Published : 22 Jun 2016 11:55 AM
Last Updated : 22 Jun 2016 11:55 AM

நாட்டுக்கொரு பாட்டு- 11: அண்டை நாட்டின் அழகான கீதம்!

அப்போது ஆங்கிலேயர்கள் அகண்ட இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த காலம். இன்றைய பாகிஸ்தானும், வங்கதேசமும் இந்தியா என்ற ஒரே குடைக்குள் இருந்தன. 1905 ஜூலை 19 அன்று அப்போதைய பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் கர்சன் பிரபு, வங்காளத்தை மதரீதியாகப் பிரித்தார். அதை ‘கிழக்கு வங்காளம்’ என்று தனியாக அறிவித்தார். மக்கள் கொதித்தெழுந்தார்கள். ஊஹூம். ஆங்கிலேய அரசு கேட்பதாக இல்லை. அதே ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி, கிழக்கு வங்காளம் உருவானது.

கவிஞர்

யாருமே ஏற்றுக்கொள்ளாத இந்தப் பிரிவினைக்கு எதிராக நாடே குரல் கொடுத்தது. உலகப் புகழ் பெற்ற வங்கக் கவிஞர் சும்மா இருப்பாரா? வங்காளத்தின் பெருமைகளைப் பாடலாக இயற்றி, இசை வடிவத்துடன் வெளியிட்டார். எதிர்பார்த்தது போலவே, அந்தப் பாடல் பிரபலமானது. அதுவே பின்னர், வங்கதேசத்தின் தேசிய கீதமானது.

யார் அந்தக் கவிஞர்? இந்தியா, இலங்கை நாடுகளின் தேசியக் கீதங்களை இயற்றினாரே, அதே ரவீந்திரநாத் தாகூர்தான்! அவர்தான் வங்கதேசத்தின் தேசிய கீதத்துக்கும் சொந்தக்காரர்!

'பால்' எனும் கலை

இப்பாடல் முதன் முதலில் ‘போங்கோதர்ஷன்' பத்திரிகையில் 1905 செப்டம்பர் இதழில் வெளியானது. சில நாட்களுக்குப் பிறகு கவிஞரின் சகோதரர் சத்யேந்திரநாத் தாகூரின் மகள் இந்திரா தேவி, இப்பாடலுக்கு இசை வடிவம் தந்தார். அப்போது பிரபலமாக இருந்த, ‘பால்' கலைப் பாடகர் ககன் ஹர்காரா அமைத்த ‘அமி கோதே பாபோ தாரே' பாடலின் சாயல்தான் இது.

அறிவிப்பு

இந்தியா சுதந்திரமடைந்தபோது கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. அந்தப் பகுதி கிழக்கு பாகிஸ்தான் என்றழைக்கப்பட்டது. 1971-ம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடானது. அப்போது, தாகூர் எழுதிய பாடலின் முதல் 10 பத்திகள், அந்த நாட்டின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது.

ஆரத்தி

பொதுவாகத் தேசிய கீதம் என்றாலே எப்படி இருக்கும்? வீரம் கொப்பளிக்க, எழுச்சியூட்டும் வகையில் இருக்கும் அல்லவா? இது கொஞ்சம் மாறுபட்டு இருந்தது. தெய்வீக உணர்வுடன் கிட்டத்தட்ட ஒரு ஆரத்தி பாடல் போல இருந்தது. வங்கக் கவிஞரின் நயமான சொற்களும், ரம்மியமான இசையும் இனிமையைக் கூட்டின.

வங்கதேசத்தின் வளத்தைப் பறைசாற்றும் வகையில் இருக்கும் இப்பாடல், எப்படி ஒலிக்கும்?

அமர் சோனார் பாங்க்ளா

அமி தொமாய் பாலோ பாஷி

சிரோதின் தோமர் ஆகாஷ்

தோமார் பாதாஷ்

அமார் ப்ரானே பாஜாய் பாஷி

அமர் சோனார் பாங்க்ளா

அமி தோமாய் பாலோ பாஷி.

ஓ.. மா

ஃபகுனே தோ ரமிர் போனே

க்ரானே பகொல் காரே

மோரி ஹாய்..., ஹாரி ஓ.. மா..

ஓக்ரானே தோர் போரா கேதே

அமி கி தேக்கேச்சி மோதுர் ஹாஸி

அமர் சோனார் பாங்க்ளா

அமி தோமாய் பாலோ பாஷி.

கி ஷோபா கி ச்சாயா கோ

கி ஸ்நேஹோ, கி மாயா கோ

கி ஆச்சோல், பிச்சாயாச்சோ

பாதேர் மூலே,

நோதிர் கூலே கூலே

மா தோர் முகேர் பானி

அமார் கானே லாகே

சுதர் மோதோ

மோரி ஹாய்.. ஹாரி ஓ.. மா..

மா தோர் முகேர் பானி

அமார் கானே லாகே

சுதர் மோதோ

மாதோர் போதோன் கானி மோலின் ஹோலே

அமி நோயோஅன்

ஓ மா அமி நொயோன் ஜோலே பாஸி

சோனார் பாங்க்ளா

அமி தோமாய்.. பாலோ பாஷி.

தமிழாக்கம்

என் பொன்னான வங்காளமே

உன்னை நேசிக்கிறேன்.

நினது வானமும் நினது காற்றும் (கலந்து)

இனிய குழலோசையாய் எமது

இதயத்தில் இசைத்த வண்ணம் உள்ளது.

வசந்தத்தின் தாயே...

மாமரங்களின் வாசம்

ஆனந்தத்தில் திளைக்க வைக்கிறது.

ஆகா! என்ன ஒரு பேரானந்தம்!

வசந்தத்தின் தாயே...

முற்றிய நெல் வயல்களின் சுகந்தம்

முற்றுமாய் எங்கும் விரவிக் கிடக்கிறது.

என்ன அழகு... என்ன குளுமை...

என்ன அன்பு... என்ன கனிவு....

என்ன ஒரு அமைதியை நீ பரவ விட்டுள்ளாய்!

ஆலமரங்களின் காலடியில்...

ஒவ்வொரு நதியின் கரையிலும்....

ஓ.. என்னுடைய தாயே..., நின் திருவாய்ச் சொற்கள்

என் செவிகளுக்கு அமுதம் போன்றது.

ஆகா... என்ன ஒரு பேரானந்தம்!

ஓ... தாயே, வருத்தம்

உன் முகத்தை அண்டுமாயின்,

என் விழிகள் கண்ணீரால் நிரம்பி விடும்.

என் பொன்னான வங்காளமே

உன்னை நான் நேசிக்கிறேன்.

(தேசிய கீதம் ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x