம் இருந்து அந்த விசித்திரமான விலங்குகளை ஷ்ரெக் மீட்டானா? அவனுக்குத் தனிமை வாழ்க்கை கிடைத்ததா?

Shrek 1 படம் பாருங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x