குழந்தைப் பாடல்: ஆலமர ஆந்தை

குழந்தைப் பாடல்: ஆலமர ஆந்தை
Updated on
1 min read

ஆல மரப் பொந்திலே

ஆந்தை ஒன்று இருந்தது!

அது அலறும் சத்தம்கேட்டு

எனக்கு அச்சம் வந்தது!

தீயப் பறவை அதுவென

நான் கேட்டு அறிந்தது

எல்லாம் அவ் வேளையில்

என் நினைவில் வந்தது!

நான் மிரண்டு நிற்பதைக்

கண்டு எந்தன் அருகிலே

அப்பா வந்து சொன்னதும்

உண்மை எனக்குப் புரிந்தது!

மனிதர் பேசும் மொழிபோல

பறவை விலங்கு பேசுதாம்!

ஆந்தை குரலும் அதுபோல

அச்சம் தேவை இல்லையாம்!

இரவில் வந்து ஆந்தையும்

எலிகள் பிடித்து உண்ணுதாம்!

அதனால் எலித் தொல்லையும்

ஊரில் ரொம்ப இல்லையாம்!

உருவம் குரலைப் பார்த்து நாம்

எதையும் ஒதுக்கக் கூடாதாம்!

இந்த உண்மை புரிந்தால்

அதுவே நமக்கு நல்லதாம்!!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in