Last Updated : 14 Jun, 2017 09:51 AM

 

Published : 14 Jun 2017 09:51 AM
Last Updated : 14 Jun 2017 09:51 AM

தினுசு தினுசா விளையாட்டு: ஆடும் முயலும்!

“அய்… பள்ளிக்கூடம் திறந்தாச்சு” என்று குழந்தைகள் எழுப்பும் உற்சாகக் குரல் ஒலிகள் கேட்கின்றன. இனி, தினமும் பள்ளிக்குச் செல்லுதல், பாடங்களைப் படித்தல், வீட்டுப்பாடம் எழுதுதல், சிறப்பு வகுப்புகளுக்குச் செல்லுதல் என மீண்டும் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவீர்கள்.

நீங்கள் எந்த வகுப்பில் படிப்பவராக இருந்தாலும், தினமும் காலை அல்லது மாலை நேரங்களில் ஒரு மணி நேரமாவது விளையாட நேரத்தை ஒதுக்குங்கள். அப்படி விளையாடும்போது உங்கள் உடலும் மனமும் உற்சாகம் பெறும். அதுவும் நண்பர்களோடு சேர்ந்து விளையாடினால், நண்பர்களுக்குள் நல்ல நெருக்கமும் உங்களுக்கிடையே புரிதலும் அதிகமாகும்.

சரி, இந்த வாரம் நாம் என்ன விளையாட்டை விளையாடப் போகிறோம் தெரியுமா? ‘ஆடும் முயலும்’. விளையாடலாமா?

எப்படி விளையாடுவது..?

1. இந்த விளையாட்டை 20 முதல் 30 குழந்தைகள்வரை ஒன்றாகச் சேர்ந்து விளையாடலாம். இருபால் குழந்தைகளும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று.

2. இந்த விளையாட்டில் விளையாடும் குழந்தைகள் எல்லோரும் ‘உத்தி பிரித்து’ சம எண்ணிக்கையில் 2 குழுக்களாகப் பிரிந்துகொள்ளுங்கள். (ஒவ்வொரு குழுவிலும் அதிகபட்சமாக 15 பேர்வரை இருக்கலாம்.)

3. இரண்டு குழுவினரும் இரண்டு நேர்க்கோட்டு வரிசையில் நின்றுகொள்ளுங்கள். இரண்டு குழுவுக்கும் நடுவே 5 அடி இடைவெளி இருக்கட்டும். ஒவ்வொரு குழுவில் உள்ளவருக்கும் பக்கவாட்டில் நேராக மற்றொரு குழு வைச் சேர்ந்தவர் நின்றுகொள்ளுங்கள். இரு குழுவினருக்கும் நேரெதிரே 50 அடி தொலைவில் எல்லைக்கோடு ஒன்றைப் போட்டுக்கொள்ளுங்கள்.

ம்ம்… இனி விளையாட வேண்டியது தானே!

4. முதல் குழுவின் வரிசையில் முதல் ஆளாக நிற்பவர், இரண்டாவது குழுவில் முதல் ஆளாக நிற்பவரைப் பார்த்து, “ஆடா.., முயலா..?” என்று கேட்க வேண்டும். அதற்கு, ‘ஆடு’ என்று பதில் சொன்னால், வேகமாக ஓடிச்சென்று முன்னால் உள்ள எல்லைக்கோட்டைத் தொடுங்கள். பதில் சொன்னவர் உங்களை வேகமாகத் துரத்தி வந்து தொட்டுவிட்டால் நீங்கள் ‘அவுட்’டாகி அவரது குழுவுக்குச் சென்றுவிட வேண்டும்.

5. ‘ஆடு’ என்பதற்குப் பதில், ‘முயல்’ என்று சொல்லிவிட்டால், முயலைப் போல் தாவித் தாவிச் சென்று எல்லைக்கோட்டைத் தொட்டுவிடுங்கள். பதில் சொன்னரும் உங்களைத் தாவித் தாவித் துரத்தி வருவார்.

6. இப்படியாக, இரு குழுவில் உள்ளவர்களும் ஒருவர் மாற்றி, ஒருவர் கேட்டு, பதில் சொல்வதற்கேற்ப எல்லைக்கோட்டைத் தொடுங்கள். இடையில் யாராவது ‘அவுட்’டாகி விட்டால், தொட்டவரின் குழுவுக்குச் சென்றுவிட வேண்டும்.

விளையாட்டின் முடிவில், எந்தக் குழுவில் அதிகம் பேர் இருக்கிறார்களோ அதுவே வெற்றிபெற்ற குழு. இந்த விளையாட்டு உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்குமே!

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x